Pages

Tuesday, 6 January 2015



வண்ணங்கள் மங்கிய ஓவியச்சிதறல் ஒன்றில்
கையசைக்கிறது காலம்....
தீர்ந்துபோகாத வெயில்ப்பொழுதுகள் மீது
நெடுமூச்சின் ஆவி படர
மென்மயிர்ப் பூனைபோல சிலிர்த்துக்கிடக்கிறது
மனது.....
உன் முத்தங்களின் நினைவுகள் புரையேற
தவித்தெழுகிறது ஆன்மா.....
உனக்கான என் தீராக்குரலோ
வெறுமை இட்டு நிரப்பும் நீயற்ற வெற்றிடத்தின் அழுத்தத்தில் நசியுண்டபடி.....
கடக்க முடியாத வழியின் தூரமாய் ஞாபகங்கள் விரிந்துகிடக்க
அள்ளித்தேக்கிவந்த நினைப்பில் ஒழுகுகிறது
பிரிவின்துயர்.....
அறையப்பட்ட சிலுவையில் மரித்துயிர்த்து
கண்ணீரின் உவர்ப்பில் மாட்டிக்கொண்ட
காயமாய் நேசம்.....
உனக்காய் சேர்த்துவைத்த புன்னகைகளில்
பழுப்பேறிக்கிடக்கின்றன எதிர்பார்ப்புகள்....
மெளனம் வந்தமர்ந்த வீட்டில்
சூரியன் குடித்த சொற்களாய்ப்போயின
நம் உரையாடல்கள்....
நம் புன்னகையின் மரணம் அறிந்து
நீர் பூக்கும் மழைக்காலங்களும்
நீலமாய் விரியும் நெடுவானமும்
ஏதுமுரைக்கா மெளனத்தில்.....
கிழிஞ்சலாகித்தொங்கும் காதலின் நரம்புகளின் மேல் அமர்ந்திருந்து மீட்டுகிறது
திறந்திருந்த ஜன்னல் வழியே நுழைந்துவந்த நிலவு....
கடந்துபோகும் இசையில் வலுக்கத்தொடங்குகிறது
பெருந்தோப்பிலிருந்து தனித்துப்போன கவிதை ஒன்று...


எந்த நதியை நான் குடித்தேன்..
எந்தக் கடலை நீ அருந்தினாய்..
வாழ்வு முடியாமல் நீண்டதே ஓர் கனவொன்றில்..
ஆயிரம் சூரியன்கள் உதித்த அவ்விரவில்தான்
உன் பால் முகத்தை நான் முழுதும் பார்த்தேன்..
என் இரவெல்லாம் அன்று தீர்ந்தன..
நதியொன்றில் நான் கரைந்து கடலொன்றில் மிதந்தேன்..
என் கரையெங்கும் நீயிருந்தாய்..
கொஞ்சம் கவிதைகள் கைகள் நிறையக் கூட இருந்தன..
அள்ளிப்பருகிய கடல் சிந்திய துளிகளில்
நான் பருகி எஞ்சிய உன் முத்தம் வழிந்தது..
ஒருகோப்பை வைனும்
உன் ஒரு துளி புன்னகையும்
என் வாழ்வை நிரப்புமென்று
என் வழிகள் எங்கிலும் நான் அறிந்திராப் புதினம் நிகழ்த்தினாய்..
கால்கள் தொடாத நிலமொன்றை
ஒரு கனவைப்போல நான் பார்த்தேன்..
நீயிருந்தாய் நானிருந்தேன்..
எஞ்சிய யாவும் ஒரு மாயம்போல் தெரிந்தகாட்டில்
உன் காதல் நிறைந்து தழும்பிய கோப்பை என் கைகளில்..
காலமது எங்கோ கரைந்து போனது காற்றில்..
அண்ணார்ந்து பார்த்தேன்
ஓடிக்கொண்டிருந்தன மேகங்கள்..
ஒழுகி வழிந்துகொண்டிருந்தன காலங்கள்..
குனிந்தபோது அத்தனை வேகமாய்
உருகிபோய்விட்டிருந்தன எல்லாப்பனியும்..
நீயில்லை.. முன்பொருகாலம் நாம் குடித்த நேசிப்பின் கடல் இல்லை..
காலியாகிக்கிடக்கிறது உன் முத்தங்களை நிறைத்து
என் கைகளில் வழிந்த கோப்பை...
ஊசியிலை மரங்களின் இலைகள் எல்லாம் இப்போ உதிர்ந்துவிட்டன..
அவற்றின் புன்னகையை பறித்த
துயர்ச்சாம்பல் படிந்த காலத்தைக் கூடவே நானும் கடக்கிறேன்..
பாசி பிடித்துக்கிடக்கிறது உன் கைகளில் வழிந்த
காதலை ஏந்திய வீதிகள்..
வெறுப்பின் பாடலை உரைத்துப் பூத்த மலரில்
உனைப் பார்த்து நானறியேன்..
யாதொன்றின் துயராயும் உனைப்பார்த்து நானறியேன்..
பின் யார் நம் காதலைப் பறித்தது..
நாமருந்திய தேனீரில் கசப்பின் விதைகளை யாரிட்டார்..
வாழ்வை ஒரு இசையைப்போல,
காலங்களை எதிரொலிக்கும் ஓவியத்தைப்போல,
ஊசியிலை மரமொன்றின் துயரறியாப் புன்னகையைப்போல
பருகிக்கொண்டிருக்கையில்
எம் தேனீரில் கசப்பின் விதைகளைப்போட்டவர் யாரோ..
உன் வேரின் அடியில் இருந்து என் காதலைப்பாடிய குயில்
எங்கோ தொலைந்துவிட்டது..
பூக்களில் சிரித்த உன் காதல் உதிர்ந்துவிட்டது..
வானம் மறைத்து நிறைத்த உன் அன்பு வற்றிவிட்டது..
என் நதியின் கரைகளில் இப்போ நீயில்லை,
என் படகின் துடுப்பில் இப்போ உன் விசை இல்லை..
வழ்வு ஒரு சமுத்திரமாய் என் நதியைக் கலக்கையில்
மெதுமெதுவாய் மூழ்கத்தொடங்குகிறேன்..
உன்னைப்போலவே இனியிரு கைகள் வந்தணைத்தால்
நானும் தன் கரைகளில் விட்டுச்செல்லக்கூடும்
என் தடங்களை என்கிறது இரக்கமில்லாக் கடல்..
கரைகளில் உனை ஒழித்துக்
கண்ணீரை நிரப்பிய விதியைச் சபிக்கின்றன
கடலிடையில் போராடும் என் துயர்க்குமிழிகள்..


நினைவு நனைத்த சிறகை உலர்த்தும்போதெல்லாம்
கோதுண்டும் கொத்துண்டும் விடுகின்றன
யாதேனும் சில அழுத்தமான காயங்கள்..
பச்சையங்களைக்குடித்தபின் பட்டமரத்தின் செதில்களையும்
தட்டிப்பார்க்கும் தீவிரத்துடன் காலம்..
இலைகளற்ற காலவெளிக்குள் வதைபடுகிறது தனிமை..
வழிப்போக்கனின் புன்னகைகூட அற்ற தெருவில்
பாதங்கள் முழைத்து நடக்கின்றன
வசந்தம் பூத்திருக்கக்கூடிய காட்டுக்கு..
ஓராயிரம் கவிதைகளில்
அன்பு நழுவி ஓடிக்கொண்டிருக்கிறது..
ஆயினும் எரியும் நாட்களில் பிரியத்தின்
ஒற்றை நீர்த்துளிகூடக்கிடைக்கா வாழ்வு..
நேசிப்பின் தேம்பல்களைக் கவனியாது
நேரமுட்களில் முளைத்து நடக்கும் நாட்களின்
குதியில் மிதிபடுகிறது வாழ்க்கை..
கவனிக்கத்தவறிய காயம் இளைப்பாறத்துடிக்கும் இருக்கையில்
அலட்சியத்தின் முட்கள்..
கடந்துபோகும் காற்றில் வலுக்கத்தொடங்கி
வெளிக்குள் பரவுகின்றன பழைய முகங்கள்..
கடைசித்துளி நம்பிக்கையும் தீர்ந்த
யெளனம் தழைத்த பூங்காவில்
பேச்சை அலங்கரித்துப் பின் பலியிட்டபோதெல்லாம்
சிவப்பாய்க் கசிந்த தீவிரத்தின் சூட்டில்
அன்பு சாம்பலாயானது..
ஒழுகியோடி அலசிய சொற்களில் கழுவுண்டன
அவரவர்க்கான சாய முகங்கள்..
மிச்சமிருக்கும் சொற்களைத்தூவி முகங்களைக்கடந்து
மீண்டுமொருமுறை மெளனத்தின் ஆற்றில் மிதக்கையில்
துயரம் படகாகிவிடுகிறது..
வலித்த கைகளிலோ வந்தமர்ந்து முழைத்துவிடுகிறது
துடுப்பாய் ஓர் கவிதை..

