புழுதி எழும் ஊரின்
புண்பட்ட வீதிகளில்
விழுது விட்ட ஆலமரத்தின்
பழுது பட்ட திண்ணையில்
தொழுது எழும் கோயிலின்
அழகு மிகு தேரடியில்
உழுது நாற்று நடும்
ஊரின் வயல் வரப்பில்
பொழுது விழும் நேரம்
களித்து மகிழ்ந்து நாங்கள்
கால்பந்து விளையாடும்
கல்லூரித்திடலில்
ஒழுகும் வழி சொன்ன
பள்ளியின் வகுப்பறையில்
ஆழ வேரெடுத்து
அழகாய் கிளைபரப்பி
நீள நெடுத்து நிற்கும்
முற்றத்து மாநிழலில்
வீழமாட்டேனென-திணவெடுத்து
சோளக்காற்றிடையும்
வாழ நிமிர்ந்து நிற்கும்-தென்னஞ்
சோலை மர நிழலில்
வாழ வழி பல தந்து
வளமும் தந்து-எம்
நீள நெடும் பரம்பரையின்
வரலாறு தந்த
வீரம் படுத்துறங்கும்
விடுதலைத்திருநாட்டில்
என் வாழும் நாட்களில்-இன்னும்
வாழும் நாட்களை
காலன் சிங்களவன்
கவர்ந்து கொண்டு போகாமல்
வாழ்ந்து களித்திட எனக்கொரு வரமருள்
பராபரமே!
No comments:
Post a Comment