Pages

Wednesday, 2 March 2011

காதலின் வலி...

நீளமான மெளனங்கள்.............
நீ பேசியதை விட - உன்
மெளனங்கள்......
பேசியவை ஏராளம்
வர்த்தைகளை விட
வலிமையானவை
மெளனங்கள் - என்பதை
உன்னைக்காதலித்த போது தெரிந்துகொண்டேன்
என்னுள் நானே பேசி.........
ஏகாந்ததில் சிரித்து...............
அர்த்தமற்ற சந்தோசம்
கொண்டாடுவதற்கு
நீயல்ல - உன்
காதல்தான் கற்றுத்தந்தது............
காதலியே!
உனக்காக காத்திருக்கிறேன்
கனவுகளை மட்டும் பரிசளித்து சென்றுவிட்டாய்
காலமெல்லாம், கண்ணீருடன் நான்
உன் வீட்டைக்கடக்கும் பொழுதெல்லாம்
இதயத்துள், ஒரு இதமான அவஸ்தை
உள்ளே நீ இல்லாவிட்டாலும் கூட
காதலின் அவஸ்தைகளை
புரியவைத்தவள் நீ
ஆனால்
உனக்கு மட்டும்
அது புரியாமல் போனது ஏனோ?


(காத்திருக்கும் காதலர்க்காக...)

காத்திருக்கும் இதயம்....

கனவுகள் பூத்த இரவுகள் எல்லாம் - உன்
நினைவுகளால் வேகுகின்றன
இதயம் துடிக்கும் ஓசைகள் எல்லாம் - எனக்கு மட்டும்
ஒப்பாரிச்சத்தங்களாகின்றன - உன்
நினைவு பூத்த வெம்மை நிலப்பரப்பாய்
என் உள்ளம் தகிக்கிறது
அசைவற்ற வெறு வெளியில்
நினைவற்ற ஜடம்போல - என்
மனவறையின் சுவர்களில்
வெறுமைகளே நிறைந்து கிடக்கின்றன
உன் நினைவு சுமந்த
என் இதயம்
கனத்துப்போன இரும்பாக
மரத்துப்போய்க்கிடக்கின்றது
என் பாலைவனத்தின் வெண்மணலில்
நீர் வார்க்கும் ஊற்றாக
நீ வரும் நாள்பார்த்து - உன்
நினைவுகள் சுமந்து - ஒற்றைக்கால்
தவமியற்றும் பற்றற்ற கொக்காக
உனக்காக
உனக்கேயாக - இன்னும்
உயிர் சுமக்கிறேன் - இந்த
உணர்வற்ற உடலில்....

Thursday, 3 February 2011

தொலைந்த மனிதனை தேடிக்கொள்...

உன்னுடைய பாதைகளை 
நீயே அமைத்துக்கொள்
அடுத்தவன் பாதைகளில்
ஆசைப்படாதே..

உன்னுடைய சிலுவைகளை
நீயே சுமந்துகொள்
அடுத்தவன் தோளுக்கு
அதிகாரமிடாதே..

உன்னுடைய செடிகளை
நீயே வளர்த்துக்கொள்
அடுத்தவன் தோட்டத்தில்
பூக்களைப்பறிக்காதே..

உன்னுடைய குறைகளை
நீயே சொறிந்துகொள்
அடுத்தவன் குறைகளை சொறிய
நினைக்காதே..

உன்னுடைய மதத்தில்
உண்மைகளை தேடிச்செல்
அடுத்தவன் மதத்தில்
ஓட்டைகளைத்தேடாதே..

உன்னையே நீ தேடி
உண்மைகளைக்கண்டு
உன்னுள் தொலைந்த
மனிதனை மீட்டுக்கொள்

பள்ளி நினைவுகள்

தோழிலே பையுடன்
தோழர்கள் புடைசூழ
பள்ளி சென்ற
பருவ நாட்கள்
சிந்தையில் விரிகையில்-இதயத்தில்
சின்னதாய் ஒரு நெருடல்

நிலவு அல்ல-பள்ளி
நினைவுகள் தேய்வதற்கு
நித்தமும் விழி எதிரே
நிஜங்களாய் மலர்பவை

பருவமழை அல்ல-பள்ளி
நினைவுகள் வந்துபோக
பசுமையாய் பதிந்து
பாதத் தடங்களாய் தொடர்பவை

காலச்சக்கரம் விரிகையில்-வசந்த
காலத்தின் சுவடுகளாய் பதிந்து
காற்றினும் பரந்து விரிந்து
காவியமாய் நெஞ்சிலே ஒளிர்பவை

நேற்றைய நட்புகளே - பள்ளி
நாட்களின் உறவுகளே
இதயச்சுவர்களில் உங்களின்
இனிய நினைவுகள்
அழியாத புத்தகமாய்
ஆண்டாண்டு வாழும்

(காலத்தின் கட்டாயத்தால் இன்று திசைக்கொன்றாக பிரிந்திருக்கும் என் இளைமைக்கால பள்ளி தோழர்களுக்கு சமர்ப்பணம்)

Monday, 17 January 2011

காத்திருக்கும் இதயம்....

