Pages

Wednesday, 17 April 2013

இழந்துபோன சிலவற்றின் வாசனைகள்.....




(லண்டன் ஒருபேப்பரிற்க்காக எழுதியது)


பிரான்ஸில் நானிருக்கும் வீட்டிற்க்கு முன்னால் உள்ள குட்டிப்பூங்கவின் நடுவில் ஓர்க் மரம் ஒன்று ஓங்கி வளர்ந்து கிளை பரப்பி சடைத்திருந்தது.சுற்றிலும் கட்டடங்கள் நிறைந்த மரங்கள் அற்ற சூழழில் வளர்ந்திருந்த அந்த ஓர்க் மரம் பூமியில் தவறி விழுந்த தேவதையைப்போல எப்பொழுதும் வானத்தை அண்ணாந்து பார்த்து தன் தனிமையை நினைத்து அழுவது போலிருக்கும் எனக்கு.அதன் கீழே வட்டவடிவ இருக்கை ஒன்று போட்டிருந்தார்கள்.கோடைகாலங்களில் கிடைக்கும் ஓய்வான நேரங்களில் எனது தனிமையையும் ஊரையும் உறவுகளையும் பிரிந்து வந்த சோகங்களையும் சுமந்து சென்று மனிதர்களின் இடையூறுகள் இல்லாமல் நிறைந்த அமைதியைப் பரப்பிக்கொண்டிருக்கும் அந்தப்பூங்காவில் ஓர்க் மரத்தின் கீழே இருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்து அந்த மரத்துடன் சேர்ந்து நானும் எனது தனிமைகளையும் சோகங்களையும் விரட்டிக்கொண்டிருப்பேன்.வீட்டில் கிடைக்காத அமைதியும்,புத்துணர்வும் அந்த மரத்தின் கீழே வந்து உட்கார்ந்தவுடன் எங்கிருந்தோ வந்து குதித்து என் மனத்தை வானத்தில் மிதக்கும் மேகக்கூட்டங்களைப்போல இலேசாக்கி எல்லையற்ற கற்பனைகளுக்கூடாக எட்டமுடியாத உலகங்களுக்கெல்லாம் அழைத்துச்சென்றுவிடும்.கோடைகாலங்களில் அந்த மரத்தின் கீழே வீசும் சூடான காற்றில் எனதூரின் நினைவுகள் மனத்தில் ஒன்றன் பின் ஒன்றாக அலை அலையாக எழுந்து அடங்கிக்கொண்டிருக்கும்.  அன்றும் அப்படித்தான் கிடைத்த கொஞ்ச நேர ஓய்வில் ஓர்க் மரத்தின் அருகாமையை தேடிச்செல்லும்படி நினைவுகள் என்னை உந்தித்தள்ளிக்கொண்டிருந்தன.வீட்டைவிட்டு வெளியே வந்தபோது உயிரை உறையவைப்பதுபோலக் குளிர் கடுமையாக இருந்தது.இந்தக்குளிரில் அந்த ஒர்க் மரத்தின் கீழ் இருப்பதைப்பற்றி நினைத்துக்கூடப்பார்க்க முடியாது.இனிக் குளிர்காலம் முடியும்வரையான ஆறுமாத காலத்திற்க்கு அந்தப்பக்கம் தலைவைத்தும் பார்க்கமுடியாது.என் ஆசையை உறையவைக்கும் பனியுடன் சேர்த்து உறையவைத்துவிட்டு  ஏமாற்றத்துடன் கட்டிலில் சரிந்தபோது ஊரில் எங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் கிணற்றடியில் இருந்து சற்றுத்தூரத்தில் கிளைபரப்பி தன் பூக்களின் வாசனைகளினூடு அன்பையும் நேசிப்பையும் நன்றியையும் பரப்பியவாறு என் பால்யகால நினைவுகளைச் சுமந்தபடி என் அருகாமையைத்தேடிக்கொண்டிருக்கும் எனது இளமைக் காலங்களின் தனிமைத்தோழனாய் இருந்த மாமரத்தினைத்தேடி எனக்குள்ளே இருந்த எண்ணெய் வைத்துப் படியத்தலைவாரிய,மீசை அரும்பாத சிறுவன் இறங்கி ஓடிக்கொண்டிருந்தான்.

அப்பாவின் கைகளைப்பிடித்து பூமியில் நான் மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்துவைக்கத்தொடங்கிய காலங்களில் இருந்தே அந்த மாமரம் அங்கிருந்தவாறு வாழ்க்கையை நோக்கிய எனது ஒவ்வொரு படிமுறை வளர்ச்சியையும் மெளனமாக அவதானித்துக்கொண்டிருந்தது. அந்த மாமரத்தின் கீழிருந்த சய்வுநாற்காலியில் படுத்திருந்தவாறு பெயர்தெரியாத பல பறவைகளுக்கும் பூச்சிகளிற்க்கும் தன் அரவணைப்பால் அகன்று குடைபோல சடைத்திருக்கும் அதன் அடர்ந்த கிளைகளில் மகிழ்ச்சிமிக்க ஒரு சின்ன உலகத்தை வழங்கியவாறு அன்பின் அடையாளமாக நிழல்பரப்பி நிற்க்கும் அந்த மாமரத்தினை வியந்து அவதானித்தவாறு என் சிறுவயதுகளில் அமைந்த அனேகமான மாலைப்பொழுதுகளை அனுப்பிக்கொண்டிருப்பேன்.சின்ன வயதில் நண்பர்களுடன் சேர்ந்து மாபிளடியும்,கிளித்தட்டும்,பந்தடியும் முடித்து ஆடைகளை எல்லாம் அழுக்காக்கி விட்டு வீட்டுக்கு வரும் ஒவ்வொருதடைவையும் என்னை கிணற்றடிக்கு இழுத்துச்சென்று என் ஆடைகளை எல்லாம் கழற்றிவிட்டு அம்மா எனது முதுகைத் தனது கரங்களால் தேய்த்துக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும்போது அந்த மாமரத்தின் ஒவ்வொரு கிளையிலும் தாவிக்கொண்டிருக்கும் கிளிகளையும்,அணில்களையும்,புலுனிகளையும் ரசித்தபடி நான் குளித்து முடித்திருப்பேன்.  நிலத்தோடு சேர்த்து மனதையும் குளிர வைத்துக்கொண்டிருக்கும்,ஒளிக்கற்றைகள் ஒவ்வொன்றும் வெள்ளியாக உருகிப் பூமியை நனைத்துக்கொண்டிருக்கும் நிலாக்காலங்களில் இனிமையும்,நிறைவும்,மகிழ்ச்சியும் கொண்டமைந்த எனது அனேகமான இரவுணவுப்பொழுதுகளை அந்த மாமரத்தின் கீழேயே அனுபவித்திருக்கிறேன். சுயநலமற்ற அன்பையும் நேசிப்பையும் காலம்காலமாக இந்தப்பூமிப்பந்தில் பரப்பிக்கொண்டிருக்கும் ஆயிரம் ஆயிரம் ஏழைத்தாய்மார்களைப்போலவே நிலவொளியில் உணவுடன் அன்பையும் நேசிப்பையும் சேர்த்தூட்டிய எனதன்னையின் முகமும் சுட்டித்தனமும்,துடுக்குத்தனமும் நிறைந்த,அர்த்தமற்ற ஒன்றுக்கொன்று தொடர்பற்ற கேள்விகளால் துளைத்தெடுத்தபடி மடியில் தூங்கிப்போகும் தன் செல்ல மகனை அந்த மாமரத்தின் அடிவாரத்தில் நீண்ட நெடுங்காலமாக தேடிக்கொண்டிருக்கும்.மாதத்தின் அனேகமான மதியங்களில் அம்மாவின் விரதச்சாதத்தை எதிர்பார்த்து இரண்டு காக்கைகள் அந்த மாமரத்தில் வந்து உட்கார்ந்துகொள்ளும்.வீட்டைவிட்டு அம்மா வெளியே வரும்போதெல்லாம் அந்தக் காக்கைகளின் முகத்தில் தெரியும் சந்தோசத்தையும் எதிர்பார்ப்பையும் நான் அவதானித்திருக்கிறேன்.தங்களின் மிக நெருங்கிய ஒருத்தியாக அம்மாவை அவை நேசித்திருக்கவேண்டும்.அதனால்தான் அம்மாவைக் காணும்போதெல்லாம் அளவற்ற மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் அவற்றின் முகத்தில் பிரகாசிக்கும்.அந்த மாமரத்தின் மீது உட்கார்ந்திருந்து சாதக்காக்கைகள் கரையும்போதெல்லாம் யாராவது உறவினர்கள் வரப்போவதாக அம்மா உறுதியாகச் சொல்லிக்கொள்வார்.அம்மாவின் நம்பிக்கை சில நேரங்களில் மெய்த்து விட்டாலும் அநேகமான நேரங்களில் பொய்த்தே இருந்திருக்கிறது.ஆனலும் அம்மா காக்கைகள் கரையும்போதெல்லாம் தன் எதிர்வு கூறலை நிறுத்துவதேயில்லை.

வயதாக ஆக வாழ்க்கையின் மீதான பிடிமானங்களை ஏற்படுத்தும் ஒவ்வொரு காரணியும் மெதுவாக ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்துபோக வெறுமையாக தனித்து நிற்க்கும் மனிதர்களைப்போலவே ஒவ்வொரு இலையுதிர் காலங்களிலும் அந்த மாமரம் உழைத்து ஓய்ந்துபோன தன் இலைகளை ஒவ்வொன்றாக உதிர்த்துவிட்டு இன்னொரு மீள் பிறப்பிற்க்காக நம்பிக்கையுடன் காத்து நிற்க்கும்.இலையுதிர்காலத்தின் பெரும்பாலான நாட்களில் ஒன்றன் பின் ஒன்றாக காய்ந்து உதிர்ந்துகொண்டிருக்கும் தன் இலைகளால் எங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தை நிறைத்துவிட்டிருக்கும் அந்த மாமரம்.ஒவ்வொரு நாளும் காலையில் முற்றம் பெருக்கும்பொழுதெல்லாம் அம்மா அந்த மாமரத்தை திட்டியபடி அதன் இலைகளைக் கூட்டி அள்ளினாலும் ஒருபோதும் அம்மாவின் மாமரத்தின் மீதான அந்தக்கோபம் நீண்ட நேரம் நிலைப்பதில்லை.பனி கடுமையாக இருக்கும் மார்கழி மாதத்தில் ஈரலிப்பால் மண்ணுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் மாவிலைகளைக் கூட்டி அள்ளுவது என்பது அம்மாவிற்க்கு மிகக்கடுமையான ஒரு பணியாக இருக்கும். பாடசாலை இல்லாத நாட்களில் மாவிலைகளைக் குத்தி எடுக்கும்படி முனையில் கூரான நீண்டதொரு கம்பியை என்னிடம் தந்துவிட்டுப் போய்விடுவார் அம்மா.நானும் அம்மாவின் காலை நேரக் கட்டாயப் படிப்பில் இருந்து தப்பிய மகிழ்ச்சியில் பனியில் தோய்ந்திருக்கும் மாவிலைகளை ஒவ்வொன்றாக எண்ணி எண்ணிக் குத்திச்சேர்த்துக்கொண்டிருப்பேன். வீட்டினுள்ளே இருக்கமுடியாத அளவுக்கு அணல் பறக்கும் வெய்யில் காலங்களில் எல்லாம் அப்பாவின் பெரும்பாலான பகல்ப்பொழுதுகள் தேநீர்க் கோப்பையுடன்  அந்த மாமரத்தின் கீழிருந்த சாய்வுநாற்க்காலியில் சரிந்தபடி நாளிதழ்களை மேய்வதிலேயே கழிந்திருக்கும்.மாமரத்தின் கீழ் வீசும் இதமான தென்றலில்  சொக்கியபடியே அப்பா படிக்கும் நாளிதழின் ஏதாவது ஒரு பக்கத்தை பிரித்தெடுத்து அவரின் அருகே அமர்ந்திருந்தபடி நானும் வாசித்து முடித்திருப்பேன்.வாழ்க்கையின் பல மிக அழகிய தருணங்கள் அந்த மாமரத்தின் கீழ் நிகழ்ந்ததைப்போலவே வாசிப்பின் இனிமையையும் அதன் பின் ஏற்படும் ஒருவித மெளன நிலையையும் அந்த மாமரத்தின் கீழேயே உணரத்தொடங்கியிருந்தேன்.

