Pages

Tuesday 6 January 2015



வண்ணங்கள் மங்கிய ஓவியச்சிதறல் ஒன்றில்
கையசைக்கிறது காலம்....
தீர்ந்துபோகாத வெயில்ப்பொழுதுகள் மீது
நெடுமூச்சின் ஆவி படர
மென்மயிர்ப் பூனைபோல சிலிர்த்துக்கிடக்கிறது
மனது.....
உன் முத்தங்களின் நினைவுகள் புரையேற
தவித்தெழுகிறது ஆன்மா.....
உனக்கான என் தீராக்குரலோ
வெறுமை இட்டு நிரப்பும் நீயற்ற வெற்றிடத்தின் அழுத்தத்தில் நசியுண்டபடி.....
கடக்க முடியாத வழியின் தூரமாய் ஞாபகங்கள் விரிந்துகிடக்க
அள்ளித்தேக்கிவந்த நினைப்பில் ஒழுகுகிறது
பிரிவின்துயர்.....
அறையப்பட்ட சிலுவையில் மரித்துயிர்த்து
கண்ணீரின் உவர்ப்பில் மாட்டிக்கொண்ட
காயமாய் நேசம்.....
உனக்காய் சேர்த்துவைத்த புன்னகைகளில்
பழுப்பேறிக்கிடக்கின்றன எதிர்பார்ப்புகள்....
மெளனம் வந்தமர்ந்த வீட்டில்
சூரியன் குடித்த சொற்களாய்ப்போயின
நம் உரையாடல்கள்....
நம் புன்னகையின் மரணம் அறிந்து
நீர் பூக்கும் மழைக்காலங்களும்
நீலமாய் விரியும் நெடுவானமும்
ஏதுமுரைக்கா மெளனத்தில்.....
கிழிஞ்சலாகித்தொங்கும் காதலின் நரம்புகளின் மேல் அமர்ந்திருந்து மீட்டுகிறது
திறந்திருந்த ஜன்னல் வழியே நுழைந்துவந்த நிலவு....
கடந்துபோகும் இசையில் வலுக்கத்தொடங்குகிறது
பெருந்தோப்பிலிருந்து தனித்துப்போன கவிதை ஒன்று...


எந்த நதியை நான் குடித்தேன்..
எந்தக் கடலை நீ அருந்தினாய்..
வாழ்வு முடியாமல் நீண்டதே ஓர் கனவொன்றில்..
ஆயிரம் சூரியன்கள் உதித்த அவ்விரவில்தான்
உன் பால் முகத்தை நான் முழுதும் பார்த்தேன்..
என் இரவெல்லாம் அன்று தீர்ந்தன..
நதியொன்றில் நான் கரைந்து கடலொன்றில் மிதந்தேன்..
என் கரையெங்கும் நீயிருந்தாய்..
கொஞ்சம் கவிதைகள் கைகள் நிறையக் கூட இருந்தன..
அள்ளிப்பருகிய கடல் சிந்திய துளிகளில்
நான் பருகி எஞ்சிய உன் முத்தம் வழிந்தது..
ஒருகோப்பை வைனும்
உன் ஒரு துளி புன்னகையும்
என் வாழ்வை நிரப்புமென்று
என் வழிகள் எங்கிலும் நான் அறிந்திராப் புதினம் நிகழ்த்தினாய்..
கால்கள் தொடாத நிலமொன்றை
ஒரு கனவைப்போல நான் பார்த்தேன்..
நீயிருந்தாய் நானிருந்தேன்..
எஞ்சிய யாவும் ஒரு மாயம்போல் தெரிந்தகாட்டில்
உன் காதல் நிறைந்து தழும்பிய கோப்பை என் கைகளில்..
காலமது எங்கோ கரைந்து போனது காற்றில்..
அண்ணார்ந்து பார்த்தேன்
ஓடிக்கொண்டிருந்தன மேகங்கள்..
ஒழுகி வழிந்துகொண்டிருந்தன காலங்கள்..
குனிந்தபோது அத்தனை வேகமாய்
உருகிபோய்விட்டிருந்தன எல்லாப்பனியும்..
நீயில்லை.. முன்பொருகாலம் நாம் குடித்த நேசிப்பின் கடல் இல்லை..
காலியாகிக்கிடக்கிறது உன் முத்தங்களை நிறைத்து
என் கைகளில் வழிந்த கோப்பை...
ஊசியிலை மரங்களின் இலைகள் எல்லாம் இப்போ உதிர்ந்துவிட்டன..
அவற்றின் புன்னகையை பறித்த
துயர்ச்சாம்பல் படிந்த காலத்தைக் கூடவே நானும் கடக்கிறேன்..
பாசி பிடித்துக்கிடக்கிறது உன் கைகளில் வழிந்த
காதலை ஏந்திய வீதிகள்..
வெறுப்பின் பாடலை உரைத்துப் பூத்த மலரில்
உனைப் பார்த்து நானறியேன்..
யாதொன்றின் துயராயும் உனைப்பார்த்து நானறியேன்..
பின் யார் நம் காதலைப் பறித்தது..
நாமருந்திய தேனீரில் கசப்பின் விதைகளை யாரிட்டார்..
வாழ்வை ஒரு இசையைப்போல,
காலங்களை எதிரொலிக்கும் ஓவியத்தைப்போல,
ஊசியிலை மரமொன்றின் துயரறியாப் புன்னகையைப்போல
பருகிக்கொண்டிருக்கையில்
எம் தேனீரில் கசப்பின் விதைகளைப்போட்டவர் யாரோ..
உன் வேரின் அடியில் இருந்து என் காதலைப்பாடிய குயில்
எங்கோ தொலைந்துவிட்டது..
பூக்களில் சிரித்த உன் காதல் உதிர்ந்துவிட்டது..
வானம் மறைத்து நிறைத்த உன் அன்பு வற்றிவிட்டது..
என் நதியின் கரைகளில் இப்போ நீயில்லை,
என் படகின் துடுப்பில் இப்போ உன் விசை இல்லை..
வழ்வு ஒரு சமுத்திரமாய் என் நதியைக் கலக்கையில்
மெதுமெதுவாய் மூழ்கத்தொடங்குகிறேன்..
உன்னைப்போலவே இனியிரு கைகள் வந்தணைத்தால்
நானும் தன் கரைகளில் விட்டுச்செல்லக்கூடும்
என் தடங்களை என்கிறது இரக்கமில்லாக் கடல்..
கரைகளில் உனை ஒழித்துக்
கண்ணீரை நிரப்பிய விதியைச் சபிக்கின்றன
கடலிடையில் போராடும் என் துயர்க்குமிழிகள்..