கனவுகள் பூத்த இரவுகள் எல்லாம் - உன்
நினைவுகளால் வேகுகின்றன
இதயம் துடிக்கும் ஓசைகள் எல்லாம் - எனக்கு மட்டும்
ஒப்பாரிச்சத்தங்களாகின்றன - உன்
நினைவு பூத்த வெம்மை நிலப்பரப்பாய்
என் உள்ளம் தகிக்கிறது
அசைவற்ற வெறு வெளியில்
நினைவற்ற ஜடம்போல - என்
மனவறையின் சுவர்களில்
வெறுமைகளே நிறைந்து கிடக்கின்றன
உன் நினைவு சுமந்த
என் இதயம்
கனத்துப்போன இரும்பாக
மரத்துப்போய்க்கிடக்கின்றது
என் பாலைவனத்தின் வெண்மணலில்
நீர் வார்க்கும் ஊற்றாக
நீ வரும் நாள்பார்த்து - உன்
நினைவுகள் சுமந்து - ஒற்றைக்கால்
தவமியற்றும் பற்றற்ற கொக்காக
உனக்காக
உனக்கேயாக - இன்னும்
உயிர் சுமக்கிறேன் - இந்த
உணர்வற்ற உடலில்....

Thursday, 6 January 2011

எனக்கொரு வரமருள் பராபரமே....

புழுதி எழும் ஊரின்
புண்பட்ட வீதிகளில்
விழுது விட்ட ஆலமரத்தின்
பழுது பட்ட திண்ணையில்
தொழுது எழும் கோயிலின்
அழகு மிகு தேரடியில்
உழுது நாற்று நடும்
ஊரின் வயல் வரப்பில்
பொழுது விழும் நேரம்
களித்து மகிழ்ந்து நாங்கள்
கால்பந்து விளையாடும்
கல்லூரித்திடலில்
ஒழுகும் வழி சொன்ன
பள்ளியின் வகுப்பறையில்
ஆழ வேரெடுத்து
அழகாய் கிளைபரப்பி
நீள நெடுத்து நிற்கும்
முற்றத்து மாநிழலில்
வீழமாட்டேனென-திணவெடுத்து
சோளக்காற்றிடையும்
வாழ நிமிர்ந்து நிற்கும்-தென்னஞ்
சோலை மர நிழலில்
வாழ வழி பல தந்து
வளமும் தந்து-எம்
நீள நெடும் பரம்பரையின்
வரலாறு தந்த
வீரம் படுத்துறங்கும்
விடுதலைத்திருநாட்டில்
என் வாழும் நாட்களில்-இன்னும்
வாழும் நாட்களை
காலன் சிங்களவன்
கவர்ந்து கொண்டு போகாமல்
வாழ்ந்து களித்திட எனக்கொரு வரமருள்
பராபரமே! 

Monday, 3 January 2011

வெறுமை வாழ்க்கை

கவலை பாதி 
காமம் பாதி 
காலம் மீதி 
என்று முற்றும் 
எரித்த பின் 
மரித்தவன் உடலில் 
இந்த மயான நெருப்பு 
என்னத்தை எரிக்கும்

Sunday, 2 January 2011

வருக புத்தாண்டே....

வரும் புத்தாண்டே 
வசந்தங்களோடு 
வாழ்த்துக்களையும் சுமந்துவரும்-உன் 
வரக்கரங்கள் 
தாய்மொழியை மறந்து 
தன்மானம் இழந்து 
வரலாற்றைத்தொலைத்து 
வளைந்து போன எம் மக்களின் 
கூன் விழுந்த முதுகுகளை 
நிமிர்த்திப்போடட்டும் 

சந்திகளில் நின்று 
சதிராட்டம் போடும் 
எங்கள் இளைஞர்களின்
மூளைகளில் 
தன்மானச்சுடரெழுப்பும் 
தாய்நிலப்பற்றமைக்கும்
அக்கினி விதைகளை 
அள்ளித்தூவி-அந்த 
உக்கிர வெம்மையிலே
உன்கரங்கள் 
உலகைப்புடம்போடட்டும்    

கஞ்சிக்காய் கையேந்தும் 
ஏழைகளின் கரம்பற்றி 
அஞ்சக என்றழைத்து 
அவர்களுக்கோர் வழியமைத்து 
உன்கரங்கள் 
வஞ்சனையற்ற அவர் 
வயிறுகளில் சிறிதமிழ்தத்தை 
வார்த்துச்செல்லட்டும்  

