Pages

Thursday 25 July 2013

அதுவரைக்கும் சொல்லிக்கொண்டிரு...


நான்
புல்லாங்குழலில் இருந்து கசியும்
ஒரு மெல்லிய இசையாக
உன்னை ரசிக்கிறேன்
நீ
புல்லாங்குழலுள் அடைபட்டு
துளைகளூடு வேளியேறும் காற்றாக்கி
என்னை வதைக்கிறாய்

நான்
பூவிலிருந்து ஒழுகும்
பரவச வாசனையாக
உன்னை நுகர்கிறேன்
நீ
பூக்களை தாங்கி நிற்கும்
ஊமைக் காம்புகளாக்கி
என்னை மறந்துபோகிறாய்

நான்
புத்தகங்களுக்கு நடுவே
பொத்திவைத்த மயிலிறகாக
உன்னை சேகரிக்கிறேன்....
நீ
புத்தகங்களுக்கு உள்ளே
கிழிந்துபோன பக்கங்களாக்கி
என்னை புரட்டிப்போகிறாய்...

நான்
எல்லாவற்றிலும் உன்னை
அழகாக ரசித்துக்கொள்கிறேன்
நீ 
அனைத்திலும் என்னை
அடிமையாக நினைத்துக்கொள்கிறாய்..

நான்
ஓயாத உன் கவனிப்பின்மைகளுக்கு நடுவே
கொடுக்க நிறைய அன்புடன்
காத்திருக்கிறேன்
நீ
பேசாது உன்
வனமங்களுடன்
எடுக்க ஒரு புன்னகையைகூடதர
நேரமின்றி இருக்கிறாய்

நான்
உயிர்பிரிந்தும்
பிரியாத
உன் நிழலாக வருகிறேன்
நீ
அருகிருந்தும்
எனை உணராத
உடலாக
தவிர்க்கிறாய்

நாம்
ஒன்றாய் இருந்தும்
ஒருவர் ஒருவராய்
ஒதுங்கி இருக்கிறோம்..
காலத்தை தின்றேனும்
நமக்கு
போதும் இந்த நாடகம் என்று
பொழுதுரைக்கும் அதுவரை
பொறுத்திருப்பேன்..

ஒடுங்கியும் அகன்றும்
வற்றியும் பெருகியும்
ஓயாமல் ஓடும்
ஆற்றைப்போலவே
விரையும் நம்காலம்
தன்கடலை சேருமுன்னே
நாம்
மீண்டும் ஒருதடவை
மனதால் சந்திப்போம்
காத்திரு..

என் அன்பின் மீது
உன் கூரலகால்
குருதிவடிய
எழுதிச்சென்ற வரிகளெல்லாம்
வலிகளாய் ஊர
உனக்காக உயிர்பிடித்திருப்பேன்
உன் மீதுள்ள பிரியத்தால்
காத்திரு...

காலங்கள் வயதுகளாய்
முதிர்ந்துபோகையில்
எல்லாவற்றையும்
உதாசீனப்படுத்தவைக்கும்
உன் இளமை இலைகள்
ஒரு கனவுபோல
உன்னை தனியே விட்டு 
உதிர்ந்துபோகையில்
எதிர்கொள்ள முடியாத தனிமை
உன்னை எதிர்த்து நிற்கும்...
காத்திரு...

கறுப்பு வெள்ளைகளாய்
உன் கலர்க்கனவுகள்
உடைந்துபோகையிலும்