யுத்தம் கடுமையாக நடக்கும்போதெல்லாம் எங்கும் செல்லாமல் அப்பாவும் நானும் எங்கள் வீட்டிலிருந்த வானொலிப்பெட்டியுடன் அந்த மாமரத்தின் கீழே உட்கார்ந்திருப்போம். கடுமையான யுத்தநாட்களில் எங்களின் பெரும்பாலான பொழுதுகள் அந்த மாமரத்தின் கீழே புலிகளின் குரல்,வெரித்தாஸ்,பிபிஸி என்று மாறிமாறி வானொலிகளுடன் நகர்ந்து கொண்டிருக்கும்.எங்களவர்களின் ஒவ்வொரு இழப்பிலும்,மரணத்திலும்,தோல்வியிலும் அந்த மாமரத்துடன் சேர்ந்து நானும் மெளனமாக அழுதுகொள்வேன்.வாழ்க்கையின் பல மிக அழகிய கணங்களை அந்த மரநிழலில் அனுபவித்ததைப்போலவே வாழ்க்கையின் மிகப்பாதுகாப்பற்ற தருணங்களையும் அந்த மாமரத்தின் கீழே உணர்ந்திருக்கிறேன்.மக்களின் மரணங்களை வானொலிகள் அறிவிக்கும்போதெல்லாம் உயிர் வாழ்வதற்க்கான உரிமைகள் பலவந்தமாக அறுத்தெறியப்படுவதை எனது மிகச் சிறிய வயதுகளிலேயே உணர்ந்திருக்கிறேன்.உலகமெல்லாம் யுத்தம் குழந்தைகளை அச்சுறுத்தி அவர்களின் கள்ளம் கபடமற்ற புன்னகையைப் பறித்துவிடுவதைப்போலவே யுத்தம் எனது பால்யகாலங்களையும் பயமுறுத்தி எனது இளவயதுப் புன்னகைகளைப் பறித்துச்சென்றுவிட்டிருந்தது.சிறுவயதுகளிலேயே சிங்களத்தின் கொலை விமானங்கள் வானத்தில் வட்டமிடும்போதெல்லாம் அந்த மாமரத்தின் கீழ் ஒளிந்திருந்தபடி மரணத்தின் வாசனையை எனக்கு மிக அருகில் நுகர்ந்திருக்கிறேன்.வாழ்க்கையின் நிலையாமையை,கொஞ்சமாகச் சிந்திக்க ஆரம்பித்திருந்த என் வாழ்வின் மிக ஆரம்ப நாட்களிலேயே அந்த மாமரத்தின் கீழ் உணர்ந்திருக்கிறேன்.மனிதர்களின் சிரிப்பையும்,மகிழ்ச்சியையும் கொள்ளைகொண்டு பிஞ்சுக்குழந்தைகளையும் கொலை செய்யும் பாழாய்ப்போன பகைமையும்,போரும் நிறைந்த உலகம் எங்கிருந்து துவங்குகிறது என்றகேள்வியை எனக்குள்ளே அப்பொழுதிலிருந்தே எதிர்கொண்டேன்.

பிறந்தபோது வெறுமையாக இருந்த நான் எனும் பாத்திரத்தினுள் நினைவுகளை ஊற்றி நிறைத்தபடி மெதுவாக நான் வளர்ந்துகொண்டிருந்தபோது எல்லாப் பருவங்களையும் மாறிமாறி எதிர்கொண்டபடி எங்கள் வீட்டு மாமரமும் என்னுடன் கூடவே வளர்ந்து கொண்டிருந்தது.என் துயரங்களின் போதான அழுகைகள்,என் மகிழ்ச்சிகளின் போதான கொண்டாட்டம்கள்,என் தோல்விகளின் போதான அவமானங்கள்,என் தனிமைகளின் போதான தவிப்புக்கள் என்று என் மனத்தின் எல்லா நிலைகளின் போதும் நான் தேடிச்செல்லும் இடமாக அந்த மாமரத்தின் அடிவாரமே இருந்தது. அதன் ஒரு கிளை நிலத்தை முத்தமிடத் துடிக்கும் வானத்தைப்போல நீண்டு அடர்ந்து பூமியை நோக்கி வளைந்தபடி வளர்ந்து கொண்டிருந்தது.அதிக உயரமில்லாத அந்தக்கிளையில் ஊர்த்தோழர்களுடன் சேர்ந்து பாடசாலை முடிந்த பின்னர் கிடைக்கும் மாலை நேரங்களில் சிலவற்றை ஆனந்தமாக ஆடிப்பாடியபடி வழியனுப்பிக்கொண்டிருப்போம். அப்படி அமைந்த நீண்ட மாலைப் பொழுதொன்றிலேதான் வேகமாக ஆடிக்கொண்டிருந்த மரக்கிளையில் இருந்து தவறி விழுந்து எனது இடது கையில் லேசான முறிவு ஏற்பட்டிருந்தது.அன்றிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்க்கு பண்டேஜ் சுற்றியிருந்த எனது கையில் ஒரு கயிற்றைக்கட்டி கழுத்தில் தொங்கப்போட்டபடி திரியவேண்டியதாகிப்போனது.அன்றிலிருந்து கொஞ்சக்காலத்திற்க்கு ஊஞ்சல் ஆட்டத்தை தள்ளிப்போட்டிருந்த நாங்கள் பண்டேஜ் அவிழ்த்ததும் அம்மாவின் ஏச்சையும் பொருட்படுத்தாது மீண்டும் எங்கள் விளையாட்டைத் தொடங்கியிருந்தொம்.

வெண்ணிறத்தில் கொத்துக்கொத்தாக மலர்ந்திருக்கும் தன் பூக்களின் உள்ளே மெளனமாக மகரந்தச்சேர்க்கையை நிகழ்த்திக்கொண்டிருக்கும் அந்த மாமரம் பருவங்களைப் படைத்துக்கொண்டிருக்கும் இயற்க்கையின் விசித்திரமான அழகைப் பிரதிபலித்துக்கொண்டிருக்கும்.மாம்பூக்களின் வாசனையில் கட்டுண்டுபோய் எங்கோ தொலைவுகளில் இருந்தெல்லாம் வரும் வண்டுகள் அந்த மாமரத்துடன் அதன் பூக்கும் காலம் முழுவதும் ஓய்வின்றி உரையாடிக்கொண்டிருக்கும்.முன்னால் விரிந்து பரந்து கிடக்கும் முதுமைக் காலங்களை தனியாக எதிர்கொள்ளும்படி,வளர்த்து ஆளாக்கப்பட்டபின்னர் சுயநலச்சிறகுகளுடன் பறந்து போய்விட்ட பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களைப்போலவே அதன் இலையுதிர்காலங்களில் வண்டுகளாலும்,பறவைகளாலும் கைவிடப்பட்ட அந்த மாமரமும் வெறுமையாக நின்று தன் தனிமையை நினைத்து அழுவதுபோலிருக்கும் எனக்கு.எனது பெரும்பாலான கோடை விடுமுறைகளை அந்த மாமரத்தின் கீழே அமர்ந்தபடி கசப்பும் இனிப்பும் சேர்ந்த அதன் ஒருவித கிறங்கடிக்கும் பூ மணத்தோடு இலயித்தபடி புத்தகங்கள் படிப்பதிலும்,அடுத்த தவணைக்கு தயாராவதிலும் செலவழித்துக்கொண்டிருப்பேன்.அடுத்த தவணையில் பள்ளியில் புத்தகங்களை விரிக்கும்போது அதனுள்ளே அகப்பட்ட ஒன்றிரண்டு காய்ந்துபோன மாம்பூக்கள் எனக்கும் அந்த மரத்திற்க்குமான வார்த்தைகளால் சொல்லமுடியாத ஏதோ ஒருவித பிணைப்பின் நீட்ச்சியை நினைவுபடுத்திக்கொண்டிருக்கும்.

எங்களது வீட்டின் ஒரு பகுதியை இடித்து விஸ்தரிக்கும் நீண்டகாலத்திட்டத்தை செயற்படுத்தும் முடிவிற்க்கு வீட்டார் ஒரு நாள் வந்தபோது   கொல்லைப்புறத்தில் துருத்திக்கொண்டிருந்த அந்த மாமரமும் அதன் அடர்ந்த கிளைகளும் அவர்களின் முயற்ச்சிக்கு இடையூறாக இருந்தன.அதைத் தறிப்பதற்க்கான முனைப்புக்களில் வீட்டார் ஈடுபட்டபோது அதுவரையும் அந்த மாமரம் குறித்த பெரிய சிந்தனைகள் எதுவுமில்லாமல் இருந்த எனக்கு அதன் பெறுமதிகள் புரியத்தொடங்கின.அன்று முழுவதும் புரண்டு புரண்டு படுத்தபடியே மாமரம் குறித்த கேள்விகளில் தூக்கமின்றி கழிந்துபோனது எனதிரவு.மாமரம் வெட்டப்பட்டால் மாலைப்பொழுதுகளை நண்பர்களுடன் ஆடிப்பாடியவாறு கழிப்பதற்க்காக இனி நான் எங்குசெல்வேன் என்ற கேள்வி என்னுள் எழுந்திருந்தது.இனிமேல் அப்பாவுடன் உட்கார்ந்திருந்துகொண்டு அந்த மாமரத்தின் கீழே அப்பொழுதுதான் வீசிக்கொண்டிருக்கும் புத்தம் புதிய காற்றை சுவாசித்தபடி பத்திரிகைகள் படிக்கமுடியாது.ஓய்வு நேரங்களில் சாய்வு நாற்க்காலியில் அந்த மாமரத்தை சுற்றி இயங்கிக்கொண்டிருக்கும் உலகத்தை அவதானித்தபடி காணும் கனவுகளை இரசிக்கமுடியாது.எனது ஓய்வு நாட்க்களை உயிர்ப்புடன் வைத்திருந்த அந்த மாமரத்தைப் பற்றிய கவலைகளிலேயே கழிந்துபோயின அடுத்துவந்த நாட்க்கள்.இப்பொழுது இருப்பதைவிட பெரிதாக வீட்டை விஸ்தரிப்பது வாஸ்த்துப்படி நல்லதல்ல என்று யரோ ஒரு சாத்த்ரி சொல்லியதால் வீட்டைப் பெருப்பிப்பதற்க்கான முயற்ச்சிகளுக்கு அப்பா முற்றுப்புள்ளி வைத்துவிட எனது மாமரமும் சாத்திரியின் உதவியால் தப்பித்துக்கொண்டது.நானும் பழைய மாதிரி மாமரத்தின் கீழே எனது ஓய்வுப்பொழுதுகளை அனுபவித்துக்கொண்டிருந்தேன்.இடையில் எதிர்கொண்ட ஒரு வருட வன்னி இடப்பெயர்வின் பின்னர் ஊருக்குத் திரும்பியபோது காய்ந்த மாவிலைகள் நிலமெங்கும் மூடிப்போய்க் கிடக்க நேசித்தவர்களின் மிக நீண்ட பிரிவொன்றை எதிர்கொண்ட அடையளங்களை சுமந்தவாறு எங்களின் வருகைக்காகக் காத்து நின்றது அந்த மாமரம்.