வாழ்வின் பெருமழையே..
என் முற்றத்தில்
என்றைக்குமாய் என் காதலைச் சொரியப் பொழியும் மழையே...
இவ்வாழ்வின் பசுந்தரையை பார்த்தேயிராத மனிதரையும் நனைக்கும் மழையே,
கரைந்தும் கதறியும் நனைந்தும் சிதறியும் துளிகளாய் உருமாறியும் உயிரோடு உயிர் பேசுவோம் வா மழையே..
என் கரையெல்லாம் நிறைத்து நிறைந்திருக்கும் ஆதிக்காதல் சுமக்கும் வானமும் சாகுமோ சொல் மழையே..
அவளற்ற பொழுதுகளில் நீ பெய்த துளிகளில் நான் நனைந்தே அறியேன் என்று
முன்பொரு நாள் உன்தோழியாய் இருந்த என் தோழியின் காதல் அறியுமோ சொல் மழையே..
வாழ்வை ஒரு கவிதையாய் கடக்கும் மனிதர்களைப்பாட வந்த மழையே,
உன் கானமெல்லாம் கசிந்துருகுகிறது பூமி..
அப்பாடலில் என் கூரை நனைந்து அன்றொரு நாள்
நீ நனைத்த என் காதல் ஊரும்போதெல்லாம் உடுத்தியிருக்கும் துயர ஆடைகள் நனைந்தழுகின்றன..
யாரறிவார் உன் துளியுள் கலந்து கரைந்த என் துயரை யாரறிவார்..
என்னையும் அவளையும் நனைத்த உன் பழைய மழை கரைந்து மறைந்து ஏதோ ஒர் பெருங்கடலில் இன்று மிதக்கக்கூடுமோ என் நினைவுகளைப்போல..
நம் மோனத்தில் கலந்து கசிந்து காற்றாய் மிதந்த அந்த வானத்தை இன்று தொலைத்துவிட்டோம்..
யாரும் கேட்டுணராப்பாடலை நீயும் அவளும் நானும் நிலவும் ரசித்திருக்கப்
பூத்திருந்த மலரொன்றின் புன்னகை மெல்ல இறங்கி அவள் கரங்களில் தவழ்ந்து என் தலை தடவிய நொடியில்
சிலிர்த்த இரவும் பூங்காவின் இருக்கையும்
இன்றும் ஏந்தியிருக்கக்கூடும் அப்பூவின் புன்னகையை..
என்னையும் உன்னையும் அவளையும் தழுவிப்
பின் வெட்கத்தில்
வானத்தில் துணையின்றி அலைந்துகொண்டிருந்த
ஒற்றை வெண்மேகத்தையும் சுமந்துகொண்டு
நழுவி ஓடிய தென்றல் இன்று அவள் குழந்தையை தழுவிக்கொண்டிருக்கக்கூடும்..
யாரறிவார் அந்த ஒற்றைமேகம் இன்று என் தோழில் கனப்பதை..
யாரறிவார் அப்பழைய பூங்காவின் இருக்கையில் என் தனிமையை..
கோடை ஒன்றில் மழையை பொழிந்த அந்தக் காதல் எங்கென்று நீயறிவாயா..
என் சோலை முழுதும் வேர்களை நனைத்த நேசிப்பின் நதி ஊற்று எங்கென்று நீயறிவாயா..
என் தோப்பில் இன்று குயில்கள் இல்லை..
கூவி அழைக்கக் குரல்களும் இல்லை..
காதல் வற்றிய நதி செத்துக் கோடை பாய்கிறது அதன் தடமெங்கும்..
மழையே..வாசம் கொண்டு வந்து முன்பொருநாள் பூத்திருந்த என் வசந்தத்தில் நனைத்து நனைத்து நனைந்த மழையே..
என் தேகம் எங்கும் நுழைந்து
ஆன்மாவின் அருகிருந்து
காதலைப்பொழிந்த அப்பழைய வசந்தத்தைக்
கண்டால்
இக்கவிதையை பொழிந்துவிடு என் பிரிய மழையே..

ஒட்டாத வாழ்வு...


------------
யாருமற்ற நதியோரம்
நானும் 
நாலைந்து இருக்கைகளில்
தனிமையும்..
நான் முற்றிலும் தீர்ந்துவிட்டதாய்
நதியிலும் நதிக்கரையில்
உதிர்ந்த சருகுகளிலும்
மிதந்தபடி உரைக்கிறது
மனது
காலம் கடந்து செல்கிறது
நான் மட்டும்
நகரமுடியாமல்
ஏதோ ஓர்சந்தியில்..
பழைய வாழ்க்கை
இழையோடக்
கண்கள் பனிக்கிறது..
வந்தமர்ந்த கிளையில்
வாழ்ந்ததற்கான அடையாளங்களோ
ஞாபகங்களோ எதுவுமில்லை..
கட்டிடக் காட்டிடையில்
தொலைந்தே போயின
காலடித்தடங்கள் யாவும்..
நிலமோ என் நிழலை
வெறுக்கிறது
நதிகளோ என் பாடலை
மறுக்கின்றன
தெருக்களிலோ என்
சுவடுகள் பதியவில்லை
ஒட்டிக்கொள்ளும்படியாக
இந்தமண்ணிண் வாசனைகளில்
எதுவுமேயில்லை..
பனிமூடிய நாட்களெல்லாம்
பட்டுக்கொள்ளாமலே கடக்கின்றன..
எருக்கலைக்கும்
நாயுன்னிக்கும்
புரிந்த என் மொழியோ
பைன் மரத்திற்கும்
செயின் நதிக்கும்
புரியப்போவதே இல்லை..
மனமும் உடலும்
பிரிந்தேகிடக்க
சலிக்காமல் வீசும்
குளிர்காற்றிலோ
சலனங்கள் எதுவுமில்லை
விலகித்தூரமாய்
வாழ்விருக்க
நொருங்கிய பாத்திரமாய்ச்
சிதறிக்கிடக்கிறேன்
முகமற்ற அந்நியனுக்கு
அடையாளங்களேது
உயிர் எரிக்கும் துயரெழ
வானத்தின் கீழே பிரமாண்டமாகிறது
வெயில்காட்டின்
ஞாபகச் சுமை...

இடிபாடுகளினுள் கூடுகட்டும் பறவை..


-----------------------
காலம் இருள்கவிழ்ந்து
ஒரு யுக நீட்சியாய் நகர்கையில்
மூடுண்ட பிசாசு வெளியொன்றினுள்
வாழ்வு வியாபித்திருந்த பொழுதுகளை
ஒருதொகை நினைவுகளை
சுமக்க இயலாமல்
சுமந்திருந்திருக்கிறது
இடிபாடுகளினுள் கூடுகட்டும்
பறவை
சிதைக்கப்பட்ட நிலமொன்றின்
மறக்கப்பட்ட பிரதிநிதி அது
வாழ்வின் மீதான ஆசை
ஏதுமில்லை அதற்கு
ஆயினும் வாழ்தல்
மரணத்தால்
விதிக்கப்பட்டிருக்கிறது..
தோப்பிலிருந்த
பறவைகளை எல்லாம்
பிடுங்கி வீசி எறிந்துவிட்டது
போர் கொட்டிய பாழ்மரணம்
எஞ்சியவையும் சுயம் சிதற
தூரப்பறந்துவிட்டன
கலங்கித்ததும்பும் விழிகளில்
துயரத்தை விரித்து
வாழ்வை தனியான வயலொன்றில்
விதைக்கும்
ராட்சதக்கவலைகளோடிருக்கிறது
அப்பறவை
யாருமில்லாப் பறவைக்கு
கைவிளக்கு வெளிச்சங்களையும்
அணைத்துவிடுகின்றன
மழைக்கால ஒழுக்குகள்
நதியில் விழுந்த துளிகளாய்
கண்ணீரெல்லாம்
வாழ்வு முடியும் திசையின்
தொலைவு வரை
சலிக்காமல் துரத்துகிறது
காலங்களை மீறியதோர் சாபம்
இறுகிப்போன பறவையின்
மெளனம் கலைத்து
மரணம் கைவிட்டுச்சென்ற
காலத்தின் கடைசியிடம்
பேச்சிடைப்பொருளானபோது
கோபக் கவளங்கள் நெஞ்சிறங்க,
அழிவின் அலறல் தெறித்துச்சிதறிய
தோப்பில்
விசமுட்கள் துளைத்த தாய்ப்பறவை
தன்மடியில் இருத்திவைத்து
இறக்குமுன் இட்ட முத்தம்
இரத்தச்சிவப்பென ஒளிர்ந்தது
அதன் அலகுகளில்
கேட்க மட்டுமே பழக்கப்பட்ட நானும்
செவிகளாக மட்டுமாயினேன்
பறவையின் துயரிற்கு...
வக்கிரங்களை வாரியெடுத்து 
சாகசக்காற வெளியில் 
நீதியின் சாம்பல் மேடுகளில் 
பூத்துத் திளைக்கும் உலகே..!