நினைவு நனைத்த சிறகை உலர்த்தும்போதெல்லாம்
கோதுண்டும் கொத்துண்டும் விடுகின்றன
யாதேனும் சில அழுத்தமான காயங்கள்..
பச்சையங்களைக்குடித்தபின் பட்டமரத்தின் செதில்களையும்
தட்டிப்பார்க்கும் தீவிரத்துடன் காலம்..
இலைகளற்ற காலவெளிக்குள் வதைபடுகிறது தனிமை..
வழிப்போக்கனின் புன்னகைகூட அற்ற தெருவில்
பாதங்கள் முழைத்து நடக்கின்றன
வசந்தம் பூத்திருக்கக்கூடிய காட்டுக்கு..
ஓராயிரம் கவிதைகளில்
அன்பு நழுவி ஓடிக்கொண்டிருக்கிறது..
ஆயினும் எரியும் நாட்களில் பிரியத்தின்
ஒற்றை நீர்த்துளிகூடக்கிடைக்கா வாழ்வு..
நேசிப்பின் தேம்பல்களைக் கவனியாது
நேரமுட்களில் முளைத்து நடக்கும் நாட்களின்
குதியில் மிதிபடுகிறது வாழ்க்கை..
கவனிக்கத்தவறிய காயம் இளைப்பாறத்துடிக்கும் இருக்கையில்
அலட்சியத்தின் முட்கள்..
கடந்துபோகும் காற்றில் வலுக்கத்தொடங்கி
வெளிக்குள் பரவுகின்றன பழைய முகங்கள்..
கடைசித்துளி நம்பிக்கையும் தீர்ந்த
யெளனம் தழைத்த பூங்காவில்
பேச்சை அலங்கரித்துப் பின் பலியிட்டபோதெல்லாம்
சிவப்பாய்க் கசிந்த தீவிரத்தின் சூட்டில்
அன்பு சாம்பலாயானது..
ஒழுகியோடி அலசிய சொற்களில் கழுவுண்டன
அவரவர்க்கான சாய முகங்கள்..
மிச்சமிருக்கும் சொற்களைத்தூவி முகங்களைக்கடந்து
மீண்டுமொருமுறை மெளனத்தின் ஆற்றில் மிதக்கையில்
துயரம் படகாகிவிடுகிறது..
வலித்த கைகளிலோ வந்தமர்ந்து முழைத்துவிடுகிறது
துடுப்பாய் ஓர் கவிதை..