நீண்ட ஒரு சமாதானத்தின் பின்னர் மிகப்பெரிய யுத்தம் ஒன்று ஆரம்பித்தபோது மாமரத்துடன் சேர்ந்து நானும் நன்றாக வளர்ந்து விட்டிருந்தேன்.ஈழத்தின் பெரும்பாலான இளைஞ்ஞர்களைப்போல் இலங்கைப் படைகளின் நெருக்கடிகளை நானும் எதிர்கொண்டபோது எல்லோரையும்போலவே அகதி ஆகப்புலம்பெயரவேண்டிய கட்டாயக் காரணிகள் பல என் முன்னே இருந்தன.மேகம்கள் சூரியனை மறைத்து மழையாக உடைந்து கொட்டிக்கொண்டிருந்த இருண்ட நாளொன்றிலே மண்ணை விட்டுப் பிரிய முடிவெடுத்து என் மூட்டை முடிச்சுக்களினுடன் தயாரானபோது அப்பொழுதுதான் துளிர்த்திருந்த அந்த மாமரத்தின் மெல்லிய இலைகள் என் பிரிவை நினைத்து அழுபவைபோல மழைத்துளிகளைச் சிந்திக்கொண்டிருந்தன.சோகத்தில் உடைந்துபோன மனிதர்களைப்போலவே மழையில் நனைந்து ஒடுங்கிப்போய் அந்த மாமரமும் அப்பொழுது காட்ச்சியளித்துக்கொண்டிருந்தது.மாமரத்தை விட்டு வெகு தொலைவிற்க்குப் போய்க்கொண்டிருந்தேன்.என் துன்பங்களின் போதும்,சந்தோசங்களின் போதும்,தனிமைகளின் போதும், கொண்டாட்டங்களின் போதும் என்னுடன் பேசிக்கொண்டிருந்த எனக்கே எனக்கான அந்த மாமரத்தின் நிழலைவிட்டு வெகுதூரத்திற்க்குப் போய்க்கொண்டிருந்தேன்.அதன் கீழே வெறுமையாக இருந்த சாய்வுநாற்க்காலியில் என் மனதை விட்டு விட்டுப் போய்க்கொண்டிருந்தேன்.இனி அந்த மாமரத்தின் கீழே மாலைப்பொழுதுகளில் புத்தகங்களின் பக்கம்களைப் புரட்டியபடி இருக்கும் எழுத்துக்களைக் காதலிக்கும் சிறுவன் காணாமல் போயிருப்பான்.இனிமேல் தன் ஒவ்வொரு இலைகளையும்,கிளைகளையும் நேசிக்கும் ஒரு உற்ற நண்பனைத் தேடியபடி அந்த மாமரம் நீண்ட நாட்க்கள் காத்திருக்க வேண்டியிருக்கலாம்.இப்படித்தான் ஈழத்தின் அனேகமான வீடுகளில் மரங்கள் அகதியான தங்களின் நேசிப்புக்குரியவர்களின் வரவை எதிர்பார்த்து தங்கள் நிழலுடன் பேசியபடி தனிமையை உணர்த்திக்கொண்டிருக்கின்றன...

Wednesday, 3 April 2013

முற்றுப் பெறாத கனவுகளின் கதை...

பாட்டி கனவுகளின் ராணி...பாட்டியிடமிருந்துதான் நான் கனவுகளுக்கு வர்ணம் தீட்டக் கற்றுக்கொண்டேன்...பாட்டி வெற்றிலைகளை மென்றவாறு வியப்பும்,சுவாரஸ்யமும்,புதிரும் பூத்துக்கிடக்கும் அவளின் அனுபவங்களை வார்த்தைகளாக அசை போட்டுக்கொண்டிருப்பாள்... பாட்டியின் வர்ணனைகளில் மயங்கி நின்றபடி அவள் வார்த்தைகளில் இருந்து தெறிக்கும் தலைமுறைகளின் கதைகளை நான் சேகரித்துக்கொண்டிருப்பேன்... எங்கள் கிராமம் தலைமுறைகள் கூடிக் கூடி விளைந்த முற்றம்...அவர்களின் பேச்சும்,சிரிப்பும்,அழுகையும்,சந்தோசம்களும் ,துக்கம்களும் கால நிழல்களாக அந்தக் கிராமத்தின் முற்றங்கள் முழுவதும் படிந்திருக்கின்றன...மனிதர்களின் காலடித்தடங்களும்,பிம்பங்களும்,பேச்சொலிகளும் படிந்துபடிந்து தலைமுறைக் கனவுகளின் பூமியாக விளைந்திருந்தது அந்தக் கிராமம்... அது தலைமுறைகளின் பல கதைகளை தன் கால அடுக்குகளில் பவுத்திரமாக்கி வைத்திருக்கிறது...பாட்டி எப்பொழுதாவது அந்தக் கதைகளில் இருந்து சில முடிச்சுக்களை அவிழ்த்து சந்ததிகளின் உணர்வுகளை என்னுள்ளும் மெதுவாகக் கடத்திவிட்டிருப்பாள்...அந்தக் கதைகளில் இருந்து ஓராயிரம் காலங்கள் விரிந்து காட்சிகள் பெருகும்...காட்சிகளின் பின்னால் நான் கட்டுண்டு நடப்பேன்..நினைவுகளின் பள்ளத்தாக்கில் விழுந்தெழுந்து செம்மண் படிந்த வீதிகளில் அலைந்துதிரிந்து ஓலைகளால் வேயப்பட்ட வீட்டு முற்றங்களைக் கடந்து அம்மணமாக புழுதிகளை தங்கள் கைகளால் அள்ளித்தின்று கொண்டிருக்கும் குழந்தைகளுடன் ஆடிக்களைத்து எங்காவது ஒரு மூலையில் சந்ததிகளின் நிழலைப் பரப்பிக்கொண்டிருக்கும் வேப்பமரம் ஒன்றின்கீழ் கனவுகளின் அரவணைப்பில் நான் இளைப்பாறிக் கொண்டிருப்பேன்...

பாட்டியின் பாதத்தடங்களை மிதித்துப் போய்த்தான் நான் அந்தக் கிராமத்தை தாண்டி இருந்த உலகத்திற்கு அறிமுகமாகி இருந்தேன்..பாட்டி கைகளை நீட்டி தன் விரல்களைப் பிடித்துக்கொள்ள சொல்வாள்..நான் அவள் விரல்களை இறுக அணைத்தபடி புற்களையும்,புழுதியையும்,கற்களையும் மிதித்து மிதித்து நடந்து கொண்டிருப்பேன்..பாட்டியின் காலடிகள் பட்டுப்பட்டு காணிகளினூடு பாதைகள் முளைத்திருந்தன...அந்தப் பாதைககளில் என் பாதங்கள் தவழ்ந்து நடை பழகியிருந்தன.....பாட்டியின் கனவுகளில் இருந்து முளைத்ததுதான் நாங்கள் இருந்த வளவு...அவள் கனவுகள் முளைத்து,தழைத்து,விழைந்து அந்த வளவெங்கும் விரிந்து பரந்து நிழல் பரப்பிக் கொண்டிருக்கின்றன...அந்த நிழலின் கீழ்தான் நாங்கள் இளைப்பாறிக் கொண்டிருந்தோம்...

கால்களை மட்டும் நம்பியே எம்மூரில் பிரயாணங்கள் உயிர்வாழ்ந்து கொண்டிருந்த காலமது..எங்கள் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டி நிகழ்ந்த ஒவ்வொரு பிரயாணத்திலும் பாட்டியின் கால்களே எங்களுக்காய் தேய்ந்து கொண்டிருந்தன..பாட்டியின் காலடியில் இருந்தே என் பயணங்களும் ஆரம்பமாகி இருந்தன... காலடியில் அகண்டும்,தொலைவில் ஒடுங்கியும் பாம்புபோல வளைந்துவளைந்து செல்லும் வீதிகளையும், தேவைகள் துரத்த முகங்களில் எதிர்பார்ப்புக்களை சுமந்தவாறு பயணித்துக்கொண்டிருக்கும் மனிதர்களையும் கண்களில் வியப்பும்,புதினமும் விரிந்து மலர அவதானித்தவாறு பாட்டியின் நிழலில் மிதந்து மிதந்து உலகங்களைத் தரிசித்தவாறு நான் நடந்து கொண்டிருப்பேன்...

பாட்டியுடன் நிகழ்ந்த எனது அநேக பயணங்கள் சந்தையை நோக்கியதாகவே அமைந்தன...சந்தை எனக்கு பல்லாயிரம் மனித உணர்வுகள் மோதிப் புரளும் புதிரான இடமாக இருந்தது..அது எப்பொழுதும் மனிதர்களால் பிதுங்கி வழிந்து கொண்டிருந்தது...அங்கே கனவுகள் தேங்கிய விழிகளுடன் மனிதர்கள் அலைந்து கொண்டிருந்தார்கள்..மனித வெள்ளத்தில் மோதிப் புரண்டு சந்தை இரைந்து கொண்டிருந்தது...சந்தையில் இருந்து சற்று வெளித்தள்ளி மீன் சந்தை இருந்தது..அது சந்தையை விட இன்னும் அதிகமாக இரைந்து கொண்டிருந்தது..அங்கு நிலத்திலும் சுவரிலும் கடல் ஒட்டிக் கிடந்தது...அங்கிருந்து கடல் சுவாசப்பைகளில் புகுந்து நிறைந்து வீடுவரை வந்திருக்கும்...

சந்தையில் மனதை மயக்கும் மந்திர வார்த்தைகளை வீசியபடி வணிகர்கள் கூவிக் கொண்டிருந்தார்கள்..அவர்களின் மந்திரச் சொற்களில் மனதைப் பறிகொடுத்தவர்கள் தாண்டிப் போக முடியாதபடி தடுமாறினார்கள்...மனிதர்கள் இடைவிடாது சொற்களை உதிர்த்துக் கொண்டிருக்க சொற்கள் வார்த்தைகளாகிக் கொண்டிருந்தன..வார்த்தைகளைச் சேர்த்து சந்தை பெரும் இரைச்சலாகப் பேசிக்கொண்டிருந்தது..வினோதமான செய்கைகளுடன் ஒவ்வொருவரும் சந்தையில் அசைந்து கொண்டிருந்தார்கள்..நான் அவர்களின் செய்கைகளில் கட்டுண்டு மயங்கி நிற்பேன்..சந்தையின் வியப்புக்கள் என்னுள் பெரும் புதிர்வனமாய் வளர்ந்தன..

பாட்டி சாகசக்காறி...கொண்டுவந்தவற்றை பேசிவிற்கும் மாயவித்தையும் வணிகர்களின் மந்திர வார்த்தைகளுடன் போட்டியிட்டு பொருட்களை வாங்கும் தந்திரமும் தெரிந்திருந்தது...பாட்டி சந்தையில் பொருட்களை வாங்கி பைகளை நிறைத்துக்கொள்ள நான் காட்சிகளில் மயங்கிமயங்கி களைத்து நிற்பேன்..வெயில் நெருப்பாக எரிக்கும் மதியப் பொழுதுகளில் கானல் நீர் கண்களை ஏமாற்றும் சுடு வீதியில் பாட்டி ஒரு பாரம் தூக்கியாய் முன் நடக்க உருகும் தாரில் அழுத்தமாக என் பாதங்களைப் பதித்தபடி சந்தையில் சேகரித்த நினைவுகளை அசை போட்டவாறு பாட்டியின் நிழலில் நான் தள்ளாடித்தள்ளாடி நடந்துகொண்டிருப்பேன்..

ஊரின் பொழுதுகள் வேப்பமரக் குயிலின் பாட்டுடன் மலரும்..சேவல்கள் இன்னொரு சேர்க்கையை நினைத்துச் சிலிர்த்தபடி ஊரை எழுப்பும்...உண்டகளைப்பில் துங்கிய பறவைகள் மரங்களில் சோம்பல் முறித்துச் சிறகசைக்கும்... அணில்கள் விழித்துக்கொள்ளும்...பனியில் தோய்ந்து மண் மணத்தில் பயிர்கள் கிறங்கி ஆடும்...மல்லிகைப் பூவில் நனைந்து முற்றம் மணக்கும்...கோயில் மணி ஓசையில் ஊர் விளிக்கும்...இரவெல்லாம் கண்விழித்துக் காவலிருந்த பன்னோலைப் பாய்கள் சுருண்டு மூலையில் தூங்கப் போகும்...சந்தைக்குப் போகும் பயிற்றங்காய்களில் இருந்தொழுகும் நீரில் வீதி நனையும்...கிணற்றடிகளில் காப்பிகளும் வாளிகளும் சண்டை பிடிக்கும்...வேப்பங்காற்றில் தோய்ந்துறங்கிய ஊர் சுறுசுறுப்பாகும்...பாட்டி மூட்டிய அடுப்பில் பொங்கிக்கொண்டிருக்கும் பால் மணத்துடன் நான் கண்விழிப்பேன்.....பாட்டி எப்பொழுது தூங்கி எப்பொழுது எழும்புகிறாள் என்பதை நான் ஒருபோதும் அறிந்ததில்லை.கடவாயில் ஒழுகும் பால் மணத்துடன் தொடங்கும் ஊரின் காலைப் பொழுதுகள்...ஊரை விரட்டியபடி பகல் மெல்ல வீங்கும்...நிலச்சூடு ஏறும்...சூரியன் நடுவானை நெருங்கும்போது நானும் பாட்டியும் குளக்கரையில் நின்றுகொண்டிருப்போம்...

