Pages

Tuesday 6 January 2015



வண்ணங்கள் மங்கிய ஓவியச்சிதறல் ஒன்றில்
கையசைக்கிறது காலம்....
தீர்ந்துபோகாத வெயில்ப்பொழுதுகள் மீது
நெடுமூச்சின் ஆவி படர
மென்மயிர்ப் பூனைபோல சிலிர்த்துக்கிடக்கிறது
மனது.....
உன் முத்தங்களின் நினைவுகள் புரையேற
தவித்தெழுகிறது ஆன்மா.....
உனக்கான என் தீராக்குரலோ
வெறுமை இட்டு நிரப்பும் நீயற்ற வெற்றிடத்தின் அழுத்தத்தில் நசியுண்டபடி.....
கடக்க முடியாத வழியின் தூரமாய் ஞாபகங்கள் விரிந்துகிடக்க
அள்ளித்தேக்கிவந்த நினைப்பில் ஒழுகுகிறது
பிரிவின்துயர்.....
அறையப்பட்ட சிலுவையில் மரித்துயிர்த்து
கண்ணீரின் உவர்ப்பில் மாட்டிக்கொண்ட
காயமாய் நேசம்.....
உனக்காய் சேர்த்துவைத்த புன்னகைகளில்
பழுப்பேறிக்கிடக்கின்றன எதிர்பார்ப்புகள்....
மெளனம் வந்தமர்ந்த வீட்டில்
சூரியன் குடித்த சொற்களாய்ப்போயின
நம் உரையாடல்கள்....
நம் புன்னகையின் மரணம் அறிந்து
நீர் பூக்கும் மழைக்காலங்களும்
நீலமாய் விரியும் நெடுவானமும்
ஏதுமுரைக்கா மெளனத்தில்.....
கிழிஞ்சலாகித்தொங்கும் காதலின் நரம்புகளின் மேல் அமர்ந்திருந்து மீட்டுகிறது
திறந்திருந்த ஜன்னல் வழியே நுழைந்துவந்த நிலவு....
கடந்துபோகும் இசையில் வலுக்கத்தொடங்குகிறது
பெருந்தோப்பிலிருந்து தனித்துப்போன கவிதை ஒன்று...

No comments:

Post a Comment