வாழ்வின் பெருமழையே..
என் முற்றத்தில்
என்றைக்குமாய் என் காதலைச் சொரியப் பொழியும் மழையே...
இவ்வாழ்வின் பசுந்தரையை பார்த்தேயிராத மனிதரையும் நனைக்கும் மழையே,
கரைந்தும் கதறியும் நனைந்தும் சிதறியும் துளிகளாய் உருமாறியும் உயிரோடு உயிர் பேசுவோம் வா மழையே..
என் கரையெல்லாம் நிறைத்து நிறைந்திருக்கும் ஆதிக்காதல் சுமக்கும் வானமும் சாகுமோ சொல் மழையே..
அவளற்ற பொழுதுகளில் நீ பெய்த துளிகளில் நான் நனைந்தே அறியேன் என்று
முன்பொரு நாள் உன்தோழியாய் இருந்த என் தோழியின் காதல் அறியுமோ சொல் மழையே..
வாழ்வை ஒரு கவிதையாய் கடக்கும் மனிதர்களைப்பாட வந்த மழையே,
உன் கானமெல்லாம் கசிந்துருகுகிறது பூமி..
அப்பாடலில் என் கூரை நனைந்து அன்றொரு நாள்
நீ நனைத்த என் காதல் ஊரும்போதெல்லாம் உடுத்தியிருக்கும் துயர ஆடைகள் நனைந்தழுகின்றன..
யாரறிவார் உன் துளியுள் கலந்து கரைந்த என் துயரை யாரறிவார்..
என்னையும் அவளையும் நனைத்த உன் பழைய மழை கரைந்து மறைந்து ஏதோ ஒர் பெருங்கடலில் இன்று மிதக்கக்கூடுமோ என் நினைவுகளைப்போல..
நம் மோனத்தில் கலந்து கசிந்து காற்றாய் மிதந்த அந்த வானத்தை இன்று தொலைத்துவிட்டோம்..
யாரும் கேட்டுணராப்பாடலை நீயும் அவளும் நானும் நிலவும் ரசித்திருக்கப்
பூத்திருந்த மலரொன்றின் புன்னகை மெல்ல இறங்கி அவள் கரங்களில் தவழ்ந்து என் தலை தடவிய நொடியில்
சிலிர்த்த இரவும் பூங்காவின் இருக்கையும்
இன்றும் ஏந்தியிருக்கக்கூடும் அப்பூவின் புன்னகையை..
என்னையும் உன்னையும் அவளையும் தழுவிப்
பின் வெட்கத்தில்
வானத்தில் துணையின்றி அலைந்துகொண்டிருந்த
ஒற்றை வெண்மேகத்தையும் சுமந்துகொண்டு
நழுவி ஓடிய தென்றல் இன்று அவள் குழந்தையை தழுவிக்கொண்டிருக்கக்கூடும்..
யாரறிவார் அந்த ஒற்றைமேகம் இன்று என் தோழில் கனப்பதை..
யாரறிவார் அப்பழைய பூங்காவின் இருக்கையில் என் தனிமையை..
கோடை ஒன்றில் மழையை பொழிந்த அந்தக் காதல் எங்கென்று நீயறிவாயா..
என் சோலை முழுதும் வேர்களை நனைத்த நேசிப்பின் நதி ஊற்று எங்கென்று நீயறிவாயா..
என் தோப்பில் இன்று குயில்கள் இல்லை..
கூவி அழைக்கக் குரல்களும் இல்லை..
காதல் வற்றிய நதி செத்துக் கோடை பாய்கிறது அதன் தடமெங்கும்..
மழையே..வாசம் கொண்டு வந்து முன்பொருநாள் பூத்திருந்த என் வசந்தத்தில் நனைத்து நனைத்து நனைந்த மழையே..
என் தேகம் எங்கும் நுழைந்து
ஆன்மாவின் அருகிருந்து
காதலைப்பொழிந்த அப்பழைய வசந்தத்தைக்
கண்டால்
இக்கவிதையை பொழிந்துவிடு என் பிரிய மழையே..

ஒட்டாத வாழ்வு...