மனிதர்களின் தடங்கள் பட்டுப் பட்டு தாமரைகள் விலகியிருக்கும் இடமாகப் பார்த்து பாட்டி குளத்தில் இறங்குவாள்...நான் பாட்டியின் பின்னே கூட்டமாக வரும் மீன் குஞ்சுகளை விரட்டிப் பிடிக்க முயற்சித்து தோற்றுக் களைத்து நிற்க பாட்டி குளித்து முடித்துக் கரை ஏறுவாள்...குளத்தில் பொழுதழியும்...குளக்கரையில் நாவல் மரங்கள் வீங்கிப் பருத்து நிற்கும்...நாவல்ப் பழங்களை நான் சேகரித்துக் கொண்டிருக்க பாட்டி ஈரத் துணிகளை துவைத்து உலர்த்தி விட்டிருப்பாள்...சூரியன் நடுவானில் நிற்கும்போது நானும் பாட்டியும் நீரில் ஊறிய உடல் காற்றில் கொடுக நிழலுடன் நடப்போம்...வெயில்ச் சூட்டில் வீதிகள் வெறித்துக் கிடக்கும்....நாவல்ப் பழங்களை ஒவ்வொன்றாக உமிழ்ந்தபடி நீரில் ஊறி இழகிய பாதங்களில் சுடு புழுதி ஓட்டிவர நானும் பாட்டியும் வீடு வந்து சேர்ந்திருப்போம்....

வெளியே அடிக்கும் மதிய வெயிலுக்கு ஒதுங்கி தாத்தா திண்ணையில் சாய்மனைக் கட்டிலைப் போட்டு அதில் கால்களை அகலப் பரப்பி துங்குவார்...சடையன் நாய் தாத்தாவுக்குப் பக்கத்தில் சுருண்டு படுத்திருக்கும்...தாத்தாவுக்கு ஒடியல்ப் பிட்டு மதிய உணவில் இருக்க வேண்டும்...பாட்டி ஒடியல் பிட்டை தாத்தாவுக்கு புழுங்கலரிசிச் சோற்றுடன் சுடச்சுட ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொடுப்பார்....குளித்து முடித்து தாத்தா சாப்பிடும்போது ஒடியல் வாசம் காற்றில் பரவும்...சடையன் நாயும் நாலைந்து கோழிகளும் தாத்தாவுக்காகக் காவலிருக்கும்...தாத்தாவின் உடம்பு இரும்பு போலிருக்கும்...காற்று அதில் மோதித் தெறித்து முடியாமல் நாணிப் பின்வாங்கும்...தாத்தா தன் மீசையை அடிக்கடி பெருமையாகத் தடவிக்கொடுப்பார்...அதை அவர் எப்பொழுதும் தன் வம்சப் பெருமையின் அடையாளமாகக் கருதுவார்...சுருட்டுப் புகைக்கும்போது மட்டும்தான் அது அவருக்கு இடையூறாக இருக்கும்...ஓய்வாக இருக்கும்போது தாத்தா கட்டில் இருந்து பெரிய புகையிலையாக எடுத்து விரிப்பார்...தாத்தாவின் முகத்தைப் போலவே அது அகல மலர்ந்திருக்கும்...தாத்தா பாக்குவெட்டியால் புகையிலையை குறுக்காக வெட்டி அழகாகச் சுற்றி வளையம் வளையமாக புகைவிடுவார்...புகை மணம் எனக்கு தலையிடிப்பது போலிருந்தாலும் அது தாத்தாவின் வாசத்துடன் வருவதால் அவரின் மடியில் படுத்துக் கிடந்தபடியே அவர் புகைவிடும் அழகை விரும்பி ரசிப்பேன்...

புழுதி வீதிகள் ஒளிர்ந்து கொண்டிருக்கும் மாலைப் பொழுதுகளில் நிலச்சூடு கால்களை விரட்டவிரட்ட நானும் பாட்டியும் வயல்கரைகளில் அலைந்து திரிவோம்...வயலோரம் காலப் பாடல்கள் போல நெல்மணிகள் களைக்காமல் காற்றில் கலகலக்கும்..தென்றல் இயற்கையை இரசித்தபடி மெல்லக் கடந்துபோகும்...வயல்களில் தேங்கியிருக்கும் மழை நீரில் விவசாயிகளின் கனவுகள் சலசலக்கும்...ஆட்காட்டிகள் வட்டமிட்டுக்கொண்டிருக்கும் வயலோர மாலைப் பொழுதுகளை நானும் பாட்டியும் வெற்றுக் கால்களால் நடந்து கடப்போம்...பெண்கள் விறகுச் சுள்ளிகளை சுமந்தவாறு தங்கள் நிழலுடன் நடந்து கொண்டிருப்பார்கள்...பாட்டி கதைகளைப் பரப்பியவாறு தன் தோழிகளுடன் சுள்ளிகளை சேகரித்துக் கொண்டிருப்பாள்...நான் வயல்களினுடு நீண்டு நெடுத்திருக்கும் ஒற்றையடிப் பாதைகளின் முதுகில் தங்கிவிட்டிருக்கும் புற்களின் மீதும புழுதியின் மீதும் நினைவுகளைப் படரவிட்டபடி கற்பனைகளுடன் பேசிக்கொண்டிருப்பேன்.....காற்றில் இருக்கும் ஈரப்பதன் பார்த்து பாட்டி தென்திசையால் மழை வருமென்பாள்...அதுகேட்டுப் பூமிப் பெண் முகம் நாணுவாள்..பாயில் காய்ந்துகொண்டிருக்கும் ஓடியல்களின் சிந்தனையில் பாட்டியின் நடையில் வேகம் கூடும்...பகல் உழைத்துக் களைத்து மயங்கிச் சிவந்திருக்கும் மாலைப் பொழுதுகளில் வயல்கரை முழுவதும் கனவுகளில் அலைந்து திரிந்தும் களைத்துப் போகாத மனதைச் சுமந்தவாறு புழுதி வீதிகளில் புதைந்து புதைந்து எழும் என் பாதங்களை விரட்டியபடி பாரத்துடன் நடந்து கொண்டிருக்கும் பாட்டியின் தடங்களைப் பிடிக்க விரைந்து கொண்டிருப்பேன்...நிழல் உறங்கும் புழுதி வீதிகளில் நாங்கள் ஒருபோதும் நடந்து களைத்ததில்லை...

அறுவடை காலங்களில் முற்றிச்சரியும் நெற்கதிர்களில் இருந்து பெருகி வழியும் ஓசை வெள்ளத்தை காற்று அள்ளிக்கொண்டிருக்கும்...காயும் வைக்கோல் வாசனையின் பின்னால் அலையும் கால்நடைகளின் நாவில் எச்சிலூறும்...வீடுகள் நிரம்ப நெல்மணம் பூக்கும்...அறுவடையும்,சூடடிப்பும்,உழவுமாக ஊரின் முற்றத்தில் உழைப்பு தூங்காதிருக்கும்...நிலம் தேகங்களின் வியர்வைகளில் குளிக்கும்..அவியலும் பரிமாறலும் என அடுப்படிகள் கமகமக்கும்... அறுவடையின் பின் கால்நடைகள் ஊர்முழுதும் சுதந்திரத்தை அனுபவிக்கும்...வயல்கரை முழுவதும் அலைந்தலைந்து களைத்துப்போய் இருள் சரசரக்கும் மாலைக் கருக்கல்களில் வாய்களில் நுரை தள்ள அவை பட்டி திரும்பும்...பாட்டி நிலவொளியில் அருவாளில் உட்கார்ந்திருந்தவாறு காலைக்கருக்கலில் நான் சேகரித்த நுங்குகளை மாடுகளுக்காக சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கடகத்தை நிரப்பிக் கொண்டிருப்பாள்..வழிந்தோடும் நுங்குத் தண்ணியில் குளித்தபடி நான் பாட்டி வெட்டித் தரும் நுங்குகளை வாங்கி ஒவ்வொன்றாக நாவில் நனைத்துக் கொண்டிருப்பேன்...பாட்டியின் நுங்குக் கயர்களை அசை போட்டபடி பசுக்கள் அந்த எளிமையான கிழவிக்கு பாலை அன்பாய்ச் சொரியும்...அவற்றின் அன்பில் பாட்டியின் மனமும் அவள் ஏந்திப் பிடித்திருக்கும் பாத்திரமும் நிறைந்து வழிந்து கொண்டிருக்கும்....பாட்டி புதுச் சட்டியில் பாலை நிறைத்து அடுப்பை மூட்டுவாள்...நான் சட்டியில் பொங்கி நுரைக்கும் பாலை ரசித்தபடி பாட்டியின் அருகே குந்தியிருப்பேன்...

பாட்டியிடமிருந்து நான் கற்றுக் கொண்டவைகளில் எப்பொழுதும் நிழலின் குளிர்மையையும்,நிலவின் தண்மையையும்,வசந்த காலத்தின் இனிமையையும் ஒருங்கே உணர்கிறேன்...நெருப்பாய் எரிக்கும் வாழ்க்கைப் பயணத்தில் பாட்டி ஒரு பெரு விருட்சமாய் நின்றுதாங்க அவளின் நிழலில் என் காலடிகள் இளைப்பாறிக் கொண்டிருந்தன...என் பால்ய காலங்கள் பாட்டியுடன் வளர்ந்து கொண்டிருந்தன...எனது நாட்கள் பாட்டியின் நிழலில் நகர்ந்தன... மாலை நேரத்து புல்லாங்குழல் இசைபோல,மனதை மயக்கும் சித்திரம் போல வாழ்க்கை மெதுமெதுவாக உருவாகிக் கொண்டிருந்தது...நிறைவும்,நிம்மதியும் தூண்களாக அதைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தன...

வாழ்க்கை ஒரு ஆறாக வழிந்தோடிக் கொண்டிருந்தது...காலப் பாத்திரத்தில் நினைவுகள் தேங்கின...பழைய முகங்களின் பிரிவில் வாடியும் புதிய முகங்களின் துளிர்ப்பில் பூத்தும் கிடந்தது ஊர்...காட்சிகள் உதிர்ந்து காலச்சுழலில் அள்ளுண்டு போக புதியன துளிர்த்தன...தென்றலும்,புயலும்,கோடையுமாக மாறிமாறிக் காலச்சுழல் அடித்தது...காட்சிகள் மாறின...சுதந்திரத்தின் முதுகில் தீ மூட்டப்பட்டபோது ஊரின் முற்றத்திலும் அணல் அடித்தது...ஊரின் முகத்தில் புன்னகை தொலைந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது...எட்டுத்திசைகளிலும் இருந்து விரட்டப்பட்ட சந்ததிகளின் துயரத்தில் ஊர் வாடிக் கிடந்தது...வீட்டு நாய்கள் வீதிகளில் அலைந்தன...ஒப்பாரிகள் ஊரை நிறைத்தன...சுதந்திரம் தொலைத்த கால்நடைகள் கட்டைகளில் ஒட்டிக் கிடந்தன....கன்றுகள் பால்மணம் தேய்ந்து பசியுடன் அலைந்தன....

