Pages

Monday 9 September 2013

பகல்கள் மீதான நினைவுகளால் இறக்கும் இரவின் பாடல்..

காற்றையும்
கடந்துபோகும் நிலவையும்
கரைந்துபோகும் இரவையும்
நினைவுகளால் கழுவிக்கொண்டே
தொலையும் இந்த நாளொன்றில்
கசிந்துகொண்டிருக்கின்றன
கண்ணீர்த்துளிகளாய்
ஞாபகங்கள்...

அன்புச்சிதைவுகளின்
காலப்படுக்கைகளுள்
புதைந்துபோய்விடாமல்
இன்னமும்
என் இமையோரத்தில்
எஞ்சி இருக்கின்றன
உன் மேலான பிரியத்தின் படிமங்கள்..

ஒப்புக்காகவும்
ஒப்பனைக்காகவும்
சிரித்தபடி
உப்புக்கரிக்கும் இமைகளின்
ஓரங்களில்
ஓலமிடும் விசும்பல்களாய்
கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறது
மனது தனியாக...

முன்னொரு நாள்
சேர்ந்து நடந்த
நீயில்லாத
தெருவொன்றில்
துருவக்காற்றில்
ஒடுங்கிப்போகும்
ஓரிரு ஓர்க் மரங்களும்
நடுங்கியபடியே கடந்துபோகும்
நாலைந்து சிறுவர்களும்
விளக்கமுடியாத அந்தரத்தை
விதைத்துவிட்டு
அந்நியமானவொன்றாகவே
போய்விடுகின்றனர்..

தளம்பல்களை வெளிவிடும்
ஒரு நீர்வட்டம் போல
ஏகாந்த பொழுதுகளில்
மனக்குழத்தில் இருந்து
ஏதிலியாய்
எழுகின்றன உன் நினைவுகள்..
உருவமற்ற அவற்றின் கனதிகளால்
இதயத்தில் இருந்து
வழிந்துகொண்டிருக்கிறது
ஆற்றாமையின் நிழல்..

கண்ணீரால் தூக்கழித்து
கவிதைகளினூடான
என் ஒவ்வொரு
தற்கொலையிலும்
நிராதரவான என் நேசிப்பின்
கைகளை நானே பற்றிக்கொள்ள
மீண்டும் கவிதைகளாய்
உயிர்த்தெழவேண்டியதாகிறது.....

காலம் என்
கவிதை மரணங்களில்
திருப்தி அடையாது
இனி நான் ஒருபோதும்
எழுதமுடியாத கவிதை ஒன்றை
எதிர்பார்க்குமானால்
மரணம் வரை காத்திருக்கட்டும்..

அதுவரைக்கும்...

தளர்ந்துகிடக்கும் மனதையும்
தாலாட்டவல்ல பாடல் ஒன்றை
தேவதைகளின் கொலுசுகளாய்
ஓசைலயமிட்டபடி
உங்கள் கவிதைகள் சுமந்துவரும் என்றால்
உங்களுக்கான கல்லறையின்
ஆத்மதிருப்தியின் வாசம்
அலாதியானது...அமைதியானது...
 

1 comment:

Post a Comment