மனதைத் தாலாட்டும்
மாலைத் தென்றல்
சுள்ளென எரிக்கா
மெல்லிய வெயில்
சில்லெனப் பரவும்
இரவுக் குளிர்
கதகதப்பாக்கும்
போர்வைத் துணி
இவை போதும் எனக்கு
வேறு எது ஈடு இதற்கு...?
இரவில் நிலவு
இரையும் மழை
பருகத்தேநீர்
பாயில் தூக்கம்
கனவில் சுகம்
கவலையற்ற மனம்
இவை போதும் எனக்கு
வேறு எது ஈடு இதற்கு...?
கலையும் இருள்
காலை நிசப்தம்
கண்ணைக் குத்தா
கதிரவன் ஒளி
விழித்தபடி
தூங்கும் சுகம்
இவை போதும் எனக்கு
வேறு எது ஈடு இதற்கு...?
குளையல் சோறு
குளிக்க வெந்நீர்
துவட்ட முந்தானை
தூங்க உன் மடி
இவை போதும் எனக்கு
வேறு எது ஈடு இதற்கு...?
ஒழுகும் மழை
ஒற்றைக் குடை
புழுதி வீசும்
பூமி வாசம்
ரசித்தபடியே
கரையும் மனம்
நனைந்தபடியே
நடக்கும் சுகம்
இவை போதும் எனக்கு
வேறு எது ஈடு இதற்கு...?
சாய்வு நாற்காலி
சாளர ஒளி
தூரத்துக் குயில்
கூவிடும் குரல்
ஓய்வாய் மனம்
ஓரிரு புத்தகம்
படித்து முடிக்க
நீ தரும் தேநீர்
இவை போதும் எனக்கு
வேறு எது ஈடு இதற்கு...?
நல்ல கவிதையை
ரசிக்கும் மனம்
நாட்டுக்காக
துடிக்கும் குணம்
கூட நீ
குறையாத அன்பு
இவை போதும் எனக்கு
வேறு எது ஈடு இதற்கு...?
ஓலைக் குடிசை
ஒற்றைக் கதிரை
காலைச் சுற்றும்
மீசைப் பூனை
பேசிக்கொள்ள
பரணில் பல்லி
நிறைந்த மௌனம்
நிலைத்த நின்மதி
நீயும் நானும்
நிறைந்த வாழ்க்கை
இருந்தாலே போதும்
வேறெது வேண்டும் எனக்கு?
No comments:
Post a Comment