காற்று உஷ்ணமாக வீசிக் கொண்டிருந்தது...வயல்கள் விளைச்சலின்றிக் கிடந்தன...தோட்டக்காறன் வாழ்க்கை வெயிலில் கிடந்ததால் தோட்டங்கள் காய்ந்து துரவுகள் வற்றிப்போயின... ஊர் எரிந்து கொண்டிருந்தது...ஊர்க்காரர்கள் நிழலின்றித் தவித்தார்கள்...வழிபோக்கர்கள் தொலைந்து போனதால் வீதிகள் காடாகின...சந்தை முகங்களற்று வெறுமையாகக் கிடந்தது...சந்தையில் கடல் மணக்கவில்லை...மனிதத் தொடுப்புக்களற்று கடல் நிலத்திலிருந்து தனியாக ஒடுங்கிப் போனது...கடலில் வேட்டைக்காரர்கள் அலைந்ததால் கடற்கரைகள் சுவடுகளற்று வெறுமையாகக் கிடந்தன... வேட்டைக்காரர்கள் கைகளில் ஆயுதங்களுடன் அலைந்து கொண்டிருந்ததால் பறவைகள் குஞ்சுகளுடன் புலம்பெயர்ந்தன...அவற்றின் கூடுகள் வெறுமையாகக் கிடந்தன...ஊரில் எல்லோரின் மீசைகளும் வேட்டைக்காரர்கள் மேல் ஆத்திரத்துடன் துடித்தன...தாத்தா தோட்டத்தை மறந்து போய்விட்டிருந்தார்...வேட்டைக் காரர்களை துரத்துவதைப் பற்றியே அவர் எப்பொழுதும் திண்ணையில் உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தார்....

எல்லைகளில் இருந்து வெட்டுக்காயங்களுடன் துரத்தப்பட்ட சந்ததிகளின் முகங்கள் கோபத்துடன் அலைந்தன...எல்லைக்கற்கள் இடம்மாற்ரப் பட்டதால் ராஜகுமாரன் ஒருவன் வாளேந்தி போயிருப்பதாக பாட்டி சொல்லுவாள்..அதைச் சொல்லும்போது அவள் கண்களில் ஆவேசம் மின்னும்..ஊரிலிருந்து பல அண்ணண்மார்கள் ராஜகுமாரனின் தடங்களைத் தேடிப் போயிருந்தார்கள்...ஊர் இறுகிப் போனது..எங்கும் பேய் மெளனம் உறைந்து போய்க் கிடந்தது... முகங்கள் பயத்துடன் அலைந்தன...ராஜகுமாரனிடம் போனவர்களைத் தேடி வேட்டைக்காரர்கள் ஊருக்குள் புகுந்தார்கள்...ஊர் எரிந்தது...அவலக்குரல்கள் ஊரை நிறைத்தன...ராஜகுமாரனிடம் போனவர்களின் சுவடுகளை மிதித்து இன்னுமின்னும் பலர் கோபத்துடன் புறப்பட்டார்கள்...தாத்தா தன இயலாமையை நினைத்து பற்களை நெருமிக்கொண்டார்...

பாட்டி ராஜகுமாரனைப் பற்றி பெருமையாகப் பேசியபடி வெற்றிலைகளை மெல்லுவாள்...அவள் கனவில் ஒரு ராஜ்ஜியம் விரிந்திருந்தது...அங்கு வீரர்கள் வாளுடன் வேட்டைக்காரர்களைத் தேடி அலைந்துகொண்டிருந்தார்கள்...வேட்டைக்காரர்கள் அஞ்சி நடுங்கிப் போயிருந்தார்கள்..செழித்து வளர்ந்த பாட்டியின் ராஜ்ஜியத்தில் களைகளும் முளைத்தன...பாட்டியின் வெற்றிலைத் துப்பலில் தோய்ந்து களைகள் அழுக்காகிக் கிடந்தன...பாட்டி நட்ட தென்னைகள் வானத்தை நோக்கி ராஜகுமாரனின் வெற்றிக்காக வேண்டிக்கொண்டிருந்தன...பாட்டியின் கனவு பற்றி எரிந்து ஊர்முழுதும் பரவி விட்டிருந்தது...வீரர்களின் வெற்றிக்காக கோவில் முற்றத்தில் மனங்கள் தவங்கிடந்தன...தாத்தா தானறிந்த ராஜகுமாரனின் கதைகளை ரகசியமாக வீட்டில் பரிமாரிக்கொள்ளுவார்...

மெதுமெதுவாகப் பாட்டி தன கனவுகளை என்னுள் கடத்தி விட்டிவிட்டிருந்தால்...ராஜகுமாரனிடம் போன வீரர்களை பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தபோது நான் நன்றாக வளர்ந்து விட்டிருந்தேன்...வேட்டைக்காரர்களிடம் இருந்து தப்புவதற்காக வேருடன் பிடுங்கி என்னை வெளிநாடுகளில் நட்டுக்கொண்டபோது பாட்டி எனக்குள் கடத்திவிட்ட கனவுகளை பொக்கிசமாகப் பாதுகாத்துக் கொண்டேன்...காலத்தின் இரும்புத்திரைகளின் பின்னால் பாட்டியின் ராஜகுமாரன் வீழ்த்தப்பட்டானாம் என்ற கதைகள் காற்றில் பரவின...ஊர் தேம்பி அழுதது...ராஜகுமாரனைப் பற்றிய கதைகள் ஒரு சரித்திரத் துயரமாக நீள்கின்றன...யாவுமறிந்த நிலவு ஊர் முற்றம்தாண்டி ஊமையாகப் போகிறது..ஒரு சரித்திரம் உக்கிப்போவதைப் பார்த்து இனம் அதிர்ந்து நிற்கிறது...பாட்டி கலங்கவில்லை...அவள் கனவுகள் முடிவின்றி வளர்ந்து கொண்டேயிருக்கின்றன...அவளைப் போலவே ஆயிரம் ஆயிரம் பாட்டிகளின் கனவுகள் ஊரைத்தாண்டி,தேசம்தாண்டி,கனட்ங்களைத் தாண்டி பல்லாயிரம் பேரன்களின் கனவுகளில் பெரு விருட்சமாக வளர்கின்றன...ஒரு ராஜ்ஜியத்தின் கனவு அவற்றில் புதைந்து கிடக்கின்றது... 

Tuesday, 25 December 2012

எங்க ஊர் காட்வெயர் எஞ்சினியர்...

யாழ்ப்பாணத்துக்கு கணணி பரவலாக அறிமுகமான நேரத்தில் எத்தினை பேர் ஊரில் இருந்தீர்களோ தெரியாது..அப்படி இருந்திருந்தால் அந்த நேரம் புதிது புதிதாக முளைத்த பல கணணி திருத்தும் கடைகளையும் பார்த்திருப்பீர்கள்..அந்த நேரம் கணணி யாழ்ப்பாணத்துக்கு புதிது என்பதால் பிள்ளைகளுக்கு கணணி வாங்கிகொடுத்த பெற்றொர் பலருக்கு அதைப்பற்றி பெரிதாக விளக்கம் ஏதும் தெரியாது..அப்படியான பெற்றொர்கள் கணணி பிழைத்துவிட்டது என்று இந்த திருத்துபவர்களிடம் போனால் அவர்கள் செய்யும் சுத்துமாத்துக்கள் பல..(எல்லாரும் அல்ல)..இந்த நிலமை புலம்பெயர்ந்த பின்னும் பல தமிழ் வீடுகளில் கணணி பற்றிய பெரிய அறிமுகம் இல்லாத பெற்றோரை பல கண்ணணி திருத்துபவர்கள் ஏய்ப்பது நடக்கிறது..இப்படிப்பட்ட ஊர் காட்வெயர் எஞ்சினியர்களை வைத்து ஒரு பதிவு....



அண்ணணிண் சிங்கிள் பாத்ரூம் சைஸ் காட்வெயர் திருத்தும் கடை...

இரண்டு மேசை..இதுக்குள்ளைதான் நீட்டவும் முடியாமல்..மடக்கவும் முடியாமல் அண்ணை பழைய கொம்பியூட்டருகளோட(அதுக்குள்ளை ஒண்டும் கிடவாது..வெறும் கோதுகள்..நான் ஒரு பெரிய வேலைக்காறன் எண்டு காட்ட பம்மாத்துக்கு வைச்சிருக்கிற பழைய இரும்புக்கடை அயிற்றங்கள்...)சண்டை பிடிச்சுக்கொண்டு இருப்பார்...

ஆராவது கொம்பியூட்டர் திருத்த வந்தால் அண்ணை வாங்கோ...இருங்கோ...(இருக்கிறதுக்கு அங்கை இடமுமில்ல கதிரையுமில்ல...கொம்பியூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகாலத்தில வந்த கொம்பியூட்டர் ஒண்டை கவிட்டு வைச்சிட்டு அதிலதான் இருங்கோ எண்டு வாறவையிட்ட சொல்லுறவர்..வாறவை அதைப்பாத்த உடனையே இருக்கிற எண்ணத்தை கைவிட்டிட்டு நேர கொம்பியூட்டரில இருக்கிற பிரச்சினையை சொல்ல வெளிக்கிட்டுவிடுவினம்..அண்ணனின் விருப்பமும் அதுவே...சும்மா இருந்து அந்த நாலுக்கு நாலு கடைக்குள்ளை இடத்தை நிரப்புறதைவிட பக்கெண்டு அலுவலைச்சொன்னால் எவ்வளவுதேறும் எண்டு ஒரு மனக்கணக்கு போடலாம் எண்டுறதை விட அங்கிருக்கிற சாமானுகள் எல்லாம் டம்மி எண்டதை ஆரும் பாத்திடக்குடாது எண்டதுதான் அண்ணைக்கு முக்கியம்...

அண்ணை உங்கை ரவுனுக்க இருக்கிற மூண்டு கொம்பியூட்டர் திருத்துற கடைக்காரரிட்டையும் குடுத்துகேட்டுப்பாருங்கோ..அவங்களுக்கு அரைவாசிச் சாமானுகளின்ர பேரே தெரியாது..இந்த விசித்திரத்திலை வாடகை கட்டி கடை எடுத்து வச்சிருக்கிறாங்கள்...அதில ஒருத்தன் சீதனக்காசிலை போட்ட கடை..மானங்கெட்டவங்கள்..இஞ்சை கொண்டாங்கோ..என்னட்டை வந்திட்டியள் எல்லோ..இனி உங்கடை கொம்பியூட்டர் புதுக்கொம்பியூட்டாராய்தான் வரும்..என்ரவேலை கிளீன் வேலை அண்ணை..உவங்களை மாதிரி சொறியிறேல்ல நான்...ஊரான் எல்லே...கண்ணத்தைப் பொத்தி அடிச்சமாதிரி காசெல்லாம் கேக்கமாட்டன்..என்னடை ரேட் நியாய ரேட்தான் எப்பவும்...

வந்தவர் அண்ணன்ர கதையிலை மயங்கி சுடச்சுட வீட்டுக்குப்போய் கொம்பியூட்டர் குலுங்கிப்போகும் எண்டு பொடியையும் பின்னுக்கு ஏத்தி அவன்ரை மடியிலை அலுங்காமல் குலுங்காமல் புதுமணப்பொம்பிளை மாதிரி கொம்பியூட்டரை கொண்டு வந்து இறக்குவார்...

நம்பிக்கெடப்போகும் அந்த வெங்காயமும் கொம்பியூட்டரை கொண்டுவந்தவுடன இவர் இருக்கிற ஸ்கூட்றைவர் எல்லாத்தையும் போட்டுபாத்து அதிலை எது பொருந்துதோ அதாலை மளமளவெண்டு கவறைக் கழட்டுவார்..உள்ளுக்கை வடிவாய் உத்துப்பாத்திட்டு வெளியாலை தள்ளிக்கொண்டு நிக்கிற ஏதாலும் ரண்டு வயறை குத்துமதிப்பாய் இழுத்துக் கழட்டுறது..பிறகு தலையை சொறிஞ்சுகொண்டு முகட்டு வளையைப்பார்த்து யோசிக்கிறது...அண்ண்ண்ண்ண்ணை....எண்டு இழுத்துப்போட்டு...உள்ளை கனக்க வேலை கிடக்கண்ணை திருத்த...இதுக்குள்ளை இப்ப கையை வைச்சால் மினக்கெடும் அண்ணை..பங்க பாருங்கோ எத்தினை கொம்பியூட்டர் கழட்டினபடி கிடக்கெண்டு...உள்ள இருக்கிற மூடின கோதுவளைக்காட்டுவார்...

வந்தவரும் அண்ணை ரொம்ப பிஸிபோல பாவம் அந்தாள்..முன்னம் கொடுத்தவங்களும் அந்தாலை ஆக்கினைப்படுத்துவங்கள்தனை எண்டு கழிவிரக்கப்பட...ஒரு ரெண்டு நாளையாலை வாங்கோ..எல்லாம் அந்தமாதிரி கிளீனாய் முடிச்சு வைக்கிறன்...ஒருக்கா உங்கடை மொபைல் நம்பரை தந்திட்டு போங்கோ...நான் எதுக்கும் இன்னுமொருக்கா வடிவாய் செக் பண்ணீட்டு என்ன பிரச்சினை எவ்வளவு சிலவு வரும் எண்டு கோல் பண்ணி சொல்லுறன் எண்டு எங்கடை காட்வெயார் என்ஞினியரும் பீலாவிடுவார்...

