காலம் என்னைக் கையில் தூக்கி வைத்திருக்கிறது எப்பொழுது என்னுடைய கவிதையின் வேலை முடிகிறதோ அப்பொழுது காலம் என்னைக் கைவிட்டு விடும்'-புதுவை
மரணித்துப்போவது மனிதர்கள் மட்டுமே ஒப்பற்ற கவிஞ்ஞனே உன் கவிதைகளில் எல்லைகளற்று விரிந்து பரந்திருக்கும் பிரபஞ்சத்தில் தமிழின் முடிவு நாள்வரைக்கும் உன் வரிகளில் வாழ்ந்துகொண்டேயிருப்பாய்...காலம் எப்படி உன்னைக்கைவிடும்?..ஒரு காலத்தின் பிரதியாய் உன் எழுத்துக்கள் இருக்கையில்....
காலனே!
கயிறு என்மேலெறிய
கணக்கெடுக்கின்றாயா நாட்களை?
விரைவில் முடியாதென் கணக்கு.
சாக்குறிக்கும் ஜாதகமே பொய்யென
உணர்த்துவேன் உனக்கு.
மரண பயமில்லை எனக்கு.
இறுதி நாளைச் சொல்லவரும் உன் தூதுவனைக்கூட
முகம் மலர்த்தி வரவேற்பேன்.
மேதியுர்தி ஏறிவரும் உன்னையும்
பாயருகே அமர்த்தி
பத்து வருடங்கள் கழித்து வாவெனச் செப்பும்
பலமெனக்குண்டு.
என் ‘அப்பு’ எனக்களித்த வரமிது.
சாவு ஒரு நாள் என்னைத் தழுவும்
என் ஒப்புதலுடன்
போதும் என் ஜீவிதமெனும் நிறைவுடன்
நானாக உன்னைக் கூவியழைத்து
கூட்டிப்போ என்பேன்
அதுவரை உனக்கு
என் முகவரி எதற்கு?
காலா!
சென்று வேறெவனும்
இழிச்ச வாயன் இருப்பான்
எடுத்துச் செல்.
என்னைத் தான் வேண்டுமெனில்
நானாக உன்னை அழைப்பேன்
அப்போது வா தோழா.’
புதுவை இரத்தினதுரை