Pages

Sunday 26 February 2012

ஈழவிடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியில் சமூகப்பிளவுகளின் செல்வாக்கு....

தமிழர்களின் இனவிடுதலைப்போராட்டம் ஏன் தோல்விகண்டது என்பதற்கான பதிலாக உலக நாடுகளின் எதிர்ப்பே காரணம் என்று எமது ஊடகங்களிலும் எங்களிக்கிடையேயும் சொல்லிக்கொள்கிறோம்.இதில் உண்மை இருக்கின்றது. ஆனால் இந்த உலகத்துக்கு முன் நாம் எப்படி இருந்தோம் என்பதையும், உலக நாடுகள் ஏன் எம்மை எதிரியாகப் பார்க்கத்தொடங்கின என்பதற்கான காரணங்களையும் நாம் யாரும் ஆராய்ந்துபார்க்க விரும்புவதில்லை..அவற்றைப் பேச வெளிக்கிட்டால் அவற்றின் பின்னே மறைந்துள்ள எமது ஊத்தைகளும் வெளிப்பட்டுவிடுமே என்ற பதற்றத்தில் தெரிந்துகொண்டே காரியத்துடன் நாம் யாரும் அவற்றைப் பற்றி பேசுவதில்லை..இங்கு தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டம் என்பதற்க்குள் புலிகளினது மட்டுமின்றி இனவிடுதலைய வேண்டி நிகழ்த்தப்பட்ட தமிழர்களது எல்லாப் போராட்டங்களும் அடக்கம்...

உலகம் எமது போராட்டத்தை தீண்டத்தகாத ஒன்றாக எப்பொழுது பார்க்க ஆரம்பிக்கிறது? எமக்குள் பல இயக்கம்களாகப் பிரிந்து நின்று எங்களுக்குள்ளேயே உயிர் வாழப் போராடுகிறோம்..ஆளையாள் போட்டுத்தள்ளி கொலைகளை செய்கின்றோம். இந்த அடிபிடிகளின் விளைவாக முக்கால் வாசிக் குழுக்கள் காவிவந்த கொள்கையை மறந்துவிட்டு யாரிடம் இருந்து விடுதலை வேண்டிப் புறப்பட்டதோ அவர்களிடமே போய் இணைந்துகொள்கிறன. மக்கள் நம்பிக்கை இழக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் விரக்தியடைகின்றது. மதப்பிளவுவருகின்றது. இது இனப்பிரச்சனையா மதப்பிரச்சனையா என்ற கேள்வி வருகின்றது. பிரதேசவாதம் வருகின்றது. அரசியல் படுகொலைகள். பெருவாரி மக்கள் போராட்டத்தில் இருந்து அந்நியப்பட்டு நிற்கின்றார்கள். இது குழு மோதல். பயங்கரவாதம் என்று உலகம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு சிங்களப் பேரினவாதம் என்ற புறநிலைக் காரணத்தை தவிர என்ன அகநிலை பதில் எம்மிடம் இருந்தது??

சாதியால்,பிரதேச வாதத்தால்,எம்மிடையே உள்ள உட்பிரிவுகளால்(வர்க்கம் மதம் போன்றன) தமிழர்களிடையே இன ஒற்றுமை நிகழவில்லை..இவைகள் இனம் என்ற ஐக்கியப்பாட்டுக்கு ஏதிரான சக்திகள். இந்த சக்திகளை அழிக்காமல் இன ஐக்கியப்பாடு இல்லை. இன ஐக்கியப்பாடு இன்றி இனவிடுதலை இல்லை.பிரிவினை,மேலான்மை கொள்ளும் மற்றும் போட்டி மனப்பான்மை,சமூக வேறுபாடுகளால் நிகழாமல் இருந்த இன ஒற்றுமை என்பவற்றால் இந்த சமூகத்தின் பிரதிநிதிகளாகப் போராடப் புறப்பட்ட போராளிக்குழுக்கள் மிகச்சரியாகப் போராட்டத்திலும் தாங்கள் இந்த சமூகத்தின் பிரதிநிதிகள்தான் என்பதை குத்துப்பாடுகள்,தங்களுக்குள்ளேயே அடிபாடுகள்,பிரிவினைகளின் மூலம் நிரூபித்தனர்.இன ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட பிரிவினைகளைத் தொடர்ந்து சிங்களவர்களுடன் ஒட்டிக்கொண்டு தமிழர்கள் தமது இனவிடுதலைக்கு எதிராகச் செய்த துரோகங்கள்,அதைத்தொடர்ந்து அவர்கள் மேல் நடத்தப்பட்ட கொலைகள்,பொறாமை மற்றும் காழ்ப்புணர்வில் தமிழர்களே தமிழர்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் மேற்கொண்ட பரப்புரைகள் என்பவற்ரைத்தொடர்ந்து எமது போராட்டத்தை இனவிடுதலைப் போராட்டமாகக் கருதாமல் குழுமோதலாக உலகின் மனதில் ஏற்பட்ட தப்பான அதிர்வலைகள்,இவற்றின் நீண்டகால விளைவுகளே மூன்றுதசாப்தங்களுக்குப் பின்னர் எம்மை நோக்கிய சர்வதேச எதிர்ப்பை அந்த நேரத்தில் இருந்தே சிறுகச்சிறுகக் கட்டிவந்து இறுதி அழிவிற்கு இட்டுச்சென்றன.

