Pages

Saturday 15 October 2011

எனது நாள்...

வடதுருவத்து 
நடு நிசியில்
விழித்துக் கொள்ளும்
என் உயிர்ப்பறவை
மனவறையின்
சுவர்களைப் 
பிளந்து வெளியேறுகிறது
கண்டங்களைத் தாண்டி
என் ஊரின்
வீதிகளில்
காலாற
உலாவித் தீர்ப்பதற்காய்...

வழிமறிப்புச் சாவடிகள்
கொழுத்தப்பட்ட வீதிகளில்
பாரதியின் கனவுகளும்
புதுவையின் கனவுகளும்
கூட
தூரத்தே
பயணிக்கின்றன...

பச்சை அரக்கர்கள்
விரட்டி அடிக்கப்பட்டதாக
எல்லோரும்
மகிழ்வுடன் பேசிக்கொள்கிறார்கள்
முன்னரைப் போல
மனிதர்கள் யாரும்
தங்கள் அடையாளங்களை
சட்டைப்பைகளில்
சரிபார்த்துக் கொள்ளாத
வீதிகளில்...

என் மனக்கப்பல்
அசைந்தலைந்த தொடுவானம்
பால் வீதிகளில்
என் 
கற்பனைச் சிறகடிப்பின்
பயணங்களைச் சேமித்துவைத்த
விண்மீண்கள்
நிலாத் தோழன்
எல்லாமும் 
தொடர்கின்றன
கூடவே
என்
பயணம் முழுமையும்...

வடமேற்
பருவக் காற்றின்
சிராய்ப்பில் கிறங்கும்
பொருக்குப் பூவரசின்
பழுப்பு இலைகளின்
சலசலப்பில்
ஊரெல்லையில்
சிலிர்த்துக்கொள்கிறது
என் உயிர்ப்பறவை....

சுவாசத்தினூடு
எனக்கும்
அதற்குமான
பிணைப்பு வலையை
பிண்ணிக் கொண்டு
தன் மலர்களால்
பூரித்துக் கொள்கிறது
துறுதுறு வயதில்
சிறுகால் எடுத்துக்
குறுநடை பயின்ற
என்
வீட்டு முற்றம்...

உயிரின் ஆழம்வரை
ஊடுருவிச் செல்லும்
இனம்புரியா
ஈர்ப்பைச் சுமந்து
சாளரத்தினூடு
துப்பாக்கி முனைகளின்
துரத்துதல் இன்றி
ஊர் மடியின்
முற்றத்தில்
உறங்கிக் கிடக்கும்
என் முகத்தில்
இறங்குகிறது
முற்றத்து வாசம்....

விழித்துப் பார்க்கிறேன்...
நாடற்று அலையும்
என்
முடிவற்ற கனவுகளின்
பயணங்களிற்கு
மூன்று தசாப்தங்கள்
முடிந்து போய்
விட்டிருக்கிறது...

வழமை போலவே
வட துருவத்தில்
சுமந்து வந்த
என் வீட்டின்
நினைவுக் கனத்துடன்
இன்றும்
எனது நாள்
தொடங்குகிறது... 

No comments:

Post a Comment