Pages

Thursday 19 September 2013

நானென்பது யாதென்பேன்..?

நானென்பது யாதெனப் 
புரியவில்லை...

தேடித் தேடிக் களைத்து
முதிர்ந்த மனக்காலத்தின்
ஒரு மூலையில்
பெருங்கேள்விக்குறியுடன்
விழித்துக் கிடக்கிறது அறிவு...

நானென்பது யாதென்பேன்..?

எனை வனைந்த அனுபவங்களா..?
மூளைத்திரட்சிகள் எங்கும்
நீந்திக்கொண்டிருக்கும்
நினைவுகளின் தொகுப்புகளா..?
படித்து முடித்த புத்தகங்களா..?
நம்பும் நம்பிக்கைகளின் சாயைகளா..?
ஜீன்களின் வழி புகுந்த
காலப்படுக்கைகளில் புதைந்துகிடக்கும்
மூதாதைகளின் கனவுகளா..?

சொல்லற்று நிற்கிறேன்...

விளங்க முடியாப் புதிராக
வெளியிலிருந்து பார்க்கையில்
வியப்பாய் விரிகிறது
"நான்"...

ஆயினும்..

விலக்கமுடியாமல்
வழமைபோல்
ஆயிரம் கேள்விகளாய்
மனக்கடலை நிறைக்கின்ற
இன்னுமொரு நாள் துவங்குகிறது..

மலைகளில் இருந்து
இறங்கி
பெருக்கெடுத்தோடும் அருவியாய்
கேள்விகள்...

தேடித்தேடி திரிகிறேன்..

பெருவெளியில்
கழிவிரக்கத்துடன் படர்ந்துகிடக்கும்
காலத்தைப்போலவே
புரிகின்றனவே இல்லை
நள்ளிரவில்
எனை எழுப்பும் கேள்விகள்..

அழகின் வடிவம்
ஒளிரும் இரவே
சொல்...

நானென்பது யாதென்பேன்..?

Thursday 12 September 2013

ஆகையால் உதிர்ந்துகொண்டே இருக்கட்டும்..

பூக்களைப்பிய்த்தெறிந்த
காற்றுக்கு தெரியப்போவதில்லை
பூக்கள் மென்மையானவை
அழகானவை
அன்பை பரப்புபவை என்று...

ஆற்றாமையுடன் 
துவண்டுவிழும்
இதயமொன்றின்
பாடல்களைகேட்கும்
பொறுமையும்
அதற்கு இல்லை..

ஆயினும்...

இதயத்தின்பாடல்களை
கிழிந்து தொங்கும் இதழ்களின்
ஓவியத்தை
ஒடிந்த பல இறக்கைகள்
சுமந்துகொண்டுதான் செல்லும்..

அவற்றில் ஒன்றாய்
என் கவிதைகளும்
பயணிக்கலாம்..

என் நேற்றைவரை
எழுதி முடித்த
விதிக்கிழவன்
மார்பை பார்த்து
என் மலர் மனதை
பிய்த்தெறிய
காற்றை ஏவிவிட்ட
கதைக்கு நீதி கேட்க,
அவன் எழுப்பிய
ஆயிரமாயிரம் சிலுவைகளில்
அறையப்பட்டு
கனவழிந்து
கண்ணீராய் செத்துப்போன
காதல்களின்
மொழியாய் பேச
பூத்திருக்கலாம்
என்கவிதைகள்
உதிர்ந்துபோன
என் மனப்பூவின்
உக்கலில்
கருக்கொண்டு...

யாருக்கு தெரியும்...

ஈரக்காட்டுக்குள்
இடைவழியில் தங்க
ஒரு சிறு குடிசைபோல்
தன் நிலவைத்தொலைத்த
யாராவது ஒரு
ஊமைக்காதலனின்
ஒரு துளி கண்ணீருக்கு
சிறுகூடாய்க்கூட
இருந்துவிட்டும் போகலாம்
என்கவிதைகள்..

ஆகையால்...

கிறுக்கல்களாய்
உதிர்ந்துகிடக்கட்டும்
வெள்ளைத்தாள்களில்
என்காதல்...