------------
யாருமற்ற நதியோரம்
நானும் 
நாலைந்து இருக்கைகளில்
தனிமையும்..
நான் முற்றிலும் தீர்ந்துவிட்டதாய்
நதியிலும் நதிக்கரையில்
உதிர்ந்த சருகுகளிலும்
மிதந்தபடி உரைக்கிறது
மனது
காலம் கடந்து செல்கிறது
நான் மட்டும்
நகரமுடியாமல்
ஏதோ ஓர்சந்தியில்..
பழைய வாழ்க்கை
இழையோடக்
கண்கள் பனிக்கிறது..
வந்தமர்ந்த கிளையில்
வாழ்ந்ததற்கான அடையாளங்களோ
ஞாபகங்களோ எதுவுமில்லை..
கட்டிடக் காட்டிடையில்
தொலைந்தே போயின
காலடித்தடங்கள் யாவும்..
நிலமோ என் நிழலை
வெறுக்கிறது
நதிகளோ என் பாடலை
மறுக்கின்றன
தெருக்களிலோ என்
சுவடுகள் பதியவில்லை
ஒட்டிக்கொள்ளும்படியாக
இந்தமண்ணிண் வாசனைகளில்
எதுவுமேயில்லை..
பனிமூடிய நாட்களெல்லாம்
பட்டுக்கொள்ளாமலே கடக்கின்றன..
எருக்கலைக்கும்
நாயுன்னிக்கும்
புரிந்த என் மொழியோ
பைன் மரத்திற்கும்
செயின் நதிக்கும்
புரியப்போவதே இல்லை..
மனமும் உடலும்
பிரிந்தேகிடக்க
சலிக்காமல் வீசும்
குளிர்காற்றிலோ
சலனங்கள் எதுவுமில்லை
விலகித்தூரமாய்
வாழ்விருக்க
நொருங்கிய பாத்திரமாய்ச்
சிதறிக்கிடக்கிறேன்
முகமற்ற அந்நியனுக்கு
அடையாளங்களேது
உயிர் எரிக்கும் துயரெழ
வானத்தின் கீழே பிரமாண்டமாகிறது
வெயில்காட்டின்
ஞாபகச் சுமை...

இடிபாடுகளினுள் கூடுகட்டும் பறவை..


-----------------------
காலம் இருள்கவிழ்ந்து
ஒரு யுக நீட்சியாய் நகர்கையில்
மூடுண்ட பிசாசு வெளியொன்றினுள்
வாழ்வு வியாபித்திருந்த பொழுதுகளை
ஒருதொகை நினைவுகளை
சுமக்க இயலாமல்
சுமந்திருந்திருக்கிறது
இடிபாடுகளினுள் கூடுகட்டும்
பறவை
சிதைக்கப்பட்ட நிலமொன்றின்
மறக்கப்பட்ட பிரதிநிதி அது
வாழ்வின் மீதான ஆசை
ஏதுமில்லை அதற்கு
ஆயினும் வாழ்தல்
மரணத்தால்
விதிக்கப்பட்டிருக்கிறது..
தோப்பிலிருந்த
பறவைகளை எல்லாம்
பிடுங்கி வீசி எறிந்துவிட்டது
போர் கொட்டிய பாழ்மரணம்
எஞ்சியவையும் சுயம் சிதற
தூரப்பறந்துவிட்டன
கலங்கித்ததும்பும் விழிகளில்
துயரத்தை விரித்து
வாழ்வை தனியான வயலொன்றில்
விதைக்கும்
ராட்சதக்கவலைகளோடிருக்கிறது
அப்பறவை
யாருமில்லாப் பறவைக்கு
கைவிளக்கு வெளிச்சங்களையும்
அணைத்துவிடுகின்றன
மழைக்கால ஒழுக்குகள்
நதியில் விழுந்த துளிகளாய்
கண்ணீரெல்லாம்
வாழ்வு முடியும் திசையின்
தொலைவு வரை
சலிக்காமல் துரத்துகிறது
காலங்களை மீறியதோர் சாபம்
இறுகிப்போன பறவையின்
மெளனம் கலைத்து
மரணம் கைவிட்டுச்சென்ற
காலத்தின் கடைசியிடம்
பேச்சிடைப்பொருளானபோது
கோபக் கவளங்கள் நெஞ்சிறங்க,
அழிவின் அலறல் தெறித்துச்சிதறிய
தோப்பில்
விசமுட்கள் துளைத்த தாய்ப்பறவை
தன்மடியில் இருத்திவைத்து
இறக்குமுன் இட்ட முத்தம்
இரத்தச்சிவப்பென ஒளிர்ந்தது
அதன் அலகுகளில்
கேட்க மட்டுமே பழக்கப்பட்ட நானும்
செவிகளாக மட்டுமாயினேன்
பறவையின் துயரிற்கு...
வக்கிரங்களை வாரியெடுத்து 
சாகசக்காற வெளியில் 
நீதியின் சாம்பல் மேடுகளில் 
பூத்துத் திளைக்கும் உலகே..!

