Pages

Monday 17 October 2011

அகதியானவர்கள்..

சுதந்திரமடையா இந்தியாவின்
தண்டகாரன்யக்காடுகளிலும்
பாலஸ்த்தீனத்தின் 
இடிந்தகட்டிடங்களிலும்
குர்தீஸின் குக்கிராமங்களிலும்
ஈராக்கின் வீதிகளிலும்
விடுதலைக்காக வீழ்ந்தவர்களின்
ஆன்மாக்கள்
வீடுகளை விட்டு
புழுதித்தெருக்களை விட்டு
சுதந்திரமாக ஊளையிடும்
தெருநாய்களை விட்டு
ஞாபகங்களை மட்டும்
எடுத்துச்செல்லும்படி
விரட்டப்பட்டவர்களின்
முகாம்களில் தங்கியிருக்கின்றன

ஈராக்கின் எண்ணெய் ஊற்றுக்கள்
இல்லாதுபோகும்படியும்
வன்னியின் வனங்கள்
வாடிப்போகும்படியும்
ஆப்கானின் மலைகள்
பொடியாகும்படியும்
காக்ஷ்மீரின் வீதிகள்
பிளந்துபோகும்படியும்
ஆகியிருக்கிறது
அகதியாக்கப்பட்டவர்களின்
துயர்ச்சுமையால்

விரட்டப்பட்டவர்களின்
வீட்டுமுற்றத்தில்
விட்டுச்செல்லப்பட்ட
சாய்வுநாற்காலியில்
உட்க்காந்திருக்கிறது
பள்ளியிலிருந்துவரும்
குழந்தைகளைத்தேடும்
தாத்தாவின் மனசு
வாசத்தை தொலைத்து
வாடிப்போயிருக்கும்
வளவுப்பூக்கள்
அகதியாக்கப்பட்ட
வீட்டுக்காரனின்
வாசத்தை தேடுகின்றன

வெறுமை
துப்பாக்கிகளின்
துணையுடன்
ஊரை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது
யாரையும் நெருங்கவிடாமல்
அணல்காற்றடித்து
எழுந்த தீயில்
எரிந்த வெளியில்
எதிர்காலத்தை தேடும்படி
சபிக்கப்பட்டிருக்கிறது
ஒரு சந்ததி...

No comments:

Post a Comment