வந்தவர் போனவுடன் எங்கடை எஞ்சினியர் கடைக்குள்ள இருக்கிற சுத்தியல்,ஸ்பெனர்,குறடு எண்டு அகப்படுற எல்லாத்தையும் பாவிச்சு அங்கினை இங்கினை கொம்பியூட்டரில ஒரு தட்டு ரண்டு சுறண்டல் சுறண்டுவார்..ஏதாவது வயர் கியர் ஆடுப்பட்டிருந்தால் இல்லாட்டி கறல்கிறல் ஏதேனும் கொட்டுப்பட்டால் ஒன் பண்ண குருட்டுவாக்கிலை கொம்பியூட்டர் வேலை செய்யும்..அப்பிடியும் வேலை செய்யாட்டி சயிற்றாபிடிச்சுக்கொண்டு கவறிலை ரெண்டு அடி அடிப்பார்..முந்தி பொருளாதார தடையுக்கை ரீவி பாக்க யூஸ் பண்ணிண வாட்டர்பம் இன்ஞின்மாதிரி திடீரெண்டு கொம்பியூட்டர் வேலை செய்யும்...

அப்ப இவர் உடனை போனைபோட்டு அண்ணை எல்லாம் ரெடி வந்து சாமானை பிக் அப் பண்ணிக்கொண்டுபோங்கோ எண்டுவார்...கொம்பியூட்டரைக்குடுத்தது உடனை அண்ணை என்னமாதிரி பீஸ் எல்லாம்..எவளவு வரும் எண்டு இழுக்க..இவர் உடனை அண்ணை காசென்ன காசு மனிசர்தான் முக்கியம்..அதுகும் நீங்கள் எங்கடை ஊர்க்காரர்..உங்களிட்டை கேப்பனே..நான் கூலிகீலி ஒண்டும் வைக்கேல்லை அண்ணை..சாமானுவள்தான் கொஞ்சம் மாத்தவேண்டி வந்திட்டு...இஞ்சை யாழ்ப்பாணத்திலை ஒறிஜினல் சாமனுவள் எடுக்கிறதே கஸ்ரம்..எல்லாம் சைனிஸ் டூப்ளிக்கேற்றுவள்தான் விக்கிறாங்கள்..ஆனால் நான் உங்களுக்கு கொம்பனியாலை இறக்கின திறம் சாமானுவளாய்தான் போட்டிருக்கிறன் எண்டிட்டு...நாலைஞ்சு இங்கிலிஸ் எழுத்துக்களை குத்துமதிப்பாய் கோத்து  Pso,MGT,MMS எண்டு நாலைஞ்சு பேரை மாத்தின பாட்ஸ்களின் பேரெண்டுவர்..இப்ப கொன்டுபோய் போட்டுபாருங்க சும்மா தண்ணிமாதிரி உங்கட கொம்பியூட்டர் வேலை செய்யும் எண்டவும்..இதுவும் நம்பி கேட்ட காசை குடுத்திட்டு வீட்டுக்கு எடுத்திட்டுபோகும்..

இந்த குறளிவித்தைக்கெல்லாம் மசியாத கொம்பியூட்டரை இவர் திருத்தேலாது எண்டு சொல்லமாட்டர்..கவுரவம் என்ன ஆகிறது..அதுக்குதான் இன்னொரு கதை வைச்சிருக்கிறார்..அண்ணை இதுக்குள்ளை நிறைய சாமானுவள் மாத்தவேணும்..புரொசெசர் இத்துப்போச்சு...மதர்போட் உக்கிப்போச்சு..றம் செத்துப்போச்சு...உவ்வளவும் மாத்திறதை விட நீங்கள் ஒரு புதுக்கொம்பியூட்டர் வாங்கலாம் எண்டவும் வந்த அப்பாவி அதை நம்பி கொண்டந்த கொம்பியூட்டரை இனி ஆர் திருப்பி கொண்டு போறதெண்டு இவரிட்டையே விட்டிட்டு இவர் சொல்லுற கடையிலை புதுக்கொம்பியூட்டர் வாங்கும்..அந்தக்கடையிலை கிடைக்கிற கொமிசனையும் வாங்கிகொண்டு வந்த வெங்காயம் விட்டிட்டுபோன கொம்பியூட்டரை ஆரேனும் இன்னும் நல்லாய் திருத்துற ஆக்களிட்டை குடுத்து திருத்துவிச்சு இன்னொரு வெங்காயத்தின்ர தலையிலை கட்டிவிடுவார் எங்கடை என்சினியர்... ஆனால் அவற்றை இந்தளவு வண்டவாளங்களுக்கு நடுவிலும் கடைக்கை ரைகட்டிக்கொண்டு நிக்க ஒரு நாளும் மறக்க மாட்டார்...இப்பிடிதான் எங்கடை காட்வெயர் எஞ்சினியர் மார் பலற்ற பிழைப்பு யாழ்ப்பாணத்திலை அந்த நேரம் ஓடிச்சு.. :lol:

Monday, 19 November 2012

தரைக்குவரும் நட்சந்திரங்கள்..


கண்ணீரை ஆவியாக்கியபடி
ஒரு காலம்
வறண்டுபோய் கிடக்கிறது..


ஊரெல்லாம்
ஒருபாட்டம் மழைவராதா என்று
மண்ணை இறுகப்பிடித்தபடி
ஈரப்பதன் தேடி
வேர்கள் மூச்சுவிடத்துடிக்கின்றன 


திசைகளை மூடி
வீசும் அணல்காற்றில்
தீய்ந்து தீய்ந்து
ஒவ்வொரு இலைகளாக 
கருகி உதிர்கின்றன


அணலாய் கொதித்துருகும்
எல்லாக்கடல்களில் இருந்தும்
ஆவியாகின்றன
கண்ணீர்த்துளிகள்


இனி முட்டி முடியாமல்
ஒரு திசையில்
விரைவில் இருட்டும்


அப்போ பெய்யும்..
பெய்யத்தானே வேண்டும்
ஒரு பெரும் மழை
பயிர் பச்சை தழைக்க


உக்கிப்போய் கிடக்கும்
உதிரம் காய்ந்த தேசத்தின்
சருகுகளை உரசியபடி
காற்று சடசடவென்று
உறுமிக்கொண்டு வீசும்


வெட்டி மின்னல் பாயும்போது
வெறும் கோடை என்ன செய்யும்..?
ஒற்றைவானம் என்ன
ஓராயிரம் வானமும்
மொத்தமாய் பிளந்துவந்து
கடலை சொரியும்


பார்
உள்ளே ஊமையாய்
எரிந்துகொண்டிருப்பது
பெருந்தீ..


ஒரு புள்ளியில்
வெடித்துப் பிழந்து
விண்ணோக்கிப்
பாயும்போது
மின்னல் தொடங்கும்..


முக்கி முக்கி
இடிமுழக்கத்தை
ஈனாமல் போக
எம்முன்னே இருப்பது
மலட்டு வானமல்ல
கண்ணீர்களால்
கருக்கொண்ட
கருவானம்..


எனக்கு தெரியும்
ஒருகாலத்தை
கடந்துபோவது
அவ்வளவு இலகுவல்ல


நாங்கள்
ஒரு கொடிய
கோடையைக் கடக்கிறோம்


மாரி கருக்கட்டுகிறது
வா குடையைத்தேடுவோம்..
மழைவரும்போது
கல்லறைகளைத்தேடி
தரைக்குவரும் நட்சத்திரங்களை
தரிசிக்க செல்லவேண்டும்... 

Saturday, 25 August 2012

பேனாவில் இருந்து வடியும் இரத்தத்துளிகள்...


அண்மையில் பிரான்சின் வெயில்நாளொன்றில் பாரிஸின் மையப்பகுதியில் வெள்ளையினத்தவர்களின் நடுவே உலகெங்கும் சிதறி இருக்கும் என் இனத்தில் இருந்து தெறித்த ஒரு துளியாக இலக்குகள் எதுவுமின்றி நான் அலைந்துகொண்டிருந்தேன்....என் மொழியின் சுவடுகளே இல்லாத சனசந்தடிமிக்க அந்த நகரத்தில் புள்ளிகளுடன் புள்ளியாய் வெள்ளைகளின் நடுவே நாடிழந்த ஒரு அகதித்தமிழனாய் நான் நின்றுகொண்டிருந்தேன்....நடமாடும் பொம்மைகள்போல் விளையாடிக்கொண்டிருந்த வெள்ளையினக் குழந்தைகளின் புன்னகையில் மனதைப் பறிகொடுத்தபடி பொன்னிறத்தில் அமைந்த அந்த அற்புதமான மாலைப்பொழுதை நான் அனுபவித்துக்கொண்டிருந்தபொழுது விளையாட்டில் தன்னைமறந்த குழந்தை ஒன்று திடீரெனத் தவறி அங்கிருந்த சிமெண்ட் நிலத்தில் விழுந்துவிட்டது.காலில் சிறிதாக அடிபட்டுவிட்டிருந்தது.வெயில் நாளென்பதால் இரத்தம் நிற்காது வழிந்தோடிக்கொண்டிருந்தது.கணப்பொழுதில் அந்தக்குழந்தையை பலர் மொய்த்துவிட்டனர்.சில நிமிடங்களில் அம்புலன்ஸ் வண்டி ஒன்று அவ்விடத்திற்க்கு வந்து சேர்ந்துவிட்டது.ஒரு பெருந்துயர்க் காட்சி அப்பொழுது என்மனதில் விரிகிறது.2009 ஆம் ஆண்டின் ஆரம்பகாலங்களில் இப்படி எத்தனை எத்தனை ஆயிரம் எங்கள் குழந்தைகள் இரத்தம் சிந்தியபடி நிலத்தில் கிடந்தார்கள்.எந்தத்தப்பும் செய்யாத அந்தக் குழந்தைகளின் கண்ணீருடன் கூடவே கசிந்த நீதியினதும்,மனச்சாட்ச்சியினதும் ஓலங்களில் தோய்ந்து மூச்சடைத்துப்போய்க் கிடந்தது பூமி..வீரிட்டுக் கதறி அழுத எம் குழந்தைகளின் ஓலங்கள் உலகின் காதுகளை அடையும் முன்னரே வீரியமிழந்து காற்றுடன் கரைந்துபோயின...எங்கள் குழந்தைகளை அரவணைக்கவோ,அவர்களின் காயங்களுக்கு கட்டுப்போடவோ இந்தக் குழந்தைக்கு இருந்ததுபோல் அப்பொழுது யாரும் அங்கிருக்கவில்லை.அநாதையாகத் தெருக்களில் வீசியெறியப்பட்டு இரத்தம் சிந்தியபடி எங்கள் குழந்தைகள் கிடந்தனர்.இரக்கமற்று கண்களை இறுகமூடிக்கிடந்தது உலகம்.

பிஞ்சுக்குழந்தை மலர்விழி.....அண்ணா என்றழைக்கும் அழகிய மழலைக்குரலுக்கு சொந்தக்காறி.இனிய ஒரு சங்கீதம்போல அலைபேசியினூடு ஒலிக்கும் அவள் குரலில் மயங்கி மணித்துளிகளை மறந்து நான் பேசிக்கொண்டிருப்பேன்...அவளின் குழைவான சொற்கள் என் செவிகளில் விழும்போதெல்லாம் சிறகடித்துப்பறக்கும் பல்லாயிரம் வண்ணாத்துப்பூச்சிகளின் நடுவே என் மனம் மிதந்துகொண்டிருக்கும்...தெறித்து விழும் அவள் மழலைமொழியில் என் பால்ய காலங்களின் பிம்பங்களை நான் தரிசிப்பேன்...பின்னொருநாளில் உயிரை நடுங்கவைக்கும் குண்டொலிகளின் நடுவே மயக்கத்தில் இருந்து கண்களை விழித்துப் பார்க்கும்போது செல்பட்ட தன் கால்களில் ஒன்று துண்டாடப்பட்டு வெற்றிடமாக இருப்பதைப்பார்த்து எப்படித் துடித்திருப்பாள் அந்தப் பிஞ்சுமகள்...ஒற்றைக்காலுடன் அவள் உயிர்வாழ்வதைக்கூடப் பொறுக்கமுடியாத சிங்களம் அவள் கால்காயம் ஆறமுன்னரே கொத்துக்குண்டால் தலைசிதற சாகடித்தது....எத்தனைதடவை வெடித்துச் சிதறி இருக்கும் புத்தனின் இதயம்...இப்பொழுதெல்லாம் அண்ணா என்ற வார்த்தையை எந்தக்குழந்தையிடமிருந்து கேட்டாலும் சொற்களில் அடங்கா வலியுடனும் தவிப்புடனும் துண்டாடப்பட்ட தன்கால்களைப் பார்த்த மலர்விழியின் முகமே மனதில் விரிந்து என் இதயத்தை சாகடிக்கிறது....