ஒரு போதும் நோய்க்கு நிரந்தரத்தீர்வு தேடுவதாக எம்மவர்களின் அரசியல் நடவடிக்கைகள் அமைவதில்லை..இது காலங்காலமாக எம்மவர்களிடையே உள்ள ஒரு மிகத்தவறான அணுகுமுறை ஆத்திரத்தில் தனி நபர்கள் மேல் மேற்கொள்ளும் வசைபாடல்களிலும் அவர்களைப் போட்டுத்தள்ளுவதிலுமே எங்களது போராட்ட காலங்களில் அமைந்த பெரும்பான்மையான நாட்கள் ஓடிப் பறந்து விட்டன...இது உலகத்தின் அதிர்ப்த்தியை எம்மேல் கட்டி வளர்க்க உதவியதே அன்றி எமது போராட்டத்திற்க்கு எந்த விதத்திலும் உதவவில்லை..ஒவ்வொரு தனிமனிதனையும் எச்சில் பொறுக்கி நாயாக திட்டும்போது அவன் இன்னுமின்னும் வேகமாக எதிரிக்கோ அல்லது தனது அரசியல் நிலைப்பாட்டுக்கு விசுவாசமாகவோ தனது துரோகப் பந்தை எம்மை நோக்கி எறிந்து கொண்டிருந்தான்..அதே போல் ஒவ்வொரு தனிமனித அரசியல்க் கொலைகளின் பின்பும் இன்னொருவன் அதே கொள்கைகளைக் காவிக்கொண்டு இன்னும் வேகமாக முன்னையவன் செய்தவற்றை செய்துகொண்டிருந்தான்...இந்தப் படுகொலைகள்,வசைபாடல்கள்,சீண்டல்கள்,துரோக முத்திரைகள் ஒரு சதவீதம் தன்னும் எமது போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த உதவவில்லை..மாறாக பல மடங்கு பின்னோக்கி விழவே உதவியது..சிங்கள அரசியல் வாதிகள் மேல் நிகழ்த்த்தப் பட்ட கொலைகள் கொல்லப்பட்டவனின் கொள்கைகளைக் காவி வந்த அரசியலில் செல்லாக் காசாயிருந்த பின்னையவனுக்கு சும்மாயிருந்த மக்களின் ஆதரவையும் பெருக வைத்து முன்னையவனின் இன அழிப்புக் கொளகைகளை போருக்கு ஆதரவான நிலைப் பாட்டை இன்னமும் தீவிரமாக மேற்கொள்ள ஊக்குவித்தது..இந்தியாவின் மேலும் இதே கொள்கையையே நாம் கொண்டிருந்தோம்..தனி நபர்கள் ஏறி நிற்கும் அரசியல் தளங்களைப் பற்றி நாம் விமர்சிப்பதில்லை..அரசியல் வாதியையும் அவன் பொண்டாட்டியையும் விமர்சித்து விசிலடிப்பதில் எங்கள் சக்தியை விரயமாக்குகிறோம்..வெறுமனே சுப்பிரமணிய சுவாமியும்,சோ வும்,சோனியாவும் அழிந்து போய்விடுவதால் இந்த அரசியல் தளம் ஆட்டம் கண்டுவிடப் போவதில்லை..ராஜீவ் காந்தி இறந்ததால் இன்னொரு சோனியாகாந்தி வந்து ராஜிவ் நினைத்ததை செய்து முடித்தாள்...அடிப்படை பார்ப்பனிய சாதி அரசியலை இந்தியாவில் இருந்து ஒளித்துக்கட்டுவதாகவே எமது எதிர்ப்புகள் அமையவேண்டும்...அவைதான்,அந்தக் கொள்கைகளைக் காவிவருபவர்கள்தான் எமது ஈழப் போராட்ட நலன்களுக்கும் எதிரானதாக இந்தியாவில் மிகப்பெரும் தடையாக தொடர்ந்து இருக்கின்றன/ர்..இந்துத்துவ பார்ப்பன மேலாதிக்க சாதி அரசியலை எதிர்த்து ஈழத்தமிழர்களோ ஈழத்தமிழ் ஊடகங்களோ வாயைத்துறந்ததே மிகமிகக் குறைவு அல்லது இல்லையென்றே கூறலாம்..ஆனால் இந்தியாவில் இந்த பார்ப்பன,சாதிய அரசியல் தளத்திற்க்கு எதிராகப் போராடுபவர்களே ஈழத்தமிழருக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

