Pages

Friday 7 October 2011

தோழர்களும் தொலைந்துபோன விடுதலையும்

விடுதலையை நேசித்த
எத்தனையோ
விருட்ச்சங்களை
தின்றுவிட்டது அநீதி

ஆயினும் இன்னமும்
விடுதலைக்கான வேட்கையை
சுமந்து கொண்டு
வீச்சுடன் எரிகிறது
விடுதலைத்தீ

சுதந்திரத்திற்கான கனவுகள்
பொய்த்துப்போன கணங்களில் இருந்து
கணன்று கொண்டேயிருக்கிறது
எங்களின் இதயம்

விடுதலை பெறும் நாளில்
வீடுவருவோம் என்று சொல்லிச்சென்ற
தோழர்களின் வருகைக்காய்
எங்களின் வாழ்க்கையைப்போலவே
இருண்டு கிடக்கும் வீட்டினை
சுத்தம் செய்து வைத்திருப்பாள் தங்கை

இப்பொழுதும்
எப்பொழுதும்போல்
தோழர்களுக்காய்
இயலாமையில்
எங்கள் இதயங்களைப்போலவே
கொதித்துக்கொண்டிருக்கும் அடுப்பில்
சமைத்துக்கொண்டிருப்பாள் என் தாய்

நேற்றையைய்ப்போலவே
இன்றைக்கும் தேடுகிறேன்
இன்னமும்
தோழர்களும்
தொலைந்துபோன விடுதலையும்
கிடைக்கவே இல்லை

(முள்ளிவாய்க்காலுடன் காணமல் போன உறவுகளின் நினைவுடன் எழுதியது)

No comments:

Post a Comment