Pages

Thursday 12 September 2013

ஆகையால் உதிர்ந்துகொண்டே இருக்கட்டும்..

பூக்களைப்பிய்த்தெறிந்த
காற்றுக்கு தெரியப்போவதில்லை
பூக்கள் மென்மையானவை
அழகானவை
அன்பை பரப்புபவை என்று...

ஆற்றாமையுடன் 
துவண்டுவிழும்
இதயமொன்றின்
பாடல்களைகேட்கும்
பொறுமையும்
அதற்கு இல்லை..

ஆயினும்...

இதயத்தின்பாடல்களை
கிழிந்து தொங்கும் இதழ்களின்
ஓவியத்தை
ஒடிந்த பல இறக்கைகள்
சுமந்துகொண்டுதான் செல்லும்..

அவற்றில் ஒன்றாய்
என் கவிதைகளும்
பயணிக்கலாம்..

என் நேற்றைவரை
எழுதி முடித்த
விதிக்கிழவன்
மார்பை பார்த்து
என் மலர் மனதை
பிய்த்தெறிய
காற்றை ஏவிவிட்ட
கதைக்கு நீதி கேட்க,
அவன் எழுப்பிய
ஆயிரமாயிரம் சிலுவைகளில்
அறையப்பட்டு
கனவழிந்து
கண்ணீராய் செத்துப்போன
காதல்களின்
மொழியாய் பேச
பூத்திருக்கலாம்
என்கவிதைகள்
உதிர்ந்துபோன
என் மனப்பூவின்
உக்கலில்
கருக்கொண்டு...

யாருக்கு தெரியும்...

ஈரக்காட்டுக்குள்
இடைவழியில் தங்க
ஒரு சிறு குடிசைபோல்
தன் நிலவைத்தொலைத்த
யாராவது ஒரு
ஊமைக்காதலனின்
ஒரு துளி கண்ணீருக்கு
சிறுகூடாய்க்கூட
இருந்துவிட்டும் போகலாம்
என்கவிதைகள்..

ஆகையால்...

கிறுக்கல்களாய்
உதிர்ந்துகிடக்கட்டும்
வெள்ளைத்தாள்களில்
என்காதல்...

வானம் பார்த்து
விதைத்தவை அல்ல
இவை...
உங்கள் வானங்களையே
கண்ணீர் மழையாக்கும்
வசியத்துடன்
விதைக்கப்பட்டவை...

சொல்லுங்கள்..

பசுஞ்சோலையாய் கிடந்த
பொழுதொன்றின் மீதான
பெருவலியோடமைந்த
பாடலொன்றின்
பெருமூச்சின் உஷ்ணம்பட்டும்
ஆவியாகாத
மனக் கடலும் உண்டோ...?

இங்கே...

காதல் மடிந்துபோன
ஆற்றின் கரைகளில்
செத்துக்கிடக்கும்
சிறுமீன்களாய்
அன்பு
வீசி எறியப்படிருக்கிறது

எந்த நினைவும்
அழிய மறுக்கும்
என் இதயத்தின் கவிதைகளை
எழுதி முடிக்க முடியாது..

ஆகையால்...

கிறுக்கல்களாய்
உதிர்ந்துகொண்டே இருக்கும்
வெள்ளைத்தாள்களில்
என்காதல்...

No comments:

Post a Comment