காற்று ரணமாய்க் கிழிக்கையில் 
எடுத்துச்செல்ல இயலாத பெருந்துயரத்தை - தம் 
மெலிந்த சிறகுகளில் சுமந்திருக்கும் 
பறவைகளின் கதையை 
எந்தக்காலத்தின் அறைகளுக்குள் 
ஒளித்து வைக்கப்போகிறாய் ...?

சாக்காட்டுத் தேசங்களிலிருந்து  
துயர் கசியும் பறவைகளின் பாடலை 
யாரேனும் உணர்ந்ததாய் தெரியவில்லை,
அன்பின் பாடல்களைக்கேட்டறியா 
செவிட்டு மனிதர்களுக்கிடையில்
ஒடுக்கப்படும் தேசங்களின் பாடல் மோதி அலைகிறது...

எம் நிழல்களில் உழல்வனவோ 
விடுதலையை தொலைத்த 
வெம்மையின் எச்சங்களாயிருக்கையில்,  
அழுதழுது கண்ணீர் இலையுதிர்ந்து கிடக்க 
வெயில் நதியில் மிதக்கும் 
கைவிடப்பட்ட தேசங்களின் மனிதர்களிற்காக 
ஒரு துளி நிழலை எங்கே பெறுவோம்..?  

தீயெரித்த வனமொன்றில் சிதறிய பறவைகள் நாம்
எம் தாயிருந்த கூடும் அற்றுப்போன போது 
பொருளற்ற இருட்பாடல்களை பின்னிக்கொண்டு 
அதனிடையே நெடுந்தூக்கத்தில் உறைந்து போனோம்..

எங்கள் கூடுகள் பற்றியும் 
கூரிய சொண்டுகள் கவ்விய 
எம் குஞ்சுகள் பற்றியும் 
காற்றிடமோ நீரிடமோ குறிப்புகளேதுமில்லை.. 
கிளையில்லை, 
ஆகாயமில்லை, 
ஒரு கூண்டு கூட இல்லை.. 
எம் பழைய முகங்கள் எதிலும் இல்லை, 
குருதி தோய்த்து வரைந்தவை எல்லாம்  
பட்டுப்போன வனமொன்றில்...

தேய்ந்தழியக் காத்திருக்கும் 
நோய் கொண்ட வரலாற்றுடன் 
காலங்காலமாய் கடந்துவந்த வாழ்வின்
அடையாளங்கள் எதுவுமின்றி
பிரபஞ்சத்தின் புதிர் நிறைந்த பக்கங்களுக்குள்
தொலைந்துதான் போவோமோ..?

வலி சுமக்கும் பறவைகளே..!  
உலகத்தில் எமதிருப்பையும் உரைப்பதற்காய் 
தனித்த சிறகுகளுடன் எழுந்தவர்கள் நாங்கள்
எல்லாம் கடந்து விட்டன..  
காற்றிப்போ எம் பக்கம் இல்லை, 
உங்கள் கண்ணீரில்தான் ஒரு துளி 
கடன் வாங்கி நாமும் அழவேண்டும்.. 

திரையை இழுத்து மூடிக்கொள்ளும் நீதியின் 
முகத்தில் மோதிய இயலாமை...
மிகுந்த நம்பிக்கைகள் சிதைந்த ஏமாற்றங்கள்...  
குருதியின் சுவை கொண்ட கண்ணீர் ... 
வெளிறிய ஆகாயம் அதிரும் ஒப்பாரிகள்...
கனவுகளைப் புசித்துப் பெருகும்  இருள்...
காலியான தேநீர்க்கோப்பையிலிருந்து வரும் 
இறந்த காலத்தின்  வாசனை.. 
ஏகாந்தத்திலும் அதற்கு அப்பாலும் கசியும்
ஏக்கங்களுடன் அடைபடும் வாழ்க்கை...

என 

அகண்ட இவ் வெறுமைவெளிகளை கடக்கையில் 
ஒரு சொட்டு சுதந்திரத்தைக்கூட யாசிப்பவர்களுக்கு 
இந்த உலகம் மிகத் தனிமையானதுதான்...  
    