காற்று ரணமாய்க் கிழிக்கையில் 
எடுத்துச்செல்ல இயலாத பெருந்துயரத்தை - தம் 
மெலிந்த சிறகுகளில் சுமந்திருக்கும் 
பறவைகளின் கதையை 
எந்தக்காலத்தின் அறைகளுக்குள் 
ஒளித்து வைக்கப்போகிறாய் ...?

சாக்காட்டுத் தேசங்களிலிருந்து  
துயர் கசியும் பறவைகளின் பாடலை 
யாரேனும் உணர்ந்ததாய் தெரியவில்லை,
அன்பின் பாடல்களைக்கேட்டறியா 
செவிட்டு மனிதர்களுக்கிடையில்
ஒடுக்கப்படும் தேசங்களின் பாடல் மோதி அலைகிறது...

எம் நிழல்களில் உழல்வனவோ 
விடுதலையை தொலைத்த 
வெம்மையின் எச்சங்களாயிருக்கையில்,  
அழுதழுது கண்ணீர் இலையுதிர்ந்து கிடக்க 
வெயில் நதியில் மிதக்கும் 
கைவிடப்பட்ட தேசங்களின் மனிதர்களிற்காக 
ஒரு துளி நிழலை எங்கே பெறுவோம்..?  

தீயெரித்த வனமொன்றில் சிதறிய பறவைகள் நாம்
எம் தாயிருந்த கூடும் அற்றுப்போன போது 
பொருளற்ற இருட்பாடல்களை பின்னிக்கொண்டு 
அதனிடையே நெடுந்தூக்கத்தில் உறைந்து போனோம்..

எங்கள் கூடுகள் பற்றியும் 
கூரிய சொண்டுகள் கவ்விய 
எம் குஞ்சுகள் பற்றியும் 
காற்றிடமோ நீரிடமோ குறிப்புகளேதுமில்லை.. 
கிளையில்லை, 
ஆகாயமில்லை, 
ஒரு கூண்டு கூட இல்லை.. 
எம் பழைய முகங்கள் எதிலும் இல்லை, 
குருதி தோய்த்து வரைந்தவை எல்லாம்  
பட்டுப்போன வனமொன்றில்...

தேய்ந்தழியக் காத்திருக்கும் 
நோய் கொண்ட வரலாற்றுடன் 
காலங்காலமாய் கடந்துவந்த வாழ்வின்
அடையாளங்கள் எதுவுமின்றி
பிரபஞ்சத்தின் புதிர் நிறைந்த பக்கங்களுக்குள்
தொலைந்துதான் போவோமோ..?

வலி சுமக்கும் பறவைகளே..!  
உலகத்தில் எமதிருப்பையும் உரைப்பதற்காய் 
தனித்த சிறகுகளுடன் எழுந்தவர்கள் நாங்கள்
எல்லாம் கடந்து விட்டன..  
காற்றிப்போ எம் பக்கம் இல்லை, 
உங்கள் கண்ணீரில்தான் ஒரு துளி 
கடன் வாங்கி நாமும் அழவேண்டும்.. 

திரையை இழுத்து மூடிக்கொள்ளும் நீதியின் 
முகத்தில் மோதிய இயலாமை...
மிகுந்த நம்பிக்கைகள் சிதைந்த ஏமாற்றங்கள்...  
குருதியின் சுவை கொண்ட கண்ணீர் ... 
வெளிறிய ஆகாயம் அதிரும் ஒப்பாரிகள்...
கனவுகளைப் புசித்துப் பெருகும்  இருள்...
காலியான தேநீர்க்கோப்பையிலிருந்து வரும் 
இறந்த காலத்தின்  வாசனை.. 
ஏகாந்தத்திலும் அதற்கு அப்பாலும் கசியும்
ஏக்கங்களுடன் அடைபடும் வாழ்க்கை...

என 

அகண்ட இவ் வெறுமைவெளிகளை கடக்கையில் 
ஒரு சொட்டு சுதந்திரத்தைக்கூட யாசிப்பவர்களுக்கு 
இந்த உலகம் மிகத் தனிமையானதுதான்...  
    
ஒ வலி சுமக்கும் 
எம் பிரிய பறவைகளே..!   
உங்கள் கண்ணீரில்தான் ஒரு துளி 
கடன் வாங்கி இனி நாமும் அழவேண்டும்..

















வக்கிரங்களை வாரியெடுத்து
சாகசக்காற வெளியில்
நீதியின் சாம்பல் மேடுகளில்
பூத்துத் திளைக்கும் உலகே..!
காற்று ரணமாய்க் கிழிக்கையில்
எடுத்துச்செல்ல இயலாத பெருந்துயரத்தை - தம்
மெலிந்த சிறகுகளில் சுமந்திருக்கும்
பறவைகளின் கதையை
எந்தக்காலத்தின் அறைகளுக்குள்
ஒளித்து வைக்கப்போகிறாய் ...?
சாக்காட்டுத் தேசங்களிலிருந்து
துயர் கசியும் பறவைகளின் பாடலை
யாரேனும் உணர்ந்ததாய் தெரியவில்லை,
அன்பின் பாடல்களைக்கேட்டறியா
செவிட்டு மனிதர்களுக்கிடையில்
ஒடுக்கப்படும் தேசங்களின் பாடல் மோதி அலைகிறது...
எம் நிழல்களில் உழல்வனவோ
விடுதலையை தொலைத்த
வெம்மையின் எச்சங்களாயிருக்கையில்,
அழுதழுது கண்ணீர் இலையுதிர்ந்து கிடக்க
வெயில் நதியில் மிதக்கும்
கைவிடப்பட்ட தேசங்களின் மனிதர்களிற்காக
ஒரு துளி நிழலை எங்கே பெறுவோம்..?
தீயெரித்த வனமொன்றில் சிதறிய பறவைகள் நாம்
எம் தாயிருந்த கூடும் அற்றுப்போன போது
பொருளற்ற இருட்பாடல்களை பின்னிக்கொண்டு
அதனிடையே நெடுந்தூக்கத்தில் உறைந்து போனோம்..
எங்கள் கூடுகள் பற்றியும்
கூரிய சொண்டுகள் கவ்விய
எம் குஞ்சுகள் பற்றியும்
காற்றிடமோ நீரிடமோ குறிப்புகளேதுமில்லை..
கிளையில்லை,
ஆகாயமில்லை,
ஒரு கூண்டு கூட இல்லை..
எம் பழைய முகங்கள் எதிலும் இல்லை,
குருதி தோய்த்து வரைந்தவை எல்லாம்
பட்டுப்போன வனமொன்றில்...
தேய்ந்தழியக் காத்திருக்கும்
நோய் கொண்ட வரலாற்றுடன்
காலங்காலமாய் கடந்துவந்த வாழ்வின்
அடையாளங்கள் எதுவுமின்றி
பிரபஞ்சத்தின் புதிர் நிறைந்த பக்கங்களுக்குள்
தொலைந்துதான் போவோமோ..?
வலி சுமக்கும் பறவைகளே..!
உலகத்தில் எமதிருப்பையும் உரைப்பதற்காய்
தனித்த சிறகுகளுடன் எழுந்தவர்கள் நாங்கள்
எல்லாம் கடந்து விட்டன..
காற்றிப்போ எம் பக்கம் இல்லை,
உங்கள் கண்ணீரில்தான் ஒரு துளி
கடன் வாங்கி நாமும் அழவேண்டும்..
திரையை இழுத்து மூடிக்கொள்ளும் நீதியின்
முகத்தில் மோதிய இயலாமை...
மிகுந்த நம்பிக்கைகள் சிதைந்த ஏமாற்றங்கள்...
குருதியின் சுவை கொண்ட கண்ணீர் ...
வெளிறிய ஆகாயம் அதிரும் ஒப்பாரிகள்...
கனவுகளைப் புசித்துப் பெருகும் இருள்...
காலியான தேநீர்க்கோப்பையிலிருந்து வரும்
இறந்த காலத்தின் வாசனை..
ஏகாந்தத்திலும் அதற்கு அப்பாலும் கசியும்
ஏக்கங்களுடன் அடைபடும் வாழ்க்கை...
என
அகண்ட இவ் வெறுமைவெளிகளை கடக்கையில்
ஒரு சொட்டு சுதந்திரத்தைக்கூட யாசிப்பவர்களுக்கு
இந்த உலகம் மிகத் தனிமையானதுதான்...
ஒ வலி சுமக்கும்
எம் பிரிய பறவைகளே..!
உங்கள் கண்ணீரில்தான் ஒரு துளி
கடன் வாங்கி இனி நாமும் அழவேண்டும்..