எங்களிடையே இருக்கும் ஜாதி,மத,பிரதேச,ஊர் வெறி இன ஒற்றுமைக்குத் தடையாக இருந்தது,இருக்கிறது..இன ஒற்றுமை இல்லாத தமிழனால் வியட்னாமியனைப்போல் ஒன்று பட முடியவில்லை..ஜாதிகள்,ஊர்கள் அல்லது மதங்களின் அடையாளத்தால் தமிழன் என்ற அடையாளத்தின் மூலம் பெறும் இன்பத்தை விட மிக அதிக சுய இன்பத்தை உணர்கிறது இந்த இனம்..இது நேரடியாகத் தாக்காமல் புலிகளின் போராட்டத்தை வெளித்தெரியாமல் மிக மோசமாக சுற்றிவளைத்துத் தாக்கிக்கொண்டிருந்தது....ஒரு கொஞ்சப் பேர் போராடிக்கொண்டிருந்தார்கள்..ஒட்டு மொத்த சமூகமும் போராடவில்லை..மிகுதிப் பேர் தங்கள் சமூக அந்தஸ்த்தைப் பாதுகாப்பதில் குறியாக இருந்தனர்..அகதியாக இடம்பெயரும் போதும் கூட தங்கள் ஜாதி அந்தஸ்த்தைக் காப்பாற்றிக் கொள்வதில் மிகக் கவனமாகப் பார்த்துக்கொண்டனர்..பொருளாதார இருப்பின் மூலம் தங்கள் அந்தஸ்த்தைத் தக்க வைப்பதற்க்காகப் போராடப் புறப்பட்ட பிள்ளைகளைக் கூட மனத்தை மாற்றி வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்..இன்னும் கொஞ்ச மேல்தட்டு வகுப்பினர் தங்கள் பிள்ளைகளை கொழும்பு போன்ற வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி போராட்டத்தின் நிழல் கூட அவர்கள் மேல் படாமல் பார்த்துக்கொண்டனர்..ஆரம்பகாலங்களில் ஒரு மீனவன் தலைமை தாங்கும் அமைப்பில் இணைவதோ என்று கணிசமானது ஜாதி விசருடன் வேறு அமைப்புக்களில் இணைந்து கொண்டது(கவனிக்க - இங்கு இப்படிப்பட்ட மன நிலையுடன் இயக்கங்களுக்குப் போனவர்கள் போராடப் புறப்பட்டது இனவிடுதலைக்கு அல்ல..தாங்கள் மட்டும் சிங்களவனிடம் இருந்து விடுதலை பெறவேண்டும்..இனத்துக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களிடமிருந்து சமூக விடுதலை பெறக்கூடாது..தொடர்ந்தும் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும்..அவர்களை ஆள்வதற்க்கும் சிங்களவர்களின் இடையூறுகள் இன்றி தாம் வாழ்வதற்க்குமே இவர்கள் போராடப் போனது..இப்படிப்பட்ட மனநிலையுடன் இருந்த,இருக்கும் சமூகத்தால் எப்படி இனவிடுதலையை தமிழன் என்ற அடையாளத்தின் கீழ் ஒற்றுமையாகப் பெற்றெடுக்க முடியும்..?)