ஒ வலி சுமக்கும் 
எம் பிரிய பறவைகளே..!   
உங்கள் கண்ணீரில்தான் ஒரு துளி 
கடன் வாங்கி இனி நாமும் அழவேண்டும்..

















வக்கிரங்களை வாரியெடுத்து
சாகசக்காற வெளியில்
நீதியின் சாம்பல் மேடுகளில்
பூத்துத் திளைக்கும் உலகே..!
காற்று ரணமாய்க் கிழிக்கையில்
எடுத்துச்செல்ல இயலாத பெருந்துயரத்தை - தம்
மெலிந்த சிறகுகளில் சுமந்திருக்கும்
பறவைகளின் கதையை
எந்தக்காலத்தின் அறைகளுக்குள்
ஒளித்து வைக்கப்போகிறாய் ...?
சாக்காட்டுத் தேசங்களிலிருந்து
துயர் கசியும் பறவைகளின் பாடலை
யாரேனும் உணர்ந்ததாய் தெரியவில்லை,
அன்பின் பாடல்களைக்கேட்டறியா
செவிட்டு மனிதர்களுக்கிடையில்
ஒடுக்கப்படும் தேசங்களின் பாடல் மோதி அலைகிறது...
எம் நிழல்களில் உழல்வனவோ
விடுதலையை தொலைத்த
வெம்மையின் எச்சங்களாயிருக்கையில்,
அழுதழுது கண்ணீர் இலையுதிர்ந்து கிடக்க
வெயில் நதியில் மிதக்கும்
கைவிடப்பட்ட தேசங்களின் மனிதர்களிற்காக
ஒரு துளி நிழலை எங்கே பெறுவோம்..?
தீயெரித்த வனமொன்றில் சிதறிய பறவைகள் நாம்
எம் தாயிருந்த கூடும் அற்றுப்போன போது
பொருளற்ற இருட்பாடல்களை பின்னிக்கொண்டு
அதனிடையே நெடுந்தூக்கத்தில் உறைந்து போனோம்..
எங்கள் கூடுகள் பற்றியும்
கூரிய சொண்டுகள் கவ்விய
எம் குஞ்சுகள் பற்றியும்
காற்றிடமோ நீரிடமோ குறிப்புகளேதுமில்லை..
கிளையில்லை,
ஆகாயமில்லை,
ஒரு கூண்டு கூட இல்லை..
எம் பழைய முகங்கள் எதிலும் இல்லை,
குருதி தோய்த்து வரைந்தவை எல்லாம்
பட்டுப்போன வனமொன்றில்...
தேய்ந்தழியக் காத்திருக்கும்
நோய் கொண்ட வரலாற்றுடன்
காலங்காலமாய் கடந்துவந்த வாழ்வின்
அடையாளங்கள் எதுவுமின்றி
பிரபஞ்சத்தின் புதிர் நிறைந்த பக்கங்களுக்குள்
தொலைந்துதான் போவோமோ..?
வலி சுமக்கும் பறவைகளே..!
உலகத்தில் எமதிருப்பையும் உரைப்பதற்காய்
தனித்த சிறகுகளுடன் எழுந்தவர்கள் நாங்கள்
எல்லாம் கடந்து விட்டன..
காற்றிப்போ எம் பக்கம் இல்லை,
உங்கள் கண்ணீரில்தான் ஒரு துளி
கடன் வாங்கி நாமும் அழவேண்டும்..
திரையை இழுத்து மூடிக்கொள்ளும் நீதியின்
முகத்தில் மோதிய இயலாமை...
மிகுந்த நம்பிக்கைகள் சிதைந்த ஏமாற்றங்கள்...
குருதியின் சுவை கொண்ட கண்ணீர் ...
வெளிறிய ஆகாயம் அதிரும் ஒப்பாரிகள்...
கனவுகளைப் புசித்துப் பெருகும் இருள்...
காலியான தேநீர்க்கோப்பையிலிருந்து வரும்
இறந்த காலத்தின் வாசனை..
ஏகாந்தத்திலும் அதற்கு அப்பாலும் கசியும்
ஏக்கங்களுடன் அடைபடும் வாழ்க்கை...
என
அகண்ட இவ் வெறுமைவெளிகளை கடக்கையில்
ஒரு சொட்டு சுதந்திரத்தைக்கூட யாசிப்பவர்களுக்கு
இந்த உலகம் மிகத் தனிமையானதுதான்...
ஒ வலி சுமக்கும்
எம் பிரிய பறவைகளே..!
உங்கள் கண்ணீரில்தான் ஒரு துளி
கடன் வாங்கி இனி நாமும் அழவேண்டும்..