ஓர் குளிர் நாளில் வெயிற்சுமையுடன் 
மெளனமுறங்கும் அக்கடற்கரைப்பூங்காவில் வந்தமர்ந்தேன்.. 
என் கைகளில் கனக்கின்ற ஞாபகங்களில் சிறிதை
காற்றில் மெதுவாய் இறக்கிவைத்தேன்..
எம் கதைகளை காற்று இரைந்து பேசத்தொடங்கியது..
மரங்களுடனும் செடிகளுடனும்
முத்தங்களைப்பரிமாறிக்கொண்டிருந்த மாலையுடனும்
அது கண்ணீருடன் பேசத்தொடங்கியது..
வெள்ளையின மனிதர்களின் கதவுகளை மோதி
அலைந்துவந்த காற்று பேசிக்கொண்டே இருந்தது..
யூகலிப்ஸ் மரத்தின் கீழ் நடுத்துண்டு உடைந்த இருக்கையும்
நரம்பு மட்டும் எஞ்சிய பழைய வசந்தம் ஏதோ ஒன்றின் முடிவில்
உதிர்ந்த மஞ்சல் இலைகளும்
சலிக்காமல் கேட்டுக்கொண்டிருந்தன..
கடலின் பின்னால் புதைந்த என் சந்ததியோடு உதிர்ந்த இலைகளுக்கு இப்போ நரம்புகளும் உக்கத்தொடங்கியிருக்கும்..
நெஞ்சடைத்தது துயரெழுந்து..
என் கைகளில் கனக்கின்ற ஞாபகங்களில் மிகுதியை கொந்தளித்துக்கொண்டிருந்த கடலலைகளின் மேல் நீந்தவிட்டேன்..
அலைகளின் மேல் மிதந்த அந்திச்சூரியனும் கடலும் காயம் மிகுந்து இரத்தச்சிவப்பாயின..
மேகங்கள் உடைந்துபோய் அழுதன
நான் என்ன செய்வேன்..
இந்த ஞாபகங்களைத்தானே என் மண்ணிலிருந்து எடுத்து வந்தேன்..
பிறந்தபொழுதும் தவழ்ந்தபொழுதும் நடந்தபொழுதும்,
பின் வளைந்த முதுகுகளில் வாழ்வை சுமந்துகொண்டு அகதியாய் அலைந்த போதும்
எம் தலைமுறையுடன் கூடவே வந்தது போர்..
எம் பாடல்கள் வாளொன்று கிழித்த உடலொன்றிலிருந்து ஒழுகிய இரத்தம்போல் அல்லாமல்
திராட்சையின் சுவையோடு இசைந்திருக்கவும் முடியுமோ..?
நாங்கள் காவி வந்தவற்றை உங்கள் தாழ்வாரங்களில் விரிப்பதாக முறைக்காதீர்கள்..
அவை நீங்கள் எங்கள் வனங்களில் தூவிய முட்செடிகளின் கனிகள்தானே..
காலம் ஓர் திருப்பத்தில் கவிழ்த்தது எம் இனத்தை..
அதன் ஊழிக்கிடையில் மூழ்கிப்போனது எம் மூன்று தசாப்தப் பெருங்கனவு..
மிச்சமிருக்கும் தலைமுறைக்கோ மிதிபட்டபடி ஓர் கனவு..
முட்களில் இருந்து தனை மீட்க
வனாந்தரங்களைக் கடந்து
ஓர் தேவதூதன் வருவான் என்று சொன்னது
என் வாசங்களில் இடறிய ஏதோ ஓர் றோசாப்பூ..
காலங்களை எண்ணிக்கொண்டிருந்தபோது மாலை வந்துவிட்டது உதிர்வதற்கு..
பாவம் அந்த றோசாப்பூ..
காற்று என் தலைமுறையின் கனவிற்காய்
துயருடனே இரைந்துபாடுகிறது..
கடல் அழுதுவடிகின்றது..
நான் உதிர்ந்து கிடக்கும் அந்த மஞ்சல் நிற இலைகளின் நரம்புகளுக்கிடையே
அலையும் என் புதைந்த சந்ததியிடம் மண்டியிட்டுக்கொண்டிருக்கிறேன்..
தொலைவாய் ஓர் பேருந்தின் இரைச்சலில்
என் நிகழ்காலம் விழிக்கிறது..
எழுந்து நடக்கிறேன்..
முகத்திலும் மார்பிலும் துரத்தி வந்தமர்ந்து அந்நியன் என்கிறது துருவக்குளிர்..
நானோ அத்தெருவில் அனாதையாய் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறேன்...

ஒளிமிகக்கொண்ட காலம்...


நீதியின் கரங்களை
சிலுவையில் அறைந்தபோது
எழுந்த குரல்களையும் கொன்றனர்
சாத்தான்களின் பிரதிநிதிகள்
சாட்சி சொல்ல அஞ்சும் நிலவும்
ஊமையான நட்சத்திரங்களும்
நாய்கள் குரைக்கும்
நாட்களின் அச்சத்தில்
பகைமையின் வாள்களோடு
வேட்டையாடுகிறது காடு
வீடும் கூடும்
விலைமதிப்பற்ற சுதந்திரமும் போயின
கரையவோ கடக்கவோ முடியாத துயரம்
தீப்படாமலே எரியும் வலி
வேலிகள் அரிக்கப்பட்ட தசாப்தங்கள் கடந்து
வேலிகளே அற்ற நூற்றாண்டில்
வெறுப்புமிழ சொல்லித்தரப்படுகிறது
மிதிபட்டபடியே சேர்ந்து வாழும் ஜனநாயகம்
எந்தவீதியிலும் பயணமில்லை
தொலைந்துபோயினர் வழிப்போக்கர்கள்
இறுகிப்படிந்திருக்கிறது தெருவெங்கும் மெளனம்
இரண்டொரு எறும்புகள் மட்டும்
சுமக்கமுடியாமல் சுமந்து செல்கின்றன
தெருவின் துயரை
வனப்புமிக்கதொரு வம்சம்
வாழ்ந்துபட்ட ஊர்களின்
வீரத்தின் தொல்லெச்சங்களை
உண்டு செரித்திடுமோ காலம்..?
பெருகும் கோடை ஒன்றின்
தகிக்கும் தீராவெக்கையை
கடக்க முடியாமல் தவிக்கும் இனத்தை
கவ்வியிருக்கின்றன
வறுமையின் வேட்டைப்பற்கள்
பசியுமுழும் கண்கள் வழியோடி
இருள் குவிந்த கன்னங்களில் தேங்கும்
கண்ணீரில் பிரதிபலிக்கிறது
இழப்புகளின் நினைவுகளும்
இயலாமையின் சிதறல்களும்
பிள்ளைகளை தொலைத்த தாயொருத்தியின்
குலுங்கும் மார்பிலிருந்து கொட்டும் சோகத்தை
அண்ணணை சுட்டுக்கொன்ற வீதியைக் கடக்கும்
தம்பியின் வலியை
வன்புணர்ந்து கொல்லப்பட்ட மகளின்
புதைகுளியை தாண்டும் தந்தையின்
வெடித்துக்கிளம்பும் துயரை
இனி எந்த மொழியிலும் சொற்கள்
விஞ்சப்போவதில்லை.
மேசைகள் நிறைய
ஈரமூறிய வார்த்தைகளை தூவும் உலகே
தூரமாய்
கோடை விளைந்த வயல்களில் இருந்து
காற்றள்ளி வரும் குரல் கேட்கிறதா..?
துளி ஈரத்தை உன் கொல்லையில் இன்னும்
மிச்சம் வைத்திருப்பாயானால் சொல்
எம் ஒளி மிகக் கொண்ட காலத்தை ஏன் கொன்றாய்..?
மழை இரவொன்றில்
காணாமல்போன நிலவைப்போல
நெருப்புத்தூள்களை உமிழ்ந்துவிட்டு
உறங்கிப்போன எரிமலை ஒன்றைப்போல
எம் ஒளி மிகக்கொண்ட காலம்
இறைமை பேசும் உன் தேசங்களின் தீயில்
இறந்ததெமக்கொரு கனவைப்போல
கருணையின் நிறத்தையும்
அன்பின் வர்ணத்தையும்
அறிவுக்கும் உலகே
மக்களை கொன்ற மன்னனையும்
பிணங்களைப் புணர்ந்த சேனைகளையும்
கண்டுகொள்ளாமல் விட்டபோது
பிணியெல்லாம் பரவிய தேசத்தை மறந்தபோது
இன அழிப்பின் துயர்க்குரலை மறைத்தபோது
ஒரு ஒளி நிறைந்த காலத்தைக் கொன்ற
பழி நிரம்பி உறைந்துபோனது
உன் பாதைகள் எங்கும்..