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பிளவுகள் பிரதேச வாதத்திற்க்கு மிகச்சிறந்த உதாரணம்... யாழ்ப்பாணியம் மற்றையவர்களை ஏதோ புழுக்களைப் போல் பார்க்கும் மெண்டாலிற்றி(பிரதேச வெறி யாழ்ப்பாணத்துக்குள்ளே சுருங்கும்போது அது ஊர் வெறியாக மாறுகிறதென்பது தமிழினத்தின் இன்னொரு வித பைத்தியக்காற மனநிலை)...இது மற்றைய பிரதேச மக்களின் மனங்களின் உள்ளே அவிந்து குமைந்து கொண்டிருந்த சமூகவலி.. ஒரு சிறு பொறி கிடைத்ததும் குப்பெனப் பற்றிக்கொண்டது...இன ஜக்கியம்,தமிழின விடுதலை என்பவை எல்லாம் இங்கே பின் தள்ளப்பட்டு பிரதேசவாதம் முன்வருகிறது...பிரதேச வெறி என்னும் மனநிலை இந்த சமூகம் அவர்களுக்கு ஏற்படுத்திய அவமானங்கள்,அழுத்தங்களின் மூலமும்,இந்த சமூகத்தில் இருந்து அவர்கள் காலம்காலமாக கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்துமே அவர்களிடம் உருவாகியது..இது தமிழின விடுதலைப் போரை மழுங்கடித்துவிடும் என்ற சிந்தனையை விட பிரதேசப் பற்றே அவர்களுக்கு முதன்மையாகத் தெரிந்தது...இப்படிப்பட்ட தாழ்த்தப்பட்டதும் உயர்த்தப்பட்டதுமான இருவேறு மனநிலையில் உள்ள ஒரு இனத்தினால் ஒற்றுமையாகப் பொதுத் தேசியத்திற்க்காக ஒன்றுபட்டுக் கூட்டாகப் போரிட முடியுமா..? எங்களுக்குள் நிகழ்ந்த குத்துப்பாடுகளும் பிளவுகளுமே இது சாத்தியமற்றது என்பத்ற்க்குப் போதும்போதும் என்கிற அளவுக்கு காரணங்களை கொண்டிருக்கின்றன..

தேசிய அளவில் பிரதேச வாதம் என்னும் மனநிலையுடன் தன் இனத்தையே பிரித்துப் பார்க்கும் இந்தச்சமூகம் பிரதேசத்துக்குள் ஊர் ரீதியாகவும் ஊருக்குள் சாதி ரீதியாகவும் குடும்பத்துக்குள் ஆண் ஆதிக்கத்தின் மூலமும் பிரிவினைகளின் வெவேறு வடிவங்களை கட்டமைத்து தனிமனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.எட்டுப்பேர் இருக்கும் சபையில் இருந்து எட்டுக்கோடி பேர் இருக்கும் சமூகம் வரைக்கும் தன்னை உயர்த்திப் பேசுவதற்க்காக மேலானவனாகக் காட்டுவதற்க்காக ஜாதி,மத,ஊர்,பிரதேச பிரிவினைகளை இந்தச்சமூகம் ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறது.வீட்டுக்குள்ளே இது ஆண் என்ற மேலாதிக்க செருக்கு மனநிலையையும் பெண்களை இயலாதவர்களாக ஆண்களுக்குக் கீழ்ப்படிவானவர்கள் என்ற கருத்தையும்,ஊருக்குள்ளே ஜாதிப் பிரிவுகளையும்,பிரதேசத்துக்குள் ஊர்ப்பிரிவினைகளையும்,தேசத்துக்குள் பிரதேசப் பிரிவினைகளையும் கற்றுக்கொடுத்து சமூகப்பிளவுகளை உருவாக்கி இன ஒற்றுமை என்ற ஒன்றை தமிழர்களுக்கு எட்டாக் கனியாக்கி வைத்திருக்கிறது இந்த சமூகக் கட்டமைப்பு.இந்த சமூகம் காலம் காலமாகக் கற்றுக்கொடுத்த பாடங்களே போராட்டம் என்று வந்த போது போராளிக் குழுக்களுக்கிடையேயும் தங்கள் மேலாதிக்கம் மட்டுமே இருக்க வேண்டும் மற்றையவைகள் தங்களுக்குக் கீழானவையாக இருக்கவேண்டும் என்ற மேலாதிக்க மனப்பான்மையை அடக்கி ஆழும் எண்ணத்தை,போட்டி மனப்பானமையை ஏற்படுத்தி அழிவை,பிளவுகளை நோக்கி அவற்றை வழிநடத்தியது.