உறவுகளின் நல்வாழ்விற்காய் 
பிள்ளைகளின் சந்தோசத்திற்காய் 
சகோதரர்களின் முன்னேற்றத்திற்காய்
தம்மையே வருத்தி 
தணலிலே உருக்கி 
உடலையே முதலாக்கி 
உழைக்கும் ஏழைகளின் 
துன்பச்சுமைகளை 
உன்கரங்கள் கொஞ்சம் 
துடைத்துப்போடட்டும்-அவர் 
பாதைகளில் தலைகாட்டும் 
முட்களின் முனைகளை 
உன்கரங்கள் 
முறித்துபோடட்டும்

எண்ணத்தில் இனிமை கூட்டி 
கண்களில் கவிதை தேக்கி 
இதயத்தில் ஆவல் கூட்டி 
எதிர்காலக்கனவுகள் சுமந்து 
ஏக்கத்தோடு எதிர்பார்க்கிறோம் 
புத்தாண்டே... 
உன்கரங்களின் குளிர்விப்பில் 
உலகமெல்லாம் அன்பு பரவி
உயிர்களெல்லாம் நிறையட்டும்...

Sunday, 26 December 2010

உணர்வடங்கும் நினைவுகள்

ஆழிப்பேரலையே - எங்கள் 
ஆன்மாக்களை புரட்டிப்போட்ட சுனாமியே 
ஆசியாவையே அழித்தொழித்து 
அகிலத்தையே அதிரவைத்த 
ஊளித்தாண்டவமே 
ஆண்டுகள் ஆயிரமானாலும் 
ஆறுதல் கோடிகள் சொன்னாலும் 
அடங்குமோ எங்கள் மனத்துயர்?
அணையுமோ எங்கள் துயர் நெருப்பு?
நினைவுகளை அழிக்கமுடியாமல் 
நித்தமும் கலங்கி நிற்கிறோமே....

மரங்களை அடுக்குவது போல் 
பிணங்களை அடுக்கிவைத்த காட்சிகள் 
மனக்கண்களில் விரிகிறதே - உடல்
அணுக்கள் அனைத்தையும் உலுப்புகிறதே
இறுதிக்கடன் செய்வதற்குகூட 
இனசனத்தை விட்டுவைக்காமல்
குடும்பத்தோடும் குடியிருப்புக்களோடும்
கூடிவாழ்ந்த ஊரோடும் 
உற்றார் உறவினரோடும் 
கொத்தொடும் குலையோடும் 
மொத்தமாகக்கொன்றொழித்த
உன் கொடுமைதனை 
கோரத்தாண்டவத்தை
எண்ணுகையில் 
உள்ளம் வெடித்தெங்கள்
உணர்வடங்கிப்போகிறதே........

கட்டிப்பிடித்த குழந்தைகள் 
கைநழுவிப்போகையிலும்
தொட்டு தாலிகட்டிய மனைவி - கை 
எட்டும் தொலைவிலே துடிதுடித்து மூழ்கையிலும் 
பெற்றெடுத்த அன்னையை - கண்முன்னே
கடல் கொண்டு போகையிலும்
காப்பாற்ற முடியாமல் 
இயலாமையில் துடிதுடிக்கையிலும்
அத்தனை பேரையும் இரக்கமின்றி 
உன் கொலைக்கரத்தால் வெட்டிச்சாய்த்துவிட்டு
இன்றெமக்கு வெறுமையை மட்டும் தந்ததேனோ?

அமைதியாய் இருந்தாய்
கடல்தாயே! ஆர் நினைத்தோம் 
நீ வந்து எங்கள் ஆவி பறிப்பாய் என்று?
பொறுமையாய் இருந்தாய் 
கடலம்மா! ஆர் நினைத்தோம் 
நீ வந்து பொல்லாத சுனாமியாய் கொல்வாய் என்று?  
பசிக்கு உணவு தந்தாய் 
கடல்தாயே! ஆர் நினைத்தோம் 
நீ வந்து உன் பசியை தீர்ப்பாய் என்று?

எங்களை அழிப்பதற்கு கடல்தாயே 
ஏன் இந்த வடிவெடுத்தாய்?
என்ன கொடுமை செய்தோம் நாம்? 
ஏன் இந்தக்கோலம் கொண்டாய்?
கொடுமை பல செய்த கொடியவர்கள் - உலகில்
இன்னமும் கொட்டமடிக்கையில் 
வஞ்சமேதறியா பிஞ்சுகளும்
உனக்கு வஞ்சகராய் தோன்றினாரோ?
கொஞ்சமும் இரக்கமின்றி
கொன்றொளித்த கொடுமையை - எண்ணி
ஆண்டுகள் ஆறு ஆனாலும் - இந்த
அகிலமே கலங்கி நிற்கிறது 
மீளவே முடியாத பெரும்
மாளாத்துயருடன்.................