Wednesday, 15 October 2014

மாலைப்பொழுதும்..வண்ணாத்திப்பூச்சிகளும்..கவிதைகள் நிறைந்த தேனீரும்...சில நினைவுகளும்...

1)
1452280_10151797772029891_714711805_n.jp

மாலைப்பொழுதும்..

வண்ணாத்திப்பூச்சிகளும்..

கவிதைகள் நிறைந்த தேனீரும்...

சில நினைவுகளும்...

நேற்றை பற்றிய கேள்விகள் இல்லை..

நாளை பற்றிய ஆதங்கமும் இல்லை..

வாழ்தல் நிறைந்திருக்கிறது

கனவுகளின் கிண்ணத்தில்...

02/11/2013
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

2)
1453421_10151805001519891_1551760862_n.j

நள்ளிரவு தாண்டியும் ஓடிக்கொண்டிருக்கின்றன
நாலைந்து பேருந்துகளும் நம் காதல் நினைவுகளும்...

வெளியே...
மெல்லிய இந்த இரவை அணைத்தபடி 
புல்லின் நுனியில் பூத்த பனிமலர்கள் சிலிர்க்கின்றன...

தாகத்துடன்
குளிர்காலத்தின் கடைசி இலையையும் உதிர்ப்பதற்க்காய் 

காத்திருக்கின்றன ஓர்க் மரங்கள்...

கோடை இன்னும் துலங்கவில்லை...

ஆயினும்..

உள்ளே..
பின்னிரவில் சாளரங்களை ஈரமாக்கும் பனிக்காற்றை
ஆவியாக்குகிறது நம் மூச்சின் வெம்மை...

நள்ளிரவிலும்
நமைக்கண்டு நாணிப்போலும்
மேகங்களைப் போர்க்கத்தொடங்குகின்றன
வெட்கத்துடன நட்ச்சத்திரங்கள்.....

இனியென்ன..
தூங்கிக்கிடக்கும் என் வாலிபங்கள் மீது
துப்பட்டாவாய் உன் வதனங்கள் படரட்டும்...

உன்னையும் என்னையும் சேர்த்த
காதல் வெளியில் பூக்களாய் நம் முத்தங்கள் சொரியட்டும்...

வா..

இந்த இரவின் ஒவ்வொரு நாழிகையிலும்
உன் பெயரையும் என் பெயரையும் எழுதிவைப்போம்...

05/11/2013
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

3)10475516_10152246547864891_6790422822541
துயர்தீராத வெளியில்
என் குரல் அமிழ்ந்துபோகாமல்
தாங்கிச்செல்லும் வண்ணாத்துப்பூச்சி நீ...

என் இரவுப்பாடலின்
சுவடுகள் வழி பாயும் நதி நீ......

என்னிடம் பேசாமலே கிடக்கும்
சொற்களின் தீராத்தாகம் நீ...

என் மெளனத்தின் சுவர்களில்
நேசத்தின் நிறத்தோடு படரும் கவிதை நீ....

நினைவுகள் எழுந்தாடும் பழையதன் தடத்தில்
தட தடக்கும் ரயில் நீ...

எல்லாத்திசைவழியும்
எனை நிறைக்கும் காலத்தின் வெளி நீ...

பகலோடு இரவும் பனிதீரா நகரத்தில்
அன்பும் பாடலும் காற்றாக இசைய
அழகு சிலிர்த்தெழும் இரவுக்கோலத்தில்
நினைவுகளின் வழியாக
நிறுத்தி வைத்திருக்காய்
உனதிருப்பை என்னிடம்...

உன் பெயர் சொல்லி மலரும்
என் இதயத்திடம்
இனித் தீர்வதாயில்லை
பிரியங்களில் சிந்திக்கிடக்கும்
கவிதைப்பக்கங்கள்
...

13/06/2014
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

4)
10290635_10152136961584891_1955618353759
தனித்தலையும் ஒரு
பறவையைப்போல நான்
என் இருப்பின்
வேர்களாய் 
உன் ஞாபகங்கள்

விலகிப் போன பின்னும்
விட்டுப் பிரியா
துயரத்தின் வாசத்தில்
ஒட்டியிருக்கிறது
நம் ஆதிக்காதல்

நியாபகச்சூட்டிடமிருந்து
ஒளிந்து கொள்வது
அத்தனை சுலபமில்லையெனும் போது
உன் பிரிவின் கூரலகால்
கிழிகிறது என் இதயம்

காத்திருப்பின் ஆடை சுமந்து
நீயும் நானும்
அமர்ந்துபேசும்
மஞ்சல் நிறபூக்கள் உதிர்ந்துகிடக்கும்
யாருமற்ற இருக்கைகளிடம் கேள்..

அவை
உன்னிடம் கொடுப்பதற்காக
மழை நேர தேனீர்போல
எப்போதும் என்னிடம் இருக்கும்
எல்லையற்று நீண்ட அன்பையும்
ஆகாயத்தையும்
சொல்ல சில கதைகளையும்
முடிந்துவிட்ட பிரியத்தின்
கடைசி சொட்டில்
அடைகாத்து வைத்திருக்கும்...

நமக்கான பயணங்களில்
இசையொழுகிய தருணங்களை
லயித்தபடி
மழைக்காற்றின் ஈரம்போல
நான் சுமந்திருப்பேன் காதலை
மழையை
முற்றும் உறிஞ்சிய நிலம்போல
நீ வெடித்துக்கிட
அன்பின் வறட்சியில்...

20/02/2014
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

5)
1460129_10151817838499891_1596988061_n.j

முன்பெல்லாம் அவர்களுக்கு ஓவியங்களாய் வனையப்பட்டிருந்தது காலம்....

பின் ஒரு பெருங்கோடையில் எல்லாமே வற்றிப்போனபோது 
மரங்களற்ற வெயில்க்காட்டில் தனித்தார்கள் அவர்கள்.. 

பறக்கத் துடிக்கும் சிறகற்ற பறவை ஒன்றின் இயலாமையுடன் முடங்கிப்போனது வாழ்வு...

நிறைவின் வசீகரமும் குதூகலமுமாய் துலங்கிய நாட்கள் தொலைந்தன..

வாழ்வு வெளியை மூடிக்கவிழ்ந்த இலையுதிர்காலம் முழுவதையும்
நிறைத்தன வலிகள்..

இலைகள் உதிர்த்த சூனியத்தின் தனிமையுடன்
பொழுது புலர்வதும் சாய்வதுமாயானது நாட்களுக்கு..

கனவுகளற்ற நெடுந்தூக்கத்தில் உறைந்துபோனது வாழ்வு...

பின்...

சுய நலம் மிகுந்த கோடை ஒன்றில்
அட்டூழியம் செய்த பெரும் இடியில்
எஞ்சிய வாழ்வும் சிலுவையில் அறையப்பட்டது..

யாரும் கண்டுணராதபடிக்கு
புன்னகையால் வலிந்து இழைக்கப்பட்ட திரைகளின் பின்
புதைக்கப்பட்டது நீதி....

காலமோ விரட்டும்...

எனினும் நீதிக்காய்..

அச்சிறு இதயங்களின் கண்ணீரை உறிஞ்சி..
அவர்களின் இருள்விலகாத விழிகள் வாங்கி..
பெருமரங்களின் ஆழ ஓடிய வேர்கள் ஊடாக
மலைமுகடுகளின் பொறுமையுடன் காத்திருக்கிறது....

ஒரு இன அழிப்பின் துயர்க்கதை...