இதேவித சமுகப் பிளவுகள்தான் தமிழகத்திலும் இன ஒற்றுமை நிகழாமல் இருக்கக் காரணமாக இருக்கின்றன..ஈழவிடுதலைப்போராட்டம் ஆரம்பித்து முடியும் வரை தமிழகத்தைச் சேர்ந்த திராவிடக் கட்சிகளும் சரி இதர கட்சிகளும் சரி ஈழப்போராட்டம் என்ற ஒரு விடயத்துக்காகவேனும் கடசிவரை ஒரு அணியில் நிற்கவில்லை.அழிவின் உச்சக் கட்டத்திலும் நிற்கவில்லை.ஒரு சின்ன உதாரணம்..தமிழ் நாட்டின் எத்தனை கிராமங்களில் மேல்சாதி என்று தம்மைக் கூறிக்கொள்ளும் தமிழர்கள் தன் சக தமிழனை கீழ் சாதி என்று சொல்லி தன் சொந்த இனத்திற்க்கே தண்ணீர் தராமல் தடுத்து வைத்திருக்கிறார்கள்...ஏரியாக்களைப் பிரித்தும்..சாதிக்கொரு ஏரியாவை ஒதுக்கியும்..சுவர்களைப் போட்டுப் பிரித்துத் தடுத்து உள்ளே வரவிடாமலும் தன் இனத்திற்க்குள்ளேயே நிறையத் தனி நாடுகளைப் பிடித்து வைத்திருக்கிறார்கள்..மலையாளி தண்ணி தரமாட்டேன் என்கிறான் என்பதற்க்கு எதிராகப் போராட ஒவ்வொரு தமிழனையும் ஒற்றுமையாக வரும்படி கூறும்போது ஒற்றுமை அங்கு எப்படி நிகழமுடியும்..?இப்படித்தான் ஈழப்போராட்டத்துக்கு ஆதாரவாகவும் அவர்களால் ஒன்றுபடமுடியவில்லை..பார்ப்பணியம் அதற்க்கு மிகப்பெரும் தடையாக இருந்தது..இங்கேதான் சமூக விடுதலை இல்லாமல் இனவிடுதலை சாத்தியமற்றதென்பது நடைமுறச் சம்பவங்களுடன் விளக்கம் பெறுகிறது.

ஒவ்வொரு தனி மனிதன் மேலும் இந்த சமூகம் கடுமையான அழுத்தங்களையும்,கட்டுப்பாடுகளையும் பிரயோகித்துக்கொண்டிருக்கிறது.இந்த அழுத்தமே சமூகம் மீதான இந்தப் பயமே இந்த இனத்தில் இருக்கும் ஒவ்வொரு தனிமனிதனையும் புரட்ச்சிகரமாகச் சிந்திக்க விடாமல் தடுத்துவைத்திருக்கின்றன.இந்த சமூகத்தில் இருந்த ஒரு குறிப்பிட்ட சதவீதமான இளைஞ்ஞர்களே போராடப் புறப்பட்டார்கள்.அவர்களுக்குள்ளும் மிகச்சிறுவீதமானவர்களே சமூக அடக்குமுறைகளை உடைத்துக்கொண்டு புரட்ச்சிகரமான சிந்தனைகளுடன் போராடப் புறப்பட்டவர்கள்.ஏனையோர் அந்தந்த நேரங்களில் அவர்களின் வீடுகளில் நிலவிய குடும்பச்சூழல்,தனி மனித பிரச்சினைகள்,விரக்திகளில் இருந்து தப்புவதற்க்காகப் போராட்டத்தை ஒரு வழியாகத் தெரிவு செய்தவர்கள்.ஒரு மிகச் சிறு வீதத்தினரைத் தவிர மற்றையவர்களை புரட்ச்சிகரமாகச் சிந்திக்க முடியாதபடி,அப்படிச் சிந்தித்தாலும் அதை நடை முறைப் படுத்த முடியாதபடி அவர்கள் மேல் வெவேறு வடிவங்களில் இந்த சமூகம் மறைமுக அழுத்தங்களை வழங்கிக்கொண்டிருந்தது(உதாரணம் - சாதி மாற்றத்தை எதிர்க்கும் ஒருவன் சாதி குறைந்த பெண்ணைத் திருமணம் செய்தால் சமூகம் எப்படிப் பட்ட அழுத்தங்களை அந்தத் தம்பதிகளுக்கு வழங்கும் என்பது).எமது சமூகம் தனி மனித சுதந்திரத்தை,சுயமாகச் சிந்திப்பதை நடைமுறைப் படுத்தும் சுதந்திரத்தை யாருக்கும் வழங்கவில்லை.இதனால் ஒவ்வொருவரும் ஒருவித சமூக மனநோயுடன் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.சமூகச் சூழலே ஒரு மனிதனை உருவாக்குவதில் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றன.இப்படிப் பட்ட சிந்தனைகளைக் கற்றுக்கொடுக்கும் சமூகம் எப்படிப்பட்ட மனிதர்களை உற்பத்திசெய்துகொண்டிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.இவ்வித சமூகக் கற்பிதங்களைக் கற்று வளர்ந்தவர்கள் போராடப் புறப்பட்டால் எப்படி ஆகும் என்பதைத்தான் நாங்களே சாட்ச்சியாகவும் குற்றவாளிகளாகவும் நின்று பர்த்துக்கொண்டிருக்கிறோம்..