வானம் பார்த்து
விதைத்தவை அல்ல
இவை...
உங்கள் வானங்களையே
கண்ணீர் மழையாக்கும்
வசியத்துடன்
விதைக்கப்பட்டவை...

சொல்லுங்கள்..

பசுஞ்சோலையாய் கிடந்த
பொழுதொன்றின் மீதான
பெருவலியோடமைந்த
பாடலொன்றின்
பெருமூச்சின் உஷ்ணம்பட்டும்
ஆவியாகாத
மனக் கடலும் உண்டோ...?

இங்கே...

காதல் மடிந்துபோன
ஆற்றின் கரைகளில்
செத்துக்கிடக்கும்
சிறுமீன்களாய்
அன்பு
வீசி எறியப்படிருக்கிறது

எந்த நினைவும்
அழிய மறுக்கும்
என் இதயத்தின் கவிதைகளை
எழுதி முடிக்க முடியாது..

ஆகையால்...

கிறுக்கல்களாய்
உதிர்ந்துகொண்டே இருக்கும்
வெள்ளைத்தாள்களில்
என்காதல்...

Monday 9 September 2013

பகல்கள் மீதான நினைவுகளால் இறக்கும் இரவின் பாடல்..

காற்றையும்
கடந்துபோகும் நிலவையும்
கரைந்துபோகும் இரவையும்
நினைவுகளால் கழுவிக்கொண்டே
தொலையும் இந்த நாளொன்றில்
கசிந்துகொண்டிருக்கின்றன
கண்ணீர்த்துளிகளாய்
ஞாபகங்கள்...

அன்புச்சிதைவுகளின்
காலப்படுக்கைகளுள்
புதைந்துபோய்விடாமல்
இன்னமும்
என் இமையோரத்தில்
எஞ்சி இருக்கின்றன
உன் மேலான பிரியத்தின் படிமங்கள்..

ஒப்புக்காகவும்
ஒப்பனைக்காகவும்
சிரித்தபடி
உப்புக்கரிக்கும் இமைகளின்
ஓரங்களில்
ஓலமிடும் விசும்பல்களாய்
கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறது
மனது தனியாக...

முன்னொரு நாள்
சேர்ந்து நடந்த
நீயில்லாத
தெருவொன்றில்
துருவக்காற்றில்
ஒடுங்கிப்போகும்
ஓரிரு ஓர்க் மரங்களும்
நடுங்கியபடியே கடந்துபோகும்
நாலைந்து சிறுவர்களும்
விளக்கமுடியாத அந்தரத்தை
விதைத்துவிட்டு
அந்நியமானவொன்றாகவே
போய்விடுகின்றனர்..

தளம்பல்களை வெளிவிடும்
ஒரு நீர்வட்டம் போல
ஏகாந்த பொழுதுகளில்
மனக்குழத்தில் இருந்து
ஏதிலியாய்
எழுகின்றன உன் நினைவுகள்..
உருவமற்ற அவற்றின் கனதிகளால்
இதயத்தில் இருந்து
வழிந்துகொண்டிருக்கிறது
ஆற்றாமையின் நிழல்..

கண்ணீரால் தூக்கழித்து
கவிதைகளினூடான
என் ஒவ்வொரு
தற்கொலையிலும்
நிராதரவான என் நேசிப்பின்
கைகளை நானே பற்றிக்கொள்ள
மீண்டும் கவிதைகளாய்
உயிர்த்தெழவேண்டியதாகிறது.....

காலம் என்
கவிதை மரணங்களில்
திருப்தி அடையாது
இனி நான் ஒருபோதும்
எழுதமுடியாத கவிதை ஒன்றை
எதிர்பார்க்குமானால்
மரணம் வரை காத்திருக்கட்டும்..

அதுவரைக்கும்...

தளர்ந்துகிடக்கும் மனதையும்
தாலாட்டவல்ல பாடல் ஒன்றை
தேவதைகளின் கொலுசுகளாய்
ஓசைலயமிட்டபடி
உங்கள் கவிதைகள் சுமந்துவரும் என்றால்
உங்களுக்கான கல்லறையின்
ஆத்மதிருப்தியின் வாசம்
அலாதியானது...அமைதியானது...