Pages

Friday 5 August 2011

மௌனக்காதல்......

ஒத்தையடிப் பாதையில
ஒதுங்கிநான் நடக்கையில
ஓரக்கண்ணாலே என்
உசிர்குடிச்சுப் போனவளே

அப்போ போனஉசிர்
அப்புறமா திரும்பலையே
இப்போ தனிச்சுஎன்
உடல்மட்டும் நிக்கிறதே

சின்னச் சிரிப்பாலே
சிதறவிட்ட புன்னகையால்
கன்னக் குழியோரம்
கவுத்துஎனைப் போட்டவளே

கன்னங் கருங்கூந்தல்
காற்றிலாடும் ரட்டைஜடை
கண்ணில் இளசுகளை
கட்டிவைக்கும் பேரழகு

என்னை ஒருசிரிப்பில்
எங்கோ தொலைச்சுப்புட்டேன்
இன்னும் தேடுகிறேன்
இருக்குமிடம் நீயறிவாய்

கரும்புப் பார்வையொன்றை
காட்டிவிட்டுச் சென்றுவிட்டாய்
கலைஞ்ச எம்மனசு இப்போ
காற்றிலாடும் இலவம்பஞ்சு
***
ஊரும் ஒறங்கிருச்சு
ஊர்க்குருவி தூங்கிருச்சு
பச்சைப் பாய்விரிச்சு
பயிர்கூடத் தூங்கிருச்சு

இச்சை உடலடக்கி
இருக்கும் முனிவர்களும்
சற்றே தலைசாய்த்து
சாய்ந்திடும் சாமத்தில்

பித்துப் பிடிச்சமனம் உம்
பின்னாடி அலையும்மனம்
சற்றும் தூங்கலையே
சாமக்கோழி கூவிருச்சே

பிடிச்சஎன் நோய்தீர
பெருமருந்து உள்ளதடி
எடுத்துச் சென்றஉசிர்
எங்கிட்டத் தந்திடடி
***
சுத்துதடி சுழலுதடி
உச்சந்தலை கிறுகுதடி
சிரிக்கிமவ ஓன்நெனைப்பில்
சீவனே போகுதடி

பொட்டலம்நான் கட்டிவச்சேன்
பொடிமருந்தும் தடவிப்பாத்தேன்
வந்தவலி போகலையே
வாட்டியெனை வதைக்கிறதே

தீராத தலைவலியும்
தீரவழி உள்ளதடி
திருடிச்சென்ற எம்மனசு
திருப்பிஅதைத் தந்துடடி
***
உண்ண முடியுதில்லை
உருசையும் தெரியுதில்லை
உள்ள சோறுதண்ணி
எறக்க முடியுதில்லை

உன்னை நெனச்சமனம்
உண்ண மறுக்குதடி
என்ன செஞ்சுபாத்தும்
எனக்குப்பசி எடுக்கலடி

முன்னப்போல நானாக
மூணுவேளை உணவுண்ண
உங்கூட வந்துப்புட்ட
எம்மனசை தந்திடடி
***
உள்ள நெஞ்சுக்குள்ள
உதிரத்தால் கூடுகட்டி
உன்னை வச்சிருக்கேன்
உசிருக்கு உசிராக

பாவப்பட்ட ஆம்பிளைங்க
பாசத்துக்கு ஏங்குவாங்க
கண்ணீர்விட்டுக் கதறியழ
கடைசிவரை முடியாது

உன்னைக் கரம்பிடிக்கும்
எங்கனவு பலிச்சிடுமோ
ஊமைக் கனவுபோல
எங்காதல் ஆயிருமோ...?
****

தோழர் பாட்டு...!

எட்டூரும் பாத்திருக்க
என் ஆத்தா உச்சி மோர
நான் வளர்ந்தேன் புழுதிக்காட்டில்
எங்கூட அவன் வளர்ந்தான்
சிற்றோடை போல
சிலுசிலுக்கும் தென்றல்போல
பற்றாடை வரிசைபோல
பஞ்சு வண்ண மேகம்போல
பட்டாலே மனதிலே
படபடக்கும் காலங்கள்
சுட்டாலும் எரிக்கேலா
சுவையான கனவுகள்
வற்றாமல் வரிசையாய்
வந்து குதிச்சு
நெஞ்சார சுழன்றடிச்சு
நினைவுகள் பறக்கிறதே