இதற்கெல்லாம் காரணமான இந்த சமூகத்தினை,இந்த சமூகத்தில் இழை ஓடி இருக்கும் நச்சுக் குணங்களை விமர்சிக்காமல் உலகை விமர்சனம் செய்து என்னபயன்..? சிங்கள இனத்திடம் இருந்து தப்பி உயிர் வாழ நடந்த இவ்வளவு போராட்டத்துக்கு நடுவிலும் தனக்குள் அடிபட்டு,பிரிபட்டு,யாரிடம் இருந்து தப்பப் போராடியதோ அவர்களிடம் சரணடைந்து இழிவான இனமாக உலகின் முன் அடையாளமே இழந்து போய்க் கிடந்தும் தனக்குள்ளே பல சாதிகளாலும்,ஊர்களின் பெயராலும் அடையாளம் வைத்துத் தங்களுக்குள்ளேயே தங்களைப் பிரித்துக்காட்டி தனக்குத்தானே பெருமைப் பட்டுக்கொள்ளும் இந்தக் குறுட்டுச் சைக்கோ இனத்தை விமர்சிக்காமல் யாரை விமர்சிக்க...? தமிழ்ச் சமூகத்தில் நீக்கமற வேரோடியிருக்கும் சாதியமும்,பிரதேச வாதமும்தான் தமிழின உணர்வின் முதல் எதிரி. தமிழர்களுக்குள்ளாகவே எல்லோரும் ஒன்று கிடையாது, சமம் கிடையாது என்ற நிலை இருக்கும் போது தமிழன் என்ற ஒற்றுமையுணர்வு,ஒரு மையச் சிந்தனை எப்படி தமிழனது ஆழ்மனதில் உருவாகும்.தம்மை யாரும் ஆதிக்கம் செய்யலாகாது என்று கருதுபவர்கள், தாமும் பிறரை ஆதிக்கம் செய்யலாகாது என்றும் கருதவேண்டும்.அத்தகைய ஆதிக்க மரபுகளை இழிவாகவும் கருதி நிராகரிக்கவும் வேண்டும்.வரலாற்றில் தேசியம், தேசிய உணர்வு என்பதெல்லாம், முடியாட்சியையும் அதன் எச்சங்களையும் அகற்றி, நிலவுடைமை ஆதிக்கத்தையும் அதன் மரபுகளையும், மத நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் ஒழித்துக் கட்டிய பின்னர்தான் வந்திருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சியைக் கொண்டாடுவோர் லூயி மன்னர் பரம்பரயைத் தமது மரபாகப் போற்றுவதில்லை.அந்த மரபை ஒழித்ததிலிருந்துதான் பிரெஞ்சு தேசியம் வந்திருக்கிறது. இங்கோ தமிழ்த் தேசியவாதிகளின் எண்ணமும், கருத்தும் இன்னும் சாதிய ஆளும் வர்க்க மயக்கத்திலிருந்து விடுதலை பெறவில்லை. புரட்சிகரமான தேசிய உணர்வைத் தோற்றுவிக்கத் தேவையான சிந்தனை மாற்றம்,பிற்போக்குத் தனங்களை உடைத்தெறியும் துணிவு இவ்வளவு விலைகொடுத்துப் போராடிய மூன்று தசாப்தங்களுக்கும் மேலாய் நீடித்த போராட்டத்தின் பின்னாவது இந்த இனத்தில் ஏற்பட்டிருக்கவேண்டும்..ஆனால் ஈழத்தின் ஒவ்வொரு கிராமத்திலும்,நகரத்திலும் பிற்போக்குத்தனங்களும் சாதியமும் இப்பொழுதெல்லாம் முன்னரை விட இன்னமும் வேகமாகத் தலை விரித்தாடத்தொடங்கியிருக்கின்றன...தமிழன் ஒன்றுபடத் தடையாக இருக்கும் சமூகத் தடைகளான சாதி ஆதிக்கம்,பிரதேச மற்றும் ஊர் வெறி, குறுந்தேசிய இனவாதம் ஆகியவற்றுக்கு எதிராக தமிழ் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாமல் விடுதலிப் புலிகளையோ இல்லை எந்த ஒரு அமைப்பையோ விமர்சித்துப் பயன் இல்லை..ஏனெனில் அவைகளும் இந்த இனத்தின் மனங்களில் சாதியைப் போல அவர்கள் பெருமை பேசும் ஒன்றாக ஆகிவிட்டது..இது ஒரு மன நோய்...