சர்மிலா அம்மம்மாவின் மடியில் தூங்காமல் ஒருபோதும் உறங்கிப்போனதில்லை..கண்களில் வியப்பும்,புதினமும் விரிய விரிய அம்மம்மாவின் கதைகளைக் கேட்டபடி ஆனந்தமாய் உறங்கிப்போகும் குட்டி உலகம் அவளுடையது.அவள் புன்னகையிலும்,குறும்புத்தனங்களிலும் சிங்களம் என்ன குற்றத்தைக் கண்டதோ...வயிறு பிளந்து குடல் வெளித்தள்ள செத்துக்கிடந்த அம்மம்மாவின் பிணத்திற்க்குப் பக்கத்திலேயே தனியாகக் கிடந்த அவள் தலை என் கண்ணெதிரே தெரிகிறது...இனிக்கதை கேட்க முடியாதே என்று தனியே கிடந்த அந்த முகத்தில் தெரிந்த ஏக்கத்தையும்,தவிப்பையும் எந்த ஒரு இதயமுள்ள மனிதனாலும் இலகுவில் கடந்து சென்றுவிடமுடியாது...

கந்தக நெடி நிரம்பிய ஒரு மாலைப்பொழுதில் முள்ளிவாய்க்காலில் பங்கர் ஒன்றின் அவிச்சலுக்குள் பசிமயக்கத்தில் நினைவிழந்துகொண்டிருந்தால் சின்னஞ்சிறுமி ப்ரியா..பசியோடு துடித்துத்துவண்டு விழுந்துகொண்டிருந்த பிஞ்சுக்குழந்தையின் முகத்தைப் பார்க்கமுடியாமல் மழைபோலப் பொழிந்துகொண்டிருந்த கொத்துக்குண்டுகளின் நடுவே கால்வயிற்றுக் கஞ்சியாவது காய்ச்சலாம் என அரிசி தேடிப்போன தந்தையின் தலையை நெஞ்சில்துளி ஈரமில்லா சிங்கள அரசு அனுப்பிய சிப்பாய் ஒருவனின் தோட்ட துளைத்த செய்திகூடத்தெரியாமல் அப்பாவந்துவிடுவார் என்று பிஞ்சின் பசிபோக்க சொல்லிக்கொண்டிருந்த குடும்பத்தின் பசியை அவர்கள் இருந்த பங்கரின் மேல் எரிகுண்டைப்போட்டு மொத்தமாகவே அணைத்துவிட்டிருந்தது சிங்களம்...இப்பொழுதெல்லாம் கொதிக்கும் உலையில் பசியால் சோர்ந்து சோர்ந்துபோகும் ப்ரியாவின் பிஞ்சுமுகத்தின் பிம்பமே ஆடி ஆடி மேலெழுந்துவந்து அடங்கிப் போகிறது...என் உணவுக்கோப்பை முழுவதும் அவளின் நிறைவேறாத பசியே நிறைந்து போய்க்கிடக்கிறது...

சின்னஞ்சிறுமி அகிலா சிங்கள ராணுவத்திடம் தன் தந்தைக்காக மன்றாடிக்கொண்டிருந்தபோது நாங்கள் உலகின் வீதிகளில் கதறி அழுது கையாலாகதவர்களாக திகைத்துப்போய் நின்றுகொண்டிருந்தோம்...வல்லரசுகளின் பாதங்களை எங்கள் எல்லோரது கண்ணீரையும் ஒன்றாக்கி கழுவினோம்...வீதிகளை மறித்து எம் தேசத்து சேதிகளை கத்திக்கதறி உரைத்தோம்...எம் கண்ணீர்தான் காய்ந்துபோனது...எம் குரல்வளைதான் தேய்ந்துபோனது...சோர்ந்துபோய் நாங்கள் நின்றபோது எங்கள் குழந்தைகளின் உடல்களின்மேல் சிங்களத்தின் ஊர்திகள் ஊர்ந்துகொண்டிருந்தன...ஒரு தலைமுறை புதைக்கப்படுவதை மெளனமாய்,இயலாதவர்களாய் நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம்....நாங்கள் சக்தியற்றவர்களாக நின்றோம்...எங்கள் பலம் ஒரு எல்லைவரைதான் இருந்தது..அதைத்தாண்டி எதையும் செய்ய முடியாத இயலாதவர்களாக இருந்ததுதான் எம் வாழ்நாட்களில் இனி எப்பொழுதும் மறக்கமுடியாத ஒரே ஒரு குற்றவுணர்ச்சியாக வரலாறு முழுக்க எம்மை வதைத்துக் கொண்டிருக்கும்..

ஒற்றைவரியைக்கூட எழுதமுடியாமல் எம் கவிஞ்ஞர்கள் பலரின் பேனாக்களின் வழியே இன்றும் ஓலங்களே இறங்குகின்றன....அவலமாக செத்துப்போன எம் குழந்தைகளின் கண்ணீர்த்துளிகள் பேனாமையாய்க் கரைந்தோடுகின்றன....இன்னும்கூட இரக்கமின்றி,எந்தவிதக்குற்றவுணர்வுமின்றி,கொஞ்சம்கூட வெட்கமின்றி எங்கள் எழுத்தாளர்கள் பலரின் பேனாக்கள் தங்கள் குழந்தைகளின் குரல்வளையை நெரித்த கொலைகாரர்களின்குரலாய்ப் பேசுகின்றன...தம் உறவுகளின் மேல் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் இனப்படுகொலையை,தம் சகோதரிகளின் மேல் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகளை,எமதுமக்கள் சொல்லவே வாய்கூசும் எத்தனையோ உண்மைகளை தங்கள் குழந்தைகளின் புதைகுளிகளின்மேல் நின்றபடி நியாயப்படுத்துகின்றன....வெட்கமற்ற உங்கள் எழுத்துக்கள் இந்த உலகில் இன்னும் விற்றுத்தீர்ந்துகொண்டிருப்பதுதான் செத்துப்போன எம் குழந்தைகளை இன்னுமொருமுறை சாகடிக்கிறது,புதைக்கப்பட்ட என்னினத்தை மீண்டுமொருமுறை புதைக்கிறது....பாடல்களையும்,ஆடல்களையும்,திரைப்படங்களையும் எட்டுக்கோடி தமிழர்களின் ஊடகங்கள் ஒளிபரப்பிக்கொண்டிருக்க தெருக்கோடிகளில் நின்றபடி எங்கள் கண்ணீரைப் பதிவுசெய்ய நாங்கள் எப்பொழுதும் சில வெள்ளைமனிதர்களின் ஊடகங்களை தேடிப்போகவேண்டியிருக்கிறது....எங்கள் குழந்தைகளின் ஓலங்கள்,எங்கள் சகோதரிகளின் கண்ணீர்கள்,எங்கள் அண்ணண்களின் கண்களில் தெரிந்த இயலாமைகள்,ஏக்கம்கள்,மரணத்தின் நிழல்கள் என எங்கள் அவலம்கள் எல்லாம் நல்லிதயம் படைத்த பல வெள்ளையின மனிதர்களின் பேனாக்களில் இருந்து இன்றும் இரத்தமாய்க் கசிந்துகொண்டிருக்கின்றன...எங்கள் குழந்தைகள் சிந்திய இரத்தத்தை சுவைத்தபடி இரக்கமின்றி எழுதிக்கொண்டிருக்கும் என் இனத்தில் தவறிப்பிறந்தவர்களே...உங்கள் மரணம் எழுதப்படும் கடைசி நாளில்,நீங்கள் எழுதியவைகள் மரணவேதனையாக உங்களை சூழ்ந்துகொள்ளும் ஒரு நாளில்,எங்கள் குழந்தைகளின் கண்ணீரை எதிர்கொள்ளமுடியாமல் கூனிக்குறுகிப்போய் நிற்பீர்கள்...ஒரு பெரும் தரித்திரமாகவே வரலாற்றில் உங்கள் இருப்பு எழுதப்படும்...

முள்ளிவாய்க்காலுடன் என் இனம் நிம்மதியான தூக்கம் இழந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன...எப்பொழுதும் காதோரங்களில் கேட்டுக்கொண்டிருக்கும் ஓலங்களுடனேயே ஆரம்பிக்கின்றன எங்கள் நாட்கள்..தலையணையின் அடியில் தலையை இழந்த சர்மிலா எப்பொழுதும் என்னுடன் பேசிக்கொண்டே இருக்கிறாள்...அகிலாவின் அழுகை ஒலி என் படுக்கை எங்கும் நிரம்பிக்கிடக்கிறது...காணாமல்போன தன் தந்தையை தேடிக்கொண்டிருக்கும் அகிலாவின் முகத்தைப் பார்க்கும் தைரியம்கூட எனக்கில்லை...ஒருகாலம் புன்னகையும்,கலகலப்பும்,உறவுகளும் நிரம்பிக்கிடந்த அவள் வாழ்க்கையில் இப்பொழுது ஆத்திரமும்,அழுகையும்,தனிமையுமே நிறைந்துகிடக்கிறது...அகிலாவைப்போல் ஆயிரம் ஆயிரம் அகிலாக்களின் புன்னகைகள் முள்ளிவாய்க்காலுடன் பறிக்கப்பட்டுவிட்டன...எம் தங்கைகளின் கண்ணீரால் எழுதப்படுகின்றன இலங்கைத்தீவின் சாபங்கள்...அணைக்கமுடியாத விடுதலை நெருப்பை அணைக்கத்துடித்த ஆக்கிரமிப்புக்கரங்கள் ஒரு இனத்தின் குரல்வளையை நெரித்துக்கொன்றுவிட்டுக் கொக்கரிக்கிறது...பேசமுடியாத ஊமையாய் ஆக்கப்படிருக்கிறது ஈழத்தில் என் இனம்...

எங்களுக்கென்றொரு தேசம் இருந்தது....எங்களுக்கென்றொரு கூடிருந்தது...படுத்துறங்க மரநிழல் இருந்தது...நிம்மதி என் தேசத்து நிழலில் படுத்துறங்கியது...இன்று வெறுமையும்,களைப்பும்,துயரமுமாய் என் தேசத்து வீதிகள் வெறித்துக்கிடக்கின்றன....வன்னியின் பொட்டல்வெளிகளில் அணலாய் எரிக்கும் துயரங்களிலும்,அடக்குமுறைகளிலும் இருந்து ஆவியாகின்றன எம்மக்களின் கண்ணீர்த்துளிகள்...பள்ளிபுத்தகங்களுக்குப் பதிலாக எங்கள் குழந்தைகள் வாழ்க்கைச் சுமைகளை சுமந்தபடி தள்ளாடுகிறார்கள்...அடுத்தவேளை உணவிற்க்கு வழிதேடுவதைத்தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்கமுடியாதபடி அவர்களின் எதிர்காலங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன...எரித்துக்கொண்டிருக்கும் வேதனைகளுடனும் ஆற்றுப்படுத்தவே முடியாத குற்றவுணர்வுகளுடனும் உடல்கூட்டுக்குள் அடைந்துகிடக்கிறது என் உயிர் வாழ்க்கை...