ஓர் குளிர் நாளில் வெயிற்சுமையுடன் 
மெளனமுறங்கும் அக்கடற்கரைப்பூங்காவில் வந்தமர்ந்தேன்.. 
என் கைகளில் கனக்கின்ற ஞாபகங்களில் சிறிதை
காற்றில் மெதுவாய் இறக்கிவைத்தேன்..
எம் கதைகளை காற்று இரைந்து பேசத்தொடங்கியது..
மரங்களுடனும் செடிகளுடனும்
முத்தங்களைப்பரிமாறிக்கொண்டிருந்த மாலையுடனும்
அது கண்ணீருடன் பேசத்தொடங்கியது..
வெள்ளையின மனிதர்களின் கதவுகளை மோதி
அலைந்துவந்த காற்று பேசிக்கொண்டே இருந்தது..
யூகலிப்ஸ் மரத்தின் கீழ் நடுத்துண்டு உடைந்த இருக்கையும்
நரம்பு மட்டும் எஞ்சிய பழைய வசந்தம் ஏதோ ஒன்றின் முடிவில்
உதிர்ந்த மஞ்சல் இலைகளும்
சலிக்காமல் கேட்டுக்கொண்டிருந்தன..
கடலின் பின்னால் புதைந்த என் சந்ததியோடு உதிர்ந்த இலைகளுக்கு இப்போ நரம்புகளும் உக்கத்தொடங்கியிருக்கும்..
நெஞ்சடைத்தது துயரெழுந்து..
என் கைகளில் கனக்கின்ற ஞாபகங்களில் மிகுதியை கொந்தளித்துக்கொண்டிருந்த கடலலைகளின் மேல் நீந்தவிட்டேன்..
அலைகளின் மேல் மிதந்த அந்திச்சூரியனும் கடலும் காயம் மிகுந்து இரத்தச்சிவப்பாயின..
மேகங்கள் உடைந்துபோய் அழுதன
நான் என்ன செய்வேன்..
இந்த ஞாபகங்களைத்தானே என் மண்ணிலிருந்து எடுத்து வந்தேன்..
பிறந்தபொழுதும் தவழ்ந்தபொழுதும் நடந்தபொழுதும்,
பின் வளைந்த முதுகுகளில் வாழ்வை சுமந்துகொண்டு அகதியாய் அலைந்த போதும்
எம் தலைமுறையுடன் கூடவே வந்தது போர்..
எம் பாடல்கள் வாளொன்று கிழித்த உடலொன்றிலிருந்து ஒழுகிய இரத்தம்போல் அல்லாமல்
திராட்சையின் சுவையோடு இசைந்திருக்கவும் முடியுமோ..?
நாங்கள் காவி வந்தவற்றை உங்கள் தாழ்வாரங்களில் விரிப்பதாக முறைக்காதீர்கள்..
அவை நீங்கள் எங்கள் வனங்களில் தூவிய முட்செடிகளின் கனிகள்தானே..
காலம் ஓர் திருப்பத்தில் கவிழ்த்தது எம் இனத்தை..
அதன் ஊழிக்கிடையில் மூழ்கிப்போனது எம் மூன்று தசாப்தப் பெருங்கனவு..
மிச்சமிருக்கும் தலைமுறைக்கோ மிதிபட்டபடி ஓர் கனவு..
முட்களில் இருந்து தனை மீட்க
வனாந்தரங்களைக் கடந்து
ஓர் தேவதூதன் வருவான் என்று சொன்னது
என் வாசங்களில் இடறிய ஏதோ ஓர் றோசாப்பூ..
காலங்களை எண்ணிக்கொண்டிருந்தபோது மாலை வந்துவிட்டது உதிர்வதற்கு..
பாவம் அந்த றோசாப்பூ..
காற்று என் தலைமுறையின் கனவிற்காய்
துயருடனே இரைந்துபாடுகிறது..
கடல் அழுதுவடிகின்றது..
நான் உதிர்ந்து கிடக்கும் அந்த மஞ்சல் நிற இலைகளின் நரம்புகளுக்கிடையே
அலையும் என் புதைந்த சந்ததியிடம் மண்டியிட்டுக்கொண்டிருக்கிறேன்..
தொலைவாய் ஓர் பேருந்தின் இரைச்சலில்
என் நிகழ்காலம் விழிக்கிறது..
எழுந்து நடக்கிறேன்..
முகத்திலும் மார்பிலும் துரத்தி வந்தமர்ந்து அந்நியன் என்கிறது துருவக்குளிர்..
நானோ அத்தெருவில் அனாதையாய் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறேன்...