அநேகமான ஈழத்து எழுத்தாளர்கள் இந்த சமூகப் புண்களைப் பற்றி வெளிப்படையாக எழுதவோ விமர்சிக்கவோ தாயாரில்லாதா பயந்தாங்கொள்ளிகளாக,இப்படி ஒன்று இப்பொழுது இல்லை என்பதை நிரூபிப்பதிலேயே முனைப்பாக இருக்கிறார்கள்..போராளிகளின் காலத்தில் ஒன்றுமே இலாததுபோல் வெளியே அமைதியாக இருந்தாலும் உள்ளே இந்தச் சமூகப்புண்கள் அவிந்து குமைந்து கொண்டிருந்தன..போராளிக்குழுக்கள் ஆரம்பகாலங்களில் இதய சுத்தியுடன் போராடப் புறப்பட்டாலும் அதில் இணைந்தவர்கள் இந்த சமூகத்தால் தயார்ப் படுத்தி அனுப்பபப் பட்டவர்களே..இந்தவிதமான மன நோயுடன் இருந்தவர்களால்தான் கொஞ்சம் கூடத்தாக்குப் பிடிக்க முடியாமல் போராட்டத்தின் முளையிலேயே குத்து வெட்டுடன் பிரிவினைகளை உருவாக்கக் கூடியதாக இருந்தது..மாற்றங்கள் இந்த இனத்தின் அடிப்படை மனநிலையில் ஒருபோதும் உருவாகப் போவதில்லை..அது மிகவும் ஒரு பின் தங்கிய வர்க்க சமூக அமைப்பை தனது அடிப்படை இருப்பாக வனைந்து வைத்திருக்கிறது..எப்படி இஸ்லாம் என்னும் மதவாதத்தில் இருந்து ஒரு போதும் முஸ்லீம்களால் மீண்டு வரமுடியாதோ அப்படியே இந்த இனத்தினாலும் அது போர்த்தியிருக்கும் ஜாதி என்னும் போலி பிம்பத்தை உடைத்துக் கொண்டு வெளியே வர முடியாது..அந்த போலி விம்பம் உடையாத வரைக்கும் தமிழ் இனம் என்ற ஒற்றை உணர்வு ஒருபோதும் இதயத்தின் ஆழத்தில் இருந்து வரவே வராது...வெறும் வார்த்தை ஜாலங்களிலேயே தமிழ்த்தேசியம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்...நடைமுறையில் ஊர்ப் பற்றும் ஜாதிஉணர்வுமே இன உணர்வை மேவித் தமிழர்களின் உடலில் ஓடி இன்னும் இன்னும் பின் தங்க வைத்து சமூகப்பிளவுகளையும் அதைத் தொடர்ந்து இன அழிவையும் நோக்கி அவர்களை வழிநடத்திக் கொண்டிருக்கும்...இது தமிழகத் தமிழனுக்கும் நிகழும்...நிகழ்ந்து கொண்டிருக்கிறது..

இப்படியான எமக்குள்ளே உயிர்வாழும் சமூகப் பிளவுகளே போராட்டத்தின் மிகமிக ஆரம்பகாலங்களில் போராட்டத்தின் தோல்விக்குரிய அத்திவாரங்களைப் பலமாகப் போட்டுவைத்தன.இவைதான் புலிகளினது மட்டுமல்ல தமிழர்களது எல்லாப் போராட்டமும் தோற்றுப் போனமைக்கான காரணங்களுக்கெல்லாம் தாய்க் காரணங்களாகப் புதைந்து போய் வெளித்தெரியாமல் கிடக்கின்றன..ஆனால் துரதிஸ்ட வசமாகத் தமிழ்த் தேசியம் பேசும் யாரும் இவை பற்றி ஒரு போதும் பேசத்தயாரில்லை...இவை சமூகத்தில் நிலவவில்லை என்பதை சாதிப்பதிலேயே அவர்கள் முனைப்பாக இருக்கிறார்கள்..இதேவித இன ஒற்றுமையற்ற சமூகவேறுபாடுகளால் நமது சமூகம் நிறைந்திருக்கும் நிலையில் இந்தவித சமூக நோய்களுடன் இப்படியே இன்னொரு போராட்டத்தை ஆரம்பித்தால் அங்கேயும் முன்னர் எமக்குள் நிகழ்ந்த பிரிவுகள்,பிடுங்குப்பாடுகள்,குழுமோதல்கள் முளையிலேயே நிகழ்ந்து மீண்டும் மீண்டும் போராட்டத்தின் பெயரால் எங்களுக்குள்ளேயே மோதி அழிந்து கொண்டிருப்போம்.இறுதியில் இந்த இனம் இருந்த அடையாளமே இன்றி முற்றாக அழிந்து போய்விடுவோம்...

பெற்ற தோல்விக்கான காரணிகளாக புலிகளையோ,போராட்டக் குழுக்களையோ அல்லது உலகையோ வெறுமனே ஒரு வரியில் குற்றம் என்று சொல்ல முடியாது மாறாக குற்றத்திற்கான உளவியல் பின்னணியில் ஒட்டுமொத்த சமூகமே குற்றவாளியாக இருக்கின்றது. திருத்தம் உரிய இடத்தில் அவசியம். ஆரோக்கியமான ஒரு சமூகக் கட்டமைப்பே அடிப்படையில் போராடுவதற்கான தகுதியை பெறும். அதை நோக்கி அடுத்த சந்ததியை வாளர்க்க முற்படின் சில பலன்கள் அவர்கள் காலத்தில் ஏற்படும். தற்போதுள்ள சமூகத்தளத்தில் இனவிடுதலைக்கான போராட்டம் என்பது இனத்தை துரிதமாக அழிப்பதற்கான போராட்டமாகவே இருக்கும்..இந்த சமூக விலங்குகள் உடைபடாமல் ஒரு வெற்றிகரமான ஒன்றுபட்ட போராட்டத்தை இந்த இனத்தால் ஒரு போதும் நிகழ்த்த முடியாது....

5 comments:

shatheesan Jerome said...

True bro

Unknown said...

உங்களின் ஆழமான தேடல்களுக்கு நான் தலை வணங்குகின்றேன் . நீங்கள் சொல்லியிருப்பது அவ்வளவும் உண்மை உண்மையைத் தவிர வேறில்லை

Unknown said...

arumai

Unknown said...

true,100000 times true.

வேலன் said...

சமூ விடுதலை இல்லாமல் தேசிய இனவிடுதலை என்பது அகநிலைவாதமாகும்.
முதலாளித்துவத்திற்கு முன்னைய ஒடுக்குமுறை எச்சங்கள் என்பது உற்பத்திி மாற்றம் அடையாதவரையில் மாற்றமடையப் போவதில்லை.
சாதியத்திற்கான பொருளாதார உற்பத்தி தளம் என்பது தமிழர் தேசத்தில் சிதைக்கப்பட்டு விட்டது. சிந்தனைத் தளத்தில் இயங்குவது என்பது தவிர்க்க முடியாததே.
------------------ http://velanவேலன்.blogspot.no/2016/01/blog-post_28.html

Post a Comment