Pages

Tuesday 27 December 2011

கார்த்திகைப்பொழுதுகளில் ஆவியாகும் கண்ணீர்த்துளிகள்....

மெல்லக்கடந்து போகும்
கார்த்திகைப்பொழுதுகளின் துடிப்பில்
எழுந்து அடங்கிப்போகின்றன
மாவீரர்களின் ஞாபகங்கள்

சூரியத்துளிகளில் ஒளிரும்
போராளித்தோழர்களின் நினைவுகளில் ஊறிப்போய்
பாரமாய்க்கனக்கின்றன
இந்த மாலைப்பொழுதுகள்

இடிந்து தூர்ந்துபோய்க்கிடக்கும்
கல்லறைகளின் நடுவே
பூத்திருக்கும் புற்களின் இடையே
பறந்து திரியும் வண்ணாத்திப்பூச்சிகளின் சிறகடிப்பில்
சிலிர்த்துக்கொள்கின்றன கார்த்திகைமேகங்கள்

வரலாற்றை எழுதிவிட்டு நிரையாகப்போய்விட்ட
தோழர்தோழியரின் ஞாபகங்களில் 
தோய்ந்தொழுகும் கண்ணீர்த்துளிகளில் இருந்து
ஆவியாகின்றன பல கதைகள்

பறவைகளின் சிறகுகளில் இருந்து
உதிர்ந்துவிழும் இறகுகளில்
இன்னமும் ஒட்டியிருக்கும் சிறு சூட்டைப்போல
தோற்கடிக்கப்பட்ட கோபத்தின் வெம்மைகள்
நினைவுகளில் இன்னமும்
நீறாக உறங்கிக் கிடக்கின்றன

கல்லறைகளில் தவம்கிடக்கும்
காலப்புதல்வர்களின் தியாகங்களை
நெஞ்சறைகளில் சுமந்தபடி
விக்கித்திருக்கிறோம்
இன்னமும் விடியாத இரவுகளில் திசைகளைத்தேடியபடி...

1 comment:

சசிகலா said...

பறவைகளின் சிறகுகளில் இருந்து
உதிர்ந்துவிழும் இறகுகளில்
இன்னமும் ஒட்டியிருக்கும் சிறு சூட்டைப்போல
தோற்கடிக்கப்பட்ட கோபத்தின் வெம்மைகள்
நினைவுகளில் இன்னமும்
நீறாக உறங்கிக் கிடக்கின்றன

அருமையான வரிகள்

Post a Comment