09/09/2013
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

6)


கண்ணீரை உடைத்துக்கொண்டு மெளனம் வெளியேறுகிறது...
இரவில் தொடங்கி இரவில் முடிந்த நாட்களைப்பற்றிப்பேச...
இழப்பையும் துயரத்தையும் எங்கு குவிப்பது என்று தெரியாமல்
விக்கித்திருக்கும் சனங்களைப்பற்றிப்பேச...
முகத்திலும் மார்பிலும் வண்ணங்களைத் தீட்டிக்கொண்டு 
வெட்டரிவாளுடன் சூழ்ந்த மானுடத்தின் சிறுமைபற்றிப்பேச...
ஆட்காட்டிகள் தொலைந்த வயலோரங்களைப்பற்றிப்பேச..
தலைமுறைகள் தொலைந்த வீடுகளைப்பற்றிப்பேச...
கடவுளர்களும் பிசாசுகளும் இணைந்து செய்த 
இனப்படுகொலையைப்பற்றிப்பேச...
கண்ணீரை உடைத்துக்கொண்டு மெளனம் வெளியேறுகிறது...
கவிதைகளாய்...
02/11/2013
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

7)

















உன் காதலோடு இருந்த கணமொன்றில் உதிர்ந்த 
கண்ணீர்த் துளியின் ஸ்பரிசங்கள் உறைந்த கன்னங்கள்....
உன் நினைவுகளால் நிறைந்த இதயம்... 
உதடுகளை அழுத்தும் என்றோ ஒருநாள் நீ கொடுத்த முத்தங்களின் 
ஈரம் ....
என்று 
வாழ்தல் முழுதும் நிறைந்து கிடக்கின்றன 
உதிர்ந்து போன நம் காதல் கணங்கள்...
காயங்கள் தாங்கிய பிறை நிலாவுடன் 
கடந்து செல்கிறது உன் அருகற்ற இன்னுமொரு நீள இரவு....

31/10/2013
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

8)
நாசித்துவாரங்களை நனைத்த 
மரணத்தின்வாசனை இன்னும் நீங்கவில்லை...
காவுகொடுத்த குட்டித்தீவு 
காய்ந்து கிடக்கிறது 
குருதிச்சுவடுகள் அழிக்கப்பட்டு...
வெறிகொண்ட காற்றை சாடுவதற்கு 
நட்பின் வாசத்தை தம் வேரிலும்
துயரத்தின் கதையை தம் ஆன்மாவிலும் 
சுமந்து நிற்கின்றன சிறுமரங்கள்..
நண்பர்கள்
கேள்விகள் அற்று 
பெருந்தெருவில் சுடப்பட்ட வண்ணாத்துப்பூச்சிகள்...
31/10/2013
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

9)
1424461_10151823820824891_1120948777_n.j

விழித்துக்கிடக்கும் இரவுப்பொழுதுகளில் நினைவுகளின் சாளரங்களூடு புகுந்துவிடுகின்றன நம்காதல் ஞாபகங்கள்...

உயிர் உயிர் உயிர்க்க எத்தனை தடவைகள் காதல் செய்திருப்போம்....

உன்னுடன் சேர்ந்து நடந்த வீதிகள் சுமந்திருக்கின்றன நீயும் நானும் பேசிய நூறாயிரம் கதைகளை....

ஏந்த யாருமற்று கன்னங்களை தாண்டி உதிர்ந்து விழும் கண்ணீரை எடுத்துசெல்கிறது காற்று....

மழைபொழியாமலே நீர்கசியும் இரவுகளில் கன்னங்களில் பிசுபிசுக்கின்றன முன்னர் நீ கொடுத்த முத்தத்தின் ஈரங்கள்...

அறைமுழுவதும் பெருமூச்சையும் விசும்பல்களையும் உண்டு பசியாறிக்கிடக்கிறது தனிமை....

கண்ணீரும் கவிதைகளும் அடிக்கடி ஒன்று கலக்கும் மை கரைந்த காகிதத்தாள்களில் சிந்தி இருக்கின்றன உன் பிரிவின் வலிகள்...

எல்லாமே கடந்து சென்ற பின்னாலும் மனதை நிறைக்கின்றது எனக்காய் நீ தந்த இறுதிப்புன்னகையின் ஓலம்...

மழைவிட்டும் காற்றுடன் எஞ்சியிருக்கும் ஈரலிப்பாய் வாழ்க்கை முழுதும் ஓட்டிக்கிடக்கின்றன கடந்துபோன காதலின் வாசனைகள்...

வெளியெங்கும் பரவிக்கிடங்கும் நீ சிந்திய முத்தங்களுடன்
கலைய மறுத்துத் தொடர்கின்றன எப்போதும் உன் நினைவுகள்...

12/11/2013
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

10)
1383800_10151829466994891_829389266_n.jp


ஆவியாகி இன்னமும் பொழிவதற்காய் சிலிர்த்துக்கொண்டே இருக்கும்
ஒரு மாலைப்பொழுது எமை நனைத்த மழைத்துளிகள்..

காதலுடன் உன்னையும் என்னையும் நனைத்த அப்பெரு மழையை
ஈரம் சொட்டச்சொட்ட வாழ்த்திப்பாடிக்கொண்டிருந்தன பெயர் தெரியாத சில பறவைகள்..

இமைகளை மூடி வழிந்த மழை நீரை ஒதுக்கக்கூட
இணைந்திருந்த கரங்களைப்பிரிக்க மனமின்றி நெடுந்தூரம் நடந்தோம்...

மழைத்துளிகளை சிந்திக்கொண்டிருந்த மஞ்சல்ப்பூக்களில்
பெருகி வழிந்துகொண்டிருந்தது உன் வெள்ளைப் புன்னகை..

அப்பெருமழையை ஏந்திக்கொண்டிருந்த தெருமரங்கள் எல்லாம்
நம் பேரன்பின் கதகதப்பில் லயித்துக்கிடந்தன..

வெளியே கசிந்துகொண்டிருக்கும் சின்ன மழைச்சத்தத்தில்
நினைவுகள் அதிர்கின்றன..

ஒரு வசந்த
காலத்தில் பொழிந்த அப்பழைய மழையின் 
ஈரம் உலராத நினைவுகள் காயவே இல்லை.

15/11/2012
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

11)10410552_747864788597091_451994679875871
தீர்ந்து போகாத இந்த எழுதுகோல் முழுவதும் 
எரிமலைகுழம்பாய் இருக்கிறது 

உன் மீதான நேசிப்பின் கவிதைகள்...
நம் காதல்ப்புரவி கடந்த 
காலடிச்சத்தங்க்களும் 
கிளறிச் சென்ற நினைவுகளுமாய் 
மனதின் எல்லாப்பக்கங்களும் 
எதிரொலிகளால் நிரம்பியிருக்கிறது ...
பிரிய மனமின்றி -உன் 
பிரியம் விட்டுச்சென்ற 
ஈரலிப்பில் மூழ்கிக்கிடக்கையில் 
ஊதிப்பெருத்த நினைவுகளுடன் 
கடந்துபோனது நீ மட்டுமா 
காலமும்தான்...


19/10/2013
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

12)156199_10150715389144891_33325168_n.jpg?
நிலாக்கரையும் பொழுதொன்றில் 
நீ உதிர்த்த வார்த்தைகளை
அடித்துச்சென்றுவிட்டது 
காலவெள்ளம்..
எத்தனை மழைப்பொழுதுகள்
கடந்தனவென்று நினைவிலில்லை!
ஆயினும்
நிராகரிப்பின் வலியொன்றில்
ஒரு பகல் நிலவைப்போல
இன்னமும் மீதமிருக்கிறது
காதல்..

13/08/2013
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

13)
10371687_10152203432209891_6446617695855
இந்த இரவின் மௌனத்திலும்
வெளியே இலை துடிக்கும் ஓசையிலும்
இன்னமும் அருந்தி முடிக்காத 
மேசை மேலிருக்கும் தேநீரிலுமாய் 
சிதறுகின்றன உன் ஞாபகங்கள்....

27/05/2014
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨
14)
10153816_10152120348379891_6797527607073
கால நதியில்
மிதக்கும் சோடி இறகுகளாய்
காதலை நிலமெங்கும்
விதைத்தபடி

பூத்திருக்கும் மலர்களுடனும்
வண்ணாத்திப்பூச்சிகளுடனும்
நெடுந்தூரம் நடப்போம்
தெருவோர‌ மரங்கள் எல்லாம்
நம் பேரன்பின் கதகதகதப்பில் லயித்துக்கிடக்கட்டும்.....

27/05/2014
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨
15)

10398092_10152208992789891_2568790225581
கோடை தின்ற ஈர உரையாடலின் 
மீதம் கசியும் துளிகளிலிருந்து
வேர் பிடிக்கிறாய் நீ..
முன்னொருபொழுது ஒட்டிகொண்ட‌
உன் மஞ்சல்ப்புன்னகையுடன்
நினைவுத் துண்டுகள் தங்கி விட்ட
நிலமெங்கும்
சிதறிப் பூக்கிறது உன் வாசனை....

27/05/2014
¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨¨

மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள்....