ஒளிமிகக்கொண்ட காலம்...


நீதியின் கரங்களை
சிலுவையில் அறைந்தபோது
எழுந்த குரல்களையும் கொன்றனர்
சாத்தான்களின் பிரதிநிதிகள்
சாட்சி சொல்ல அஞ்சும் நிலவும்
ஊமையான நட்சத்திரங்களும்
நாய்கள் குரைக்கும்
நாட்களின் அச்சத்தில்
பகைமையின் வாள்களோடு
வேட்டையாடுகிறது காடு
வீடும் கூடும்
விலைமதிப்பற்ற சுதந்திரமும் போயின
கரையவோ கடக்கவோ முடியாத துயரம்
தீப்படாமலே எரியும் வலி
வேலிகள் அரிக்கப்பட்ட தசாப்தங்கள் கடந்து
வேலிகளே அற்ற நூற்றாண்டில்
வெறுப்புமிழ சொல்லித்தரப்படுகிறது
மிதிபட்டபடியே சேர்ந்து வாழும் ஜனநாயகம்
எந்தவீதியிலும் பயணமில்லை
தொலைந்துபோயினர் வழிப்போக்கர்கள்
இறுகிப்படிந்திருக்கிறது தெருவெங்கும் மெளனம்
இரண்டொரு எறும்புகள் மட்டும்
சுமக்கமுடியாமல் சுமந்து செல்கின்றன
தெருவின் துயரை
வனப்புமிக்கதொரு வம்சம்
வாழ்ந்துபட்ட ஊர்களின்
வீரத்தின் தொல்லெச்சங்களை
உண்டு செரித்திடுமோ காலம்..?
பெருகும் கோடை ஒன்றின்
தகிக்கும் தீராவெக்கையை
கடக்க முடியாமல் தவிக்கும் இனத்தை
கவ்வியிருக்கின்றன
வறுமையின் வேட்டைப்பற்கள்
பசியுமுழும் கண்கள் வழியோடி
இருள் குவிந்த கன்னங்களில் தேங்கும்
கண்ணீரில் பிரதிபலிக்கிறது
இழப்புகளின் நினைவுகளும்
இயலாமையின் சிதறல்களும்
பிள்ளைகளை தொலைத்த தாயொருத்தியின்
குலுங்கும் மார்பிலிருந்து கொட்டும் சோகத்தை
அண்ணணை சுட்டுக்கொன்ற வீதியைக் கடக்கும்
தம்பியின் வலியை
வன்புணர்ந்து கொல்லப்பட்ட மகளின்
புதைகுளியை தாண்டும் தந்தையின்
வெடித்துக்கிளம்பும் துயரை
இனி எந்த மொழியிலும் சொற்கள்
விஞ்சப்போவதில்லை.
மேசைகள் நிறைய
ஈரமூறிய வார்த்தைகளை தூவும் உலகே
தூரமாய்
கோடை விளைந்த வயல்களில் இருந்து
காற்றள்ளி வரும் குரல் கேட்கிறதா..?
துளி ஈரத்தை உன் கொல்லையில் இன்னும்
மிச்சம் வைத்திருப்பாயானால் சொல்
எம் ஒளி மிகக் கொண்ட காலத்தை ஏன் கொன்றாய்..?
மழை இரவொன்றில்
காணாமல்போன நிலவைப்போல
நெருப்புத்தூள்களை உமிழ்ந்துவிட்டு
உறங்கிப்போன எரிமலை ஒன்றைப்போல
எம் ஒளி மிகக்கொண்ட காலம்
இறைமை பேசும் உன் தேசங்களின் தீயில்
இறந்ததெமக்கொரு கனவைப்போல
கருணையின் நிறத்தையும்
அன்பின் வர்ணத்தையும்
அறிவுக்கும் உலகே
மக்களை கொன்ற மன்னனையும்
பிணங்களைப் புணர்ந்த சேனைகளையும்
கண்டுகொள்ளாமல் விட்டபோது
பிணியெல்லாம் பரவிய தேசத்தை மறந்தபோது
இன அழிப்பின் துயர்க்குரலை மறைத்தபோது
ஒரு ஒளி நிறைந்த காலத்தைக் கொன்ற
பழி நிரம்பி உறைந்துபோனது
உன் பாதைகள் எங்கும்..