Pages

Monday 21 October 2013

பெய்து முடிந்த மழையின் ஈரம் உலராத கவிதை ஒன்று..


இப்போதெல்லாம்
நாம் சந்தித்த இடங்களில்
யாருமே இருப்பதில்லை...
சிந்திக்கிடக்கின்றன
காய்ந்துபோன
சில மஞ்சள் பூக்களும்
நம் நினைவுகளும்....

காதலும் கவிதைகளுமாய்
மாறி மாறி துலங்கிய அந்நாட்கள்
தொலைந்துவிட்டன..

மாலை வெய்யில் தன் மஞ்சள்
நிறமிழந்த ஒரு கோடையில்தான்
நேசிப்பை விற்று
காய்ந்துபோனது உன் இதயம்...

நினைத்துப்பார்க்கையில்
நெஞ்சத்தின் ஆழத்துள்
மெல்ல இறங்குமொரு முள்..

அந்தரவெளியும்
கலவர நிழலுமாய்
நூறாயிரம் கதைகளை
சுமந்தலையும் இதயத்தை
உடைத்துவிடுகிறது
ஒற்றைக்கண்ணீர்த்துளி..

பொழுதில்லை அழுவதற்கும்..

நினைத்துக் கவலையுற்று
துன்புற்றுவிட்டு பனிக்குளிரில்
வேலைக்கு இறங்கிச்செல்லவே
போய்விடுகிறது நாள்...

என் கவலை எல்லாம்
பறவைகள் காதல் செய்ய
படர்ந்துகிடந்த
அவ்வீதியோர மரங்களுக்கு
இலையுதிர்காலத்தைக் கூட்டிவந்த
முதல் பறவை
நாமாக இருக்கக்கூடாதென்பதுதான்...

கண்ணீரால் முடியும் என் கவிதைகள்...


காதல் வெளியில்
தூக்கம் தொலைத்த
இலையுதிர்கால
இரவொன்று
ஒளிர்கின்றது...

இதயத்தில் இருக்கும் 
பிரிவுத்துயர் தணல்கின்ற
எரிமலைகள்
எரித்துவிடுகின்றன
ஒளிர்கின்ற இரவை..

அறையெங்கும்
நிரம்பிக்கிடக்கும்
விளக்கொளியின் நடுவே
கண்களுக்கு தெரியாமல்
குறுக்கும் மறுக்குமாய்
அலைகின்றன நினைவுகள்...

பாறையெனக் கிடந்த
உன் பொழுதுகளின் மீது
பக்குவமாய் நான் வரைந்த
காதல் ஓவியத்தை
நீ கிழித்தெறிந்த போது
சிதறியவைகளாக இருக்கலாம்..

புன்னகை எழுதிய முகத்தை
கண்ணீர் மூடிமுடிக்கும் முன்
நினைவுச்சிதறல்கள்
சுழன்றெழும் வீச்சில்
சிறைப்பிடிக்க வேண்டும்
கவிதைகளில்...

பாதைகள் எங்கும்
காதலுடன் பரவிக்கிடந்த
பூக்களை
வாரி அணைக்க சேர்த்துவைத்த
அன்பை எல்லாம் மொத்தமாய்
உன் பிரிவு தின்றுவிட்டது..

வலியைத்தவிர
இனி எதைக்கொண்டு நிரப்புவேன்
என் கவிதைகளை..?

வெறும் ஆற்றாமைகளும்
பிரிவும்
வலியுமாய் என் கவிதைகள்
வீங்கிப்பருத்திருப்பதாக
நீங்கள் சொல்லலாம்...

சொல்லுங்கள்..

பறித்தெடுத்த பூக்களால்
நிறைந்திருக்கும்
வரவேற்பறைகள்
அழகும் வண்ணமுமாய்
ஒளிர்ந்திருக்கலாம்

ஆனால்..

பூக்களைத்தொலைத்த
மரங்களின் உணர்வுகள்
ஒருபொழுதும்
பூத்துக்கிடப்பதில்லை..

தன் நிலவைத்தொலைத்த
என் கவிதைகளும்தான்..

உன்மேலான காதலால்
உருகும் இதயத்தின் பாடலின்
துயரத்தில் கரைந்து
துயிலாதிருக்கிறது
இந்த இரவு..

எழுதுகோல் தவிக்கிறது
எல்லாவற்றையும்
சிறைப்பிடிக்க...

முடிவதில்லை..

எப்பொழுதும்
புன்னகை எழுதிய முகத்தை
கண்ணீர் மூடி
முடித்துவைக்கிறது
என் கவிதைகளை...

நிறைவேறாத அன்பு
நீர்ச்சுழியாய்
இப்புறமும் அப்புறமும்
இதயத்தை அலைக்க
நடுவில் இயல்பிழக்கிறேன்..

இவ்வழியா அவ்வழியா
எவ்வழியால்
எழுகின்றன நினவுகள்..?
 

பெய்து கொண்டே இருக்கட்டும் நினைவுகள்..




கனவுகளில்
காய்ந்த நிலத்தில்
விதைகளைதேடுகிறேன்
என் காதலை துளிர்ப்பதற்காய்..

மனவெளியெங்கும்
இன்னும் எழுதாத என் கவிதைகளைப்போல
காய்ந்துகிடக்கிறது
கண்ணீர் வற்றிய காதல் பூக்கள்..

ஆவியாகி
இன்னமும் பொழிவதற்காய்
சிலிர்த்துக்கொண்டே இருக்கின்றன
ஒரு மாலைப்பொழுது
எமை நனைத்த மழைத்துளிகள்..

நாம்தான்
கரைபிரித்துக்கட்டப்பட்ட
துருவ நதிகளாக
திசை பிரிந்து...

எம் காதலுக்கு ஒளியேற்றமுடியாத
சோகத்தில்
அழுதபடி கடந்துபோகிறது
ஒவ்வொரு இரவும் நிலவு..

இப்போதெல்லாம்
நாம்பேசிய வார்த்தைகளில்
சிதறிக்கிடக்கின்றன
அன்பைத்தொலைத்த
கண்ணீர்ப்பூக்கள்...

ஏன் மெளனம்
உன் கரைகளில்..?

உன்
எண்ணங்களை வனையத்தெரியா
வண்ணாத்திப்பூச்சி நீயோ..?

இல்லை
என் சோகங்கள் எழுதியகண்ணீர்த்துளிகள்
இன்னமும் உன் பூமியை சேரவில்லையோ..?

புரியவில்லை....

காதல் வெளியில்
பெய்யாத மழையில் நனைந்த
என் பாடலின் மீது நடந்து
எப்படி உன் நினைவுகள்
என்னுள்ளே நுழைகின்றன..?

காய்ந்த நிலத்தில்
புதைந்திருக்கும் காதலை
சுமந்தபடி
நிராகரிப்பின் ஒற்றைசாட்சியாய்
எப்படி
என் கனவுகள் மட்டும்
இன்னும் செழித்து வளர்ந்துகொண்டே இருகின்றன..?

மடியாத என் கனவுகளை கேட்டேன்..

முடியாத உன் என்றோ ஒரு இரவில
தொடங்கலாம் என் நினைவுகள்

நம்பிக்கைகள் கூச்சலிட்டன...!