[தாய் மண்ணைப் பிரிந்து வந்த ஏக்கம் எல்லா உயிர்களிடத்தும் இருப்பது.பறவைகள் விலங்குகள் கூட தங்கள் கூடுகளையும் இருப்பிடங்களையும் தேடிப்போகவே எப்பொழுதும் முனைகின்றன.மண்ணைப்பற்றிய ஏக்கமானது ஒவ்வொரு புலம்பெய்ர்ந்த மனிதனது ஆன்மாவையும் ஓயாத தீயாக எரித்துக் கொண்டே இருக்கும்.சிதறிக்கிடந்த யூதர்களின் மனங்களில் எல்லாம் எரிந்த அந்தத்தீயே இன்று ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழர்களின் மனங்களிலும் கணல்கிறது, என்னுள்ளும் இருக்கும் அணைந்து போகாத அந்ததத் தீயில் உருகிய சில கவித்துளிகள்....தொடரும்]


பெருங்கூட்டமாய் நெடிதுயர்ந்து நிற்கும் ஓக் மரங்களின் கீழ்
நான் தனிமையைத்தேடி வந்தமர்ந்தபோது
காற்று துருவப்பாறைகளிலிருந்து பனித்திவலைகளைக் காவிக்கொண்டு
விரட்டிவரும் வெளிச்சத் துண்டுகளிடமிருந்து விலகிப்பறக்கிறது
நீள் கழுத்துப் பறவைகள் சில மேகங்களின் கீழே
ஆழக்கடலலைகளின் ஆர்ப்பரிப்பை இரசித்தப்படி
விரைந்து கொண்டிருக்கும் பகல்ப்பொழுதின் தடங்களைத் தொடர்கின்றன
சாளரத்தினூடு தெரியும் உலகத்தில் மிதந்து கொண்டிருக்கும்
குழந்தையை தாலாட்டிய படி மெல்ல வந்து சேர்கிறது மாலை 
காலப்படுக்கைகளில் புதைந்துள்ள மனித இனத்தின் யுகக்கனவுகளில்
சிலிர்த்தபடி இருள் மெல்ல உயிர்க்கிறது
ஒரு பகலின் முடிவிலும்,ஒரு மாலையின் நிகழ்காலத்திலும்
ஒரு இரவின் வருகையிலும்
தாய் மண்ணைத்தரிசித்தபடி என் தனிமை கரைகிறது...




துருவ மலரொன்றின் வாசனை நாசித்துவாரங்கள் வழியே பயணித்து 
பனிக்காற்றில் உறைந்த என் உயிர்ப்பூவை எழுப்பிய போதும்
பனிப்பறவை துப்பிய நீர்த்துளி ஒன்று 
ஊசியிலை மரமொன்றின் முனைகளிலிருந்து வழிந்து 
என் உடலில் மோதிச்சிதறிய போதும்
சிதறிய துளிகளிலிருந்து விடுதலை பெற்று 
குளிர்ச் சிலந்தி என்னுடலெங்கும் பரவிய போதும்
மனக்கூட்டின் ஆழத்தில் தேங்கியிருந்தபடி சலசலக்கிறது
என் தாய்மண் தந்த கதகதப்பின் ஞாபகத்துளிகள்...


என் மொழியின் சுவடுகளே அற்ற தெருவொன்றில் அந்நியப்பட்டு அழிகிறது இம்மாலை.....

பெயர்தெரியாத சில பறவைகளின் பாடல்களிலும்
துருவ‌க்காற்று சுமந்துவரும் காட்டுப்பூக்களின் வாசனைகளிலுமிருந்து பெருகி வழிகிற‌து
புழுதிக்கூட்டிலிருந்து தவறி வீழ்ந்த ஆன்மா ஒன்றின் நீள்துயர்...

பனைமரக்காட்டிடையே கொதிக்கும் நினைவுத்துயரின் வெம்மையில் மூழ்கித் தகிப்பிழந்து சாள‌ரமரங்க‌ளின் பின்னே மறைகிறது இம்மாலைச்சூரியன்...

இந்த இரவின் தனிமை முழுவதற்குமாய் தாய் மண்ணின் நினைவுகளைத் தூவ வரும் நிலவை இனி எதைக்கொண்டு மறைப்பேன் நான்....


உதிர்ந்து போகும் சருகுகளில்
சிரிக்கும் நேற்றைய இளமைகள்
அழுக்கடைந்த மரத்தின் பழுப்பு நிறங்களில்
மறைந்துகிடக்கும் முதுமை
அடங்கிப்போகும் பெருநகரின் இரைச்சலில்
விழித்தெழும் தனிமை
மறைந்துபோகும் சூரியனுடன்
நிறைவுபெறும் நாள்
மரணம் எனும் இலக்குடன் திரியும்
காலம் எனும் பறவையின் சிறகில் ஏறிப்பறக்கிறது இன்றைய மாலை
நாளை இலக்கற்று விடியப்போகும் ஒரு நாடற்ற நாளிற்காய்...


வெட்டவெளிகளில் படர்ந்திருக்கும்
வெயிலை விரட்டிவிட்டு
சாளரங்களின் இடுக்குகளினூடு நுழைந்து
கண்களை வருடி விடும் தென்றலையும்
விண்மீன்களையும் அழைத்துக்கொண்டு
ஒளிக்கற்றை விழுதுகளின் வழியே கீழிறங்கி
இருளுடன் போராடும் நிலவையும்
மாலையின் போதையில் மயங்கிச் சிவந்துபோய்
காற்றுப்பறவையின் முதுகிலேறி
இலக்கற்றுத்திரியும் மேகங்களையும்
என்னை வழியனுப்பிய கடைசி நாளில்
இதுவரை உணரப்படாத மொழிகளில் பேசிய
செடிகளின் வார்த்தைகளையும்
ஒரு மழை நாளில் நீ சிதறவிட்ட புன்னகையில்
சேகரித்த முத்துக்களையும்
தொலைத்து விட்டுப்
பனிமர தேசத்து நகரங்களில் தேடுகிறேன்
யாரேனும் பார்த்தீர்களா...?


இயந்திரங்களின் இரைச்சல்கள் ஓய்ந்து போன ஓர் இரவில்
பூமியைப் புதைத்துவிட்டுக் கட்டடங்கள் விதைக்கப்பட்ட
பெருநகரொன்றின் பின்னால்
தொலைவில் தெரியும் சதுர வயல்களின் மடியில்
ஒரு நாளை அனுப்புவதற்கான நீண்ட பறப்பொன்றின் முடிவில்
இளைப்பாறுகிறது என் மனம்
மழை ஒழுகும் நாளொன்றில் நனைந்தபடியே
நான் சேகரித்த பெயர்தெரியாத சில பறவைகளின் பாடல்களையும்
கடற்கரையில் கொட்டிக்கிடக்கும் காலடித்தடங்களின் நடுவே
கண்டெடுத்த குழந்தை ஒன்றின் புன்னகையையும்
நெடிய பனைமரங்களின் இடையில்விழுந்துகிடந்த
நிலவின் சிதறல்களையும்
முன்பொருநாள் நீ கொடுத்த முத்தங்களில்
உமிழ்ந்த நினைவு மொட்டுக்களையும்
என் மண்ணில் இருந்து எடுத்துவந்த
ஞாபகப்புத்தகத்தில் விரித்துப்பார்க்கிறேன்
பகலின் இரைச்சலில் நான் கரைந்துபோகுமுன்
படித்து முடிக்கவேண்டும்...



மெல்ல மெல்ல இல்லாது போகும்
பகலொன்றின் பின்னாலிருந்து வரும்
இரவின் விழுதுகளைப் பற்றிக்கொண்டு
மன நிலத்தின் பெரு வெளியெங்கும்
இறங்கிப்பரவுகிறது உன் பிரிவுத்துயர்
பகல் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புவதற்க்காய்
உன் புன்னகைத்துளிகள் நிரம்பிய முத்தம்களைக்
காவி வருகிறது என் நினைவுக்குதிரை
மண்ணிண் நினைவுகளை மீட்டியபடி
ஒழுகிய மழைத்துளி ஒன்றின் சிதறலில் இருந்து
மெல்ல ஒலிக்கிறது பெரு நகரத்தின் நீள் மெளனம்
என்றோ ஒரு நாள் இறந்துபோன வண்ணாத்துப்பூச்சி ஒன்றின்
உடைந்துபோன சிறகொன்றிலேறிப்பறக்கிறது
தாய் நிலம் நோக்கிய என் கனவுகள்.....