இப்பொழுது எங்கள் குழந்தைகளுக்குத்தேவை வெறும் அரசியல்க்கோசம்களும் வெற்று வசனம்களும் அல்ல...ஏக்கத்துடன் இருக்கும் அந்தக்குழந்தைகளின் கண்களில் நம்பிக்கை ஒளியை விதைக்கும் எதிர்காலத் திட்டங்கள்,தூக்கிவிட ஒரு தோளுக்காக ஏங்கும் அந்தப் பிஞ்சுகளின் கைகளைப் பிடித்து அழைத்துச்செல்லும் இதயங்களின் உதவிகள்,அவர்களின் வாழ்க்கை நேர்கோட்டில் செல்லும் வகையில் அவர்களை தாங்கிப் பிடிக்கக்கூடிய ஒரு கட்டமைப்பைக் கட்டி எழுப்புதல்,இன்னமும் போரின் எச்சங்களில் இருந்து மீளாமல் இருக்கும் எங்கள் பிஞ்சுகளின் விழிகளில் இருக்கும் அச்சத்தைப் போக்கி அவர்களை ஆற்றுப்படுத்தி மீண்டும் கல்வியில் இணைத்து எல்லாக்குழந்தைகளைப் போலவும் ஒரு அமைதியான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும் திட்டங்கள்,ஏற்கனவே இவற்றைச் செய்துகொண்டிருக்கும் நேர்மையான அமைப்புகளை இனங்கண்டு தனிப்பட்ட வகையில் இவற்றைச் செய்துகொண்டிருக்கும் நல்ல உள்ளங்களையும் ஒன்றாக்கி தாயகத்துக்கு உதவும் ஒரு வலிமையான அமைப்பாக புலம்பெயர்ந்தவர்கள் உருவாகுதல் போன்றனவே தற்போது எங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற முக்கியமாகவும்,உடனடியாகவும் நாம் செய்யவேண்டியவைகளாக இருக்கிறது...

எனதருமை உறவுகளே..! எங்கள் குழந்தைகள் பசியால் வாடியபோது,பாலுக்கு ஏங்கியபோது,பங்கர்களின் இருட்டுக்குள் இருந்து வெளிச்சத்தைதேடியபோது,பிணங்களின் நடுவே அனாதையாக நின்றுகொண்டு மனங்களைத்தேடியபோது மனச்சாட்ச்சியே இல்லாத உங்கள் சிலரின் இதயங்கள் காட்சி ஊடகங்களின் முன்னே கால்களை நீட்டியவாறு உணவுக்கோப்பைகளை ருசிபார்த்துக்கொண்டிருந்தன..எந்தவித சலனுமுமின்றி உங்கள் உலகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது....எந்தக்காரணமும் இன்றிக் கொல்லப்பட்ட எம்மக்களைக் காக்க மறந்து எப்படித்தான் வீழ்ந்துகிடந்தீர்களோ..? உறவுகளே...!செத்துப்போனவர்கள் உங்கள் ரத்தம்கள் என்ற சுயநினைவுகூட இன்றி எப்படி இயங்குகிறது உங்கள் உலகம்...இரக்கமில்லாதவர்களே...!சினிமாக்கதாநாயகர்களின் அழுகை ஒலி விழுந்த உங்கள் காதுகளில் எங்கள் பிஞ்சுக்குழந்தைகளின் இதயத்துடிப்பு கடைசிவரை விழவே இல்லையே...ஏன் என்று கேட்கக்கூட விருப்பமில்லாது உங்கள் கண்களையும்,காதுகளையும் இறுக மூடிவைத்திருந்தீர்கள்...இன்றுவரை திறக்கவிலையே உங்கள் பலரின் இரும்பு இதயங்கள்..

எங்கள் குழந்தைகளின் கண்ணீரை கைகளில் ஏந்தியபடி வீதிகளில் நீதிகேட்க இன்னும் சில இளைஞ்ஞர்கள் இருக்கிறார்கள்...நீறுபூத்த நெருப்பாக கணன்றுகொண்டிருக்கும் இதயத்துடன் நீதிக்காக போராடும் ஓர்மத்துடன் அவர்கள் என்றும் இருப்பார்கள்...அவர்களில் ஒருவனாய் நானுமிருப்பேன்....மலர்விழியினது அண்ணா எனும் மெல்லிய அதிர்வு,அகிலாவின் கதறல்,சர்மிளாவின் ஏக்கம்,ப்ரியாவின் பசியால் வாடிச்சோர்ந்த முகம் இவை எவையும் எம்மைத்தூங்கவிடாது...எங்கள் வீடுகள் முழுவதும் நிறைந்துகிடக்கும் இந்தப்பிஞ்சுகளின் ஏக்கம்களும்,புன்னகைகளும்,கதறல்களும் எங்களை வீதிகளில் நிக்கவைத்துக்கொண்டே இருக்கும்....மரணம் வரைக்கும் எங்களை அது ஓயவிடாது...நாங்கள் கைகளில் ஏந்திவைத்திருப்பது வெறும் பதாதைகளும் கொடிகளும் அல்ல...அவை எங்கள் ஆன்மாவின் வெளிப்படுத்தமுடியாத பெரும் வலி,கதறல்..எப்படியாவது உலகின் காதுகளுக்கு கொண்டுசேர்த்துவிடவேண்டும் என்ற பெரும் துடிப்பு...

செத்துப்போன எங்கள் தங்கைகளின் ஆன்மாக்கள் எங்கள் உடலை கடைசிவரைவழிநடத்தும்...மரணம் வரைக்கும் எம் இனத்தின் விடிவிற்க்கு உழைத்துக்கொண்டே இருப்போம்...என் இனத்தின் துயரங்களை தீர்க்கமுடியாத ஏக்கத்துடனேயே என் உயிர் ஒரு நாள் நின்றுபோகலாம்...அப்பொழுதும் தூங்காத என் ஆன்மா என் தாய்மண்ணில் அலைந்துகொண்டிருக்கும்....என் கல்லறையைத்தாண்டிச்செல்லும் காற்று ஒரு நாள் என் காதில் என் இனத்துக்கு நீதிகிடைத்த சேதி உரைத்துச்செல்லும்...அகிலாவின் அழுகை ஒலி ஓய்ந்ததாகவும்,எம் குழந்தைகள் மரணத்தின் வாடையைச் சுவாசிக்காமல் வாழும் ஒரு புதிய தேசம் உருவாகி இருப்பதாகவும் அது உரத்துச் சொல்லிவிட்டுப் போகும்...அப்பொழுது நான் நிமதியாகத் தூங்கிப்போவேன்...

எதிர்காலம் சிதைந்த தேசத்தின் தெருவழியே......


வேர்களை நினைந்தழுதபடியே
தூங்கிப்போன
நீண்ட ஒரு துயரநாளின்
நடு நிசியில்
தூக்கம்களுக்கிடையே
கனவுகளின் வீதியில்
கோபத்துடன் கணன்றுகொண்டிருந்த
ஊரை எரிக்கும்
நினைவுகளை பின்தொடர்ந்தேன்...

கழுகளுக்கஞ்சிய
கண்களில் மிரட்சியுடன்
சேதி சொல்லி அழைத்துச்சென்ற
நினைவுகளின் கரங்கள்
எல்லாவற்றிலும்
தழும்புகள் நிறைந்து கிடந்தன...
ஒவ்வொரு தழும்புகளில் இருந்தும்
சொட்டிக்கொண்டிருந்த ஆன்மாக்கள்
வீதிகளில் அலைந்து கொண்டிருந்தன...

உற்றுப்பார்க்கிறேன்..
ஈழத்து இதிகாசங்களில்
எழுத்தப்பட்ட பெயர்கள்
எச்சங்களைத் தேடியவாறு..

முகவரி கொடுத்தவர்களின்
எச்சங்களின் முகங்கள் எல்லாம்
வறுமைக் குழிகளுக்குள்
அடித்த சுழிகளுக்கிடையே
செத்தழிந்துகொண்டிருந்தன..

தெருக்களில் பெருகியோடும்
கண்ணீர்த்துளிகளுக்கிடையேயும்
வயிற்றுக்கும் வாழ்க்கைக்கும்
நடுவில் தொங்கிக்கொண்டிருக்கும்
நாட்களுக்குள் புதையுண்டும்
இனத்தின் அடையாளங்கள்
எல்லாமே தொலைந்துபோய்
இனங்காண முடியாதபடி..

ஈழத்துக் கருவறைகளின்
பாடல்களை எல்லாம்
காலம் அடித்துக்கொண்டுபோக
வறட்சிகளின் ஆடைபோர்த்தி
வற்றிக் கிடக்கின்றன
தாலாட்டுக்கள்...

காலப்பாடல்களுக்கெல்லாம்
பாட்டெழுதிய மண்ணை இப்போ
கண்ணீர் எரிப்பதால்
கவிதை வற்ற
ஈழம் அகாலத்தில்
இழவுக்காடாகி
நிழல் சிதைய தனித்து
நெருப்பில் கிடக்கிறது

ஊரின் முகப்பிலே
ஒளியேறி இருந்தாலும்
ஊமையாய் இருக்கும்
உட்காயம்
ஊதி ஊதிப் பெரிதாகிறது..

ஊழ் விளையாடிய
ஈழமுற்றத்தில்
உதிர்ந்து கிடக்கின்றன சருகுகள்
இத்துப்போனாலும்
ஈழமண்ணுக்கே உரமாவோமென்று....

தலைமுறிந்த ஒற்றைப்பனைகளின்
தனிமைகளுடன் குந்தியிருக்கின்றன
இடித்தழிக்கப்பட்ட
கல்லறைகளில் இருந்து
துயருடன் இடம்பெயர்ந்த
ஆன்மாக்கள்..

பூக்கள் தொலைத்த மரங்களையும்
முற்றங்கள் தொலைத்த வீடுகளையும்
தேற்றியபடி வீசும் காற்றிடமிருந்து
தென்றல் தொலைந்து
காலங்கள் ஆண்டுகளாய்
கரைந்து போகிறது....

கரைகளில் நின்று பார்க்கிறேன்
ஈழ நிலவாடிய கடலொடிந்து
தாழம்பூக்களிடையே
தன் முகம்புதைத்துக் கிடக்கிறது...
நீலம்பரவிய அதன் முற்றத்தில்
நிறமிழந்து
முன்பொருகாலம் பெருகி இசைபொழிந்த
பாடல் இழந்து
தலைமுறைகள்
அலைகளின்மேல் விளையாடிய
தடமிழந்து
தன் கோலமழிந்துகிடக்கிறது..

நிலவும் பரிதியும்
மறைந்தொழிந்து விளையாடிய
ஈழ வானம்
தன் எல்லைகள் தொலைந்ததால்
ஈழக்குழந்தைகளின் கண்ணீரில்
கருக்கொண்ட
துயரமுகில்களின் பின்னே
முகம்புதைத்து
மெளனமாய் அழுகிறது...

பிதாமகர்கள்,பீஷ்மர்கள்
கதநாயகர்கள்,கண்ணகிகள் எனக்
கெளரவிக்கப்பட்ட வாய்களால்
துரியோதனர்கள் எனத்
துகிலுரியப்பட்டுக் கிடக்கிறது
கர்ணர்களாய்க் கடைசிவரை
களமாடிய சந்ததி..

இற்றுப்போகிறது ஈழத்தின்
நிமிடங்கள் சொட்டுச்சொட்டாய்..
இனி ஒரு விதி செய்வோமென்று
குற்றுயிராய்க் கிடக்கும்
எம் குழந்தைகளை தூக்கிவிட
நீண்ட கைகளை சில
ஒற்றைகளுக்குள் எழுதிவிடலாம்

வெற்றுப்பேச்சுக்கள் அலங்கரிக்க
வெறுமனே
போலித்தேரில் ஈழம்பூட்டி
வெளிநாடுகளில் பவனிவருகிறது
செத்துப்போனவர்களின் குருதி குடித்து
மெத்தப் பெருத்த
சுயநலப் புரவி...

இழவு வீடான ஈழம் பார்த்து
தலைகுனிந்து
இந்த இரவுஇனி விடியாமலே போகட்டுமென
சாபமிட்டபடி விழித்துப்பார்க்கிறேன்....
ஈழத்தை
மீளமுடியா இருள் வெளிக்குள்
தள்ளிவிட்டு
நன்றாகத்தான் விடிந்திருக்கிறது
எதிர்காலம் எங்களுக்கு 
பெரு வெளிச்சத்துடன்...