Pages

Tuesday 11 October 2011

எங்கு போனீர்கள் இங்கு நாம் சாகையிலே....

மூச்செடுத்து விட்டதுபோல்-வருசங்கள்
முடிந்தோடி விட்டாலும்
நேற்றுப்போல் இருக்கிறது-நெஞ்சில்
நெருப்பெரிக்கும் நினைவுகள்

ஊற்றுப்போல் மனதில்தோன்றி-ஓயாது
உள்ளத்தைக் குடைந்தெடுக்கும்
தோற்றுப்போன நாட்களின் -மாறாத்
தொடரும் உயிர்வலிகள்

மண்ணிண் காவலர்கள்-விடுதலைக்காய்
மரணித்த தேசத்தில்
இன்னும் புல்பூண்டு-முளைத்து
இயற்கை சிரிக்கவில்லை

கண்ணில் நெருப்பெடுத்து-மதுரையைக்
கண்ணகி எரித்தகதை
இன்னும் சரித்திரத்தில்-படிக்க
இலக்கியப் புத்தகத்தில்

எண்ணுக் கணக்கற்று-கண்ணகிகள்
எங்கள் தேசத்தில்
மண்ணுக்கு இரையானார்-மதுரைகள்
இன்னும் எரியவில்லை

வருசம் விழாஎடுத்து-நேர்த்திக்கு
வளர்த்த கடாவெட்டி
புருசனுக்காய் நோன்பிருந்த-பெண்கள்
பூவிழந்து போயினரே

கொழுத்த அரக்கர்கள்-எங்களை
கொன்று புதைக்கையிலே
பழுத்த தேவர்கள்-ஞானப்
பால் குடிக்கப்போயினரோ

கற்பூரச் சட்டிகளை-கைகளில்
கடவுளர்க்காய் ஏந்தியோர்கள்
கற்பழித்துக் கொல்லப்பட- சாமிகள்
கண்மூடிச் சயனத்திலோ

சூரனை வதம்செய்ய-தேவர்களைச்
சூழ்ந்த துயர்துடைக்க
கையில் வேலெடுத்த-காக்கும்
கதிகாமக் கந்தனே

வற்றாப்பளை அம்மனே-நல்லூரில்
வரம்தரும் முருகனே
நற்தாயே நம்பினோரின் - தீவமர்ந்த
நயினை நாகபூஷனியே

இன்னும் பெயர்தெரியாத-எண்ணிக்கையில்
பல்கிப் பெருகிநிற்கும்
எங்கள் தமிழர்கள்-நம்பிய
ஏராளம் சாமிகளே

செத்துக் கிடக்கையிலே-எம்முடல்
தீயில் எரிகையிலே
வன்னியின் வானம்விட்டு-நீங்கள்
வனவாசம் சென்றீரோ

செல்விழுந்து பிளக்கையிலே- சிதறி
செங்குருதி தெறிக்கையிலே
கத்திய கூக்குரல்கள்-உங்கள்
காதில் விழவில்லையோ

தாயை இழந்ததினால்-காட்டில்
தவித்த குட்டிகட்காய்
பன்றி வடிவெடுத்து-அன்றொருநாள்
பாலூட்ட வந்தசிவன்

செத்த தாய்முலையில்-எம்குழந்தை
ரத்தம் குடிக்கையிலே
முக்திப் பரவசத்தில்- சக்தியுடன்
மூழ்கிக் கிடந்தீரோ

இங்குநாம் இறக்கையிலே-உயிர்க்காய்
இரந்து கிடக்கையிலே
எங்குநீர் போனீரோ-இன்று
பொங்கலுக்கு வந்தீரோ

கொலுவுற்று எதற்காக-இன்னும்
கோவிலில் வீற்றிருந்து...?
வலுவற்ற கற்களுக்கு-யாரும்
வாழ்வு கொடுக்காதீர்

இன்னும் எதற்காக-கோவிலில்
பென்னம் பெருஞ்சிலைகள்
எல்லாம் மண்ணாக-எம்
சாபம் பலிக்கட்டும்

சிவனுமில்லை சக்தியில்லை-எங்களுக்குச்
சீரழிவு இனியுமில்லை
கண்ணில் தெளிவுகொண்டோம்-எங்களுக்குக்
கடவுள் எவனுமில்லை
***

No comments:

Post a Comment