பகல் விட்டுச் சென்ற நினைவுகளைச் சுமந்தபடி
உறங்கிப் போய்க் கிடக்கிறது பூமி...
என்னூரையும் எங்கோ தொலைவிலிருக்கும் என்னையும்
அவதானித்தபடி விழித்திருக்கின்றன
நிலவும் சில விண்மீன்களும்..
மேகங்களுக்கு அப்பால் 
நட்ச்சந்திரக்களுக்கிடையே ஒளித்துவைத்த
என் இரவுக்கனவுகளை அணைத்தபடி
காற்றும் மரங்களும் புன்னகை செய்ய
நான் புரண்டு படுக்கிறேன்
இரவின் நிசப்தத்தைக் கிழித்தபடி
எங்கோ தொலைவில் கேட்க்கும் தெருநாயின் சப்தத்தில்
விழித்துக் கொள்கின்றன என் ஊரின் நினைவுகள்.. 


கிளைகளின் வழியே இறங்கி வரும் இரவை அணைத்தபடி
இலைகளில் அடைந்திருக்கும் மாலைக்கு விடைகொடுக்கின்றன மரங்கள்
சுற்றிவர உன் புன்னகைகள் நிறைந்திருந்த பொழுதொன்றில்
என் நினைவுகளில் வரையப்பட்ட உன் ஓவியத்தை ரசித்தபடி
மெல்லக் கடந்து செல்கிறது இன்னொரு மாலை
ஊரின் புழுதிகளில் ஆடிக்களித்துவிட்டு
இன்றும் அழுக்காகி வருகிறது நிலவு
என் தனிமைகளுடன் பேசிவிட்டுக் காற்று
என் தேசத்தின் கரைகளைத்தேடி இரைந்தபடி விரைகிறது..
ஒரு கனவின் வெளிச்சத்தில் தாய்மண்ணைத்தரிசிக்கும்
விருப்புடன் நான் உறங்கச்செல்கிறேன்...



பிரிவின் துயரில் தோய்ந்தொழுகியபடி
தாய் நிலம் பற்றிய கனவுகள் மனதில் மெல்ல எழுந்து விரிகையில்
நான் தனித்திருக்கிறேன்
என்னைச் சுற்றி இருக்கும் உலகம் 
எரிந்துகொண்டிருப்பதாக கண்டுகொள்கிறேன்
மினுமினுக்கும் வீதி விளக்குகள்
எரிந்து முடிந்த என் தேசத்தின் காயங்களாய்த்தெரிகின்றன
தென்றல் காவிவரும் பனித்துளிகள்
எம் குழந்தைகளின் கண்ணீர்த்துளிகளில் இருந்து ஆவியானதாக உணர்கிறேன்
அழகாய் வழிந்தோடும் அருவிகள்
எம் மக்களின் கண்ணீரை அள்ளிச்சுருட்டி வருவதாய் அழுகிறேன்
உதிரும் சருகளின் வழி நிலமெங்கும்
இறங்கிப் பரவுகிறது என் இனத்தின் நீள்துயரம்
வழியெங்கும் எம் துயரை எச்சமிட்டபடி
கடந்துபோகின்றன சில மாலைப் பறவைகள்
விழிகளைமூடி வழியும் கண்ணீர்த்துளிகளில் மோதி
உடைந்து சிதறுகிறது நிலவு
எழுதுகோலை எறிந்தாவது என் தனிமையை 
விரட்டிவிடத் துடிக்கிறது மனது
தாய் மண்ணே..!
கடக்கவே முடியாத உன் நினைவுகளுடன்
கரைந்துபோகிறது இன்னொரு இரவு...



இயந்திரங்களின் ஓசைகளால் நிரப்பப்பட்ட அடர்ந்த பகல்.....
என்றோ ஒரு நாள் உதிர்த்த உன் புன்னகையை நினைவுபடுத்திய ஓய்வான மாலை.....
காதலர்களின் முத்தங்களில் நனைந்து கிடக்கும் கடற்கரை.....
நாளையைப் பற்றிய கவலைகள் அற்று நடக்கும் 
ஒரு சிறுவனின் நிழல்.....
உன் நினைவுகளால் நிரப்பப்பட்ட கணங்களை விரட்டியபடி பறக்கும் சில வண்ணாத்துப்பூச்சிகள்....  
வீடு திரும்பும் ஒரு விவசாயின் களைத்துப் போன காலடித்தடங்கள்..... 
என அத்தனையும் எளிதில் கடந்து 
மெல்ல வருகிறது ஒரு இரவு
இனி கடக்கவே முடியாத என் மண்ணின் 
நினைவுகளில் நான் கரைந்து கிடக்க...



நேற்றைய நினைவுகளை 
நெருப்புக்குள் புதைத்துவிட்டுக் காத்திருக்கிறோம்...
புலுனிகளும் செம்பகங்களும் தாவிய கிழுவை வேலி 
துளிர்த்தளுக்காய் தவித்திருக்கிறது... 
அணில்கள் கோதிப்போட்ட
வேப்பம்பூக்கள் தூவிய கிணற்றடி 
வெம்மையில் தவிக்கிறது..
தரவையும் தரிசு நிலங்களும் 
ஆள்காட்டி வயல் வெளியும் 
ஆலமர நிழல் உறங்கும் வாய்க்கால்தெருவும்
அம்மாச்சிகள் வளர்த்த 
சாறங்கட்டிய பொடியங்களின் கனவுகளும் 
விடுதலையை தொலைத்த சூனியத்துள் 
தனித்தலைகின்றன..
ராஜகுமாரனைப் பற்றிய கதைகள் 
ஒரு சரித்திரத் துயரமாக நீள்கின்றன...
யாவுமறிந்த நிலவு 
ஊர் முற்றம்தாண்டி 
ஊமையாகப் போகிறது.. 
ஒரு சரித்திரம் உக்கிப்போவதைப் பார்த்து 
இனம் அதிர்ந்து நிற்கிறது...
வெளியே போர் இல்லாமல் ஊர் இருக்கிறது 
உள்ளே வழியில் தேர் அறுந்த வலியை மறைத்தபடி.. 
காலம் யாருக்காவும் காத்திராமல் 
கடந்துபோகிறது என் இனத்திற்கு 
தெருநாயொன்றின் ஊளையைப்போல..
இப்பொழுதெல்லாம் 
முற்றுப்பெறாத ஈழக்கனவுகளுடனேயே 
முடிந்துபோகுமோ என் வாழ்க்கை என்கின்ற பயமே 
கரிய இருளூடு அந்தரித்தலையும் 
மெல்லிய வெண்மையொன்றை போல 
அலைந்தழியும் என் 
ஆன்மாவின் தவிப்பின் காரணமாய்... 
எனக்கான அடையளங்களை தேடியபடி 
பனிதேசத்து வீதிகளில் தனித்தலைகிறது எனதான்மா....
என் ஆன்மா அலையும் ஞாபக வீதிகளில் 
உங்கள் ஆன்மாவும் பயணித்தால் 
ஒரு தேசம் தொலைத்த நாடோடி ஆன்மாவாக 
முடிவில் உணர்த்தப்படப்போவது 
எதுவென்று புரியப்படாமல் போகலாம் 
உங்களுக்கும் 
எனது பயணத்தைப்போல.......



முற்றத்து மலரொன்றின் 
ஒற்றை இதழில் குவிந்து கிடக்கும் 
இளமைக்காலப் புன்னகையை ரசித்தபடி
உதிர்கின்றன பகலின் சருகுகள்

எங்கோ கசியும் இசைத்துளி ஒன்றில்
உயிர்த்து எழுகிறது
என் தேசத்தின் புழுதி வாசமும்
வாழ்க்கையும்

காலத்தைக் கடந்து காற்றில் மிதந்து வந்து
என் சாளரங்களை அடைகிறது
முற்றத்து மரநிழலில் நெடிதுறங்கும்
அம்மாவின் பேரன்பு...

ஆட்காட்டிகளும் வயல்க்கரைகளும்
ஆலமர நிழல்களுமாய்
நிரம்பியிருந்த பால்யங்களின்
துளிகள் சிந்திக்கிடக்க
இனி ஒளித்து வைத்துக்கொள்ளவே முடியாத
எண்ணை வைத்துப் படியத் தலை சீவிய
என் பால்யகால சிறுவனின்
கரம் பற்றிப் பயணிக்கிறது இந்த மாலை.....




மனக்குளம் உடைந்து
உயிர்க்கடல் நிறைகிறது
தாய்மண்ணின்
நினைவுகளால்.....

சமுத்திரத்தின் பின்னால்
தாயகத்தை நோக்கிப் பறக்கும்
பகலின் சுவடுகளை விரட்டியபடி
இருள்ப் பறவையை முந்திக்கொண்டு
என் நினைவுகளும் விரைகின்றன...