Pages

Monday 21 May 2012

எப்படி நான் தாங்கிடுவேன்...

அப்பன் அடித்தாலே
ஆவென்று அலறுபவன்
எப்பன் நோவெனிலும்
ஏலாமல் கிடந்தமவன்
முற்றம் முழுதும்-பிணமாகிச்
சுற்றங்கள் செத்
த கதை
எப்படி நான் தாங்கிடுவேன்
ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே...

கோழி அடைகிடக்க
குஞ்சுக்காய் தவித்தமகன்
கேவி அழமுதலே ஊரை
கூவி அழைத்த மகன்
கத்தி அழ யாருமற்று-சொந்தங்கள்
கொத்துக்கொத்தாய் செத்தகதை
எப்படி நான் தாங்கிடுவேன்
ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே....

விக்கல் எடுத்தாலே
கெக்கலித்து நின்றமவன்
முள்ளுத் தைத்தாலே பாயில்
மூன்று நாள் படுத்த மவன்
செல்லுக்குத் துண்டுகளாய்-என்னினம்
சிதறிப் பிளந்த கதை
எப்படி நான் தாங்கிடுவேன்
ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே....

நெருப்புச் சுட்டாலே
நேர்த்திக்கடன் வைச்ச மவன்
கறுப்பு காத்தென்று
திருஸ்டி சுத்திப் போட்டமவன்
கருகிப் பொஸ்பரஸில்-என்னினம்
பொசுங்கிக் கிடந்த கதை
எப்படி நான் தாங்கிடுவேன்
ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே....

பெத்தவளைக் கணநேரம்
பிரிஞ்சு செத்த மவன்
புத்தி பேதலித்துப் போகுமிடம்
புரியாமல் நின்றமவன்
செத்ததாய் மார்பினிலே-எம் குழந்தை
ரத்தம் குடித்த கதை
எப்படி நான் தாங்கிடுவேன்
ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே....

பட்டினியாய் நோன்பிருக்கும்
தாய்க்காய்ப் பரிதவித்துப்போன மவன்
பசியறியா நாய் வளர்ந்த வீட்டுப்
பாசத்தில் வளர்ந்த மவன்
ஒட்டிய வயிற்றுடன் பிஞ்சுகள் - உணவுக்காய்
ஓலமிட்டு அழுத கதை
எப்படி நான் தாங்கிடுவேன்
ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே....

பொன்வண்டு செத்தற்காய்
பொங்கிப்பொங்கி அழுத மவன்
தும்பிச் செட்டை உடைந்ததற்க்காய்
துடிதுடித்துப் போன மவன்
சொந்தங்கள் சிதறிப்போக - ரத்தத்தால்
நந்திக்கடல் சிவந்த கதை
எப்படி நான் தாங்கிடுவேன்
ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே...

செம்பருத்தி பட்டதிற்கு
சேதி சொல்லித் திரிஞ்ச மவன்
புங்கை மரம் முறிந்து விழ
புதுக் கன்று நட்டமவன்
எங்கள் குலம் அழிந்துபோக - உலகம்
செங்கம்பளம் விரித்தகதை
எப்படி நான் தாங்கிடுவேன்
ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே...

தொலைந்துபோன பூனைக்காய்
அலைந்தலைந்து திரிந்த மவன்
கலைந்து போன குளவிக்கூட்டுக்கு
காவல் இருந்த மவன்
கூட்டமாய் வந்தவர்கள் - கடற்கரையில்
குடும்பமாய் தொலைந்த கதை
எப்படி நான் தாங்கிடுவேன்
ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே..

கொத்துக்கொத்தாய்ச் செத்துப்போக
பித்துப்பிடிச்சு நின்ற மவன்
செத்துச் செத்துப் பிழைத்தபடி
உலகின் சேதிக்காய் தவித்த மவன்
பரிதவித்து நாம் கிடக்க - நீதியின்றி
பாதி உயிர் போயிடுச்சே...
மே மா
ம் வந்திடுச்சே
மீதி உயிர் தின்றிடவே...