சிற்றாடை கட்டி
சிலிர்த்துக்கொண்டு பேசும்
உற்றாரும் ஊராரும்
உரிமை கொண்டாடா
பொற்றாமரை குளத்தடி
பொதிகை மர நிழலில்
பொழுது விழும் நேரம்
பொரி உறுண்டை வாங்கி வந்து
பொத்திப்பொத்தி நீ திண்ண
பொறுக்காமல் நான் பொங்க
பத்திரமாய் மறைத்து
பையிலே வாங்கி வந்து
பரிவுடனே நீ தர
பணிவுடன் நான் ஏற்க
பார்த்திருந்த பறவைகளும்
பரிவுடனே சிறகசைக்க
பாச நினைவுகள்-நெஞ்சில்
பலகோடி வருகிறதே

ஊரோரம் தோப்போரம்
ஊர்க்குருவி பாட்டோடு
ஊம்பாட்டும் சேந்துவர
உணர்வுகளை அது இழுக்க
எசப்பாட்டு நாம்பாட
ஏரிகளில் மீனோட
வெள்ளாடை கட்டி வந்து
வெயில் போல நிலவடிக்க
மல்லாக்கப்படுத்திருந்து
மார்குறுக்கை கைவச்சு
பாட்டி கதை கேட்டு
பலகனவில் நாம் மிதந்து
நீட்டி நிமிந்து
நிம்மதியாய் தூங்கிய
நேற்றென் காலங்கள்
நினைவில் வருகிறதே.......

மூட்டை முடிச்சோடு
முழுசாய்ப்புலம்பெயர்ந்து
வாழ்ந்த மண்விட்டு நாங்கள்
வரிசையாய் நகர்கையிலும்
ஒண்டாய்ப்போவோம்
ஒருவேளை செத்தாலும்
ஒருபாயில் சாவமெண்டு
புத்தி தெரியாத வயதில் நீ
புலம்பியதும்...
நீ வெம்ப நான் வெம்ப
எமைப்பார்த்து ஊர் வெம்ம
சேர்ந்து நகர்ந்த வண்டி
ஊர்விட்டு ஊர் போய்
சேர்ந்த கதைகள்
நினைவில் வருகிதே....

ஒட்டி ஒட்டி இடமில்லா
ரியூப்பில் காத்தடிச்சு
வக்கிள் எடுத்து
வலிச்ச றிம்பூட்டி
உக்கிக்கிடந்த சைக்கிலுக்கு
உசிர் கொடுத்து
ஒற்றைச்சைக்கிலில்
ஒன்றாக ஊர் சுத்தி
ஒருகால் நீ போட
ஒருகால் நான் போட
புழுதி வீதிகளில்
வலம்வந்த காலங்கள்
கண்ணில் விழுந்தென்னை
கலங்க வைக்கிறதே...

வஞ்சமில்லாது காலங்கள்
வருசங்களாய்ப்பறந்தோட
அஞ்சாத நெஞ்சனாய்
அணைக்கும் நேசனாய்
நெஞ்சிலே மண்பற்றை
சுமந்து நீ வளர
பிஞ்சிலே கோழை நான்
பின்னும் கோழை-என்
நெஞ்சிலே வீரத்தை
எப்படி எதிர்பார்ப்பாய்..
உண்மை தெரிஞ்ச
உத்தமன் நீ-ஒருபோதும்
என்னை உன்னுடன்
வாவென்று கேட்டதில்லை

கண்டந்தாண்டி கடல் தாண்டி
வாழ நான் ஓடிவர
கையசைத்து விடைதந்து
கடமை செய்ய நீ சென்றாய்
என் மனுசி எம்புள்ளை
என்குடும்பம் என்று நான்
சுத்தி சுத்தி சுழன்றடித்து
சுய நலத்தில் கூடுகட்டி
அண்ணாந்து பாக்கையில்
என் மக்கள் என் இனம்
என் தேசம் என்று நீ
எட்ட முடியா உயரத்தில்
ஏறி நின்று கையசைத்தாய்...

ஓடிவந்துன்னை
ஒருக்கால்பார்த்து
காலில் விழுந்துன்னை
கட்டி அணைத்து
உச்சிமோர்ந்து என்
உசிரை விட நினைக்கையில்-நாம்
பத்தி வயிறெரிய
பாசத்தில் துடிதுடிக்க
பாழுங்காலத்தால்
பலர்செய்த சதியால்
குளத்தோரம் பூத்தமரம்
குயில் பாடும் பொதிகை மரம்
குலங்காக்க எழுந்தமரம்
குனியாத வீரமரம்
வேருடன் சாஞ்சிடுச்சே-என்னுடன்
வேதனை தங்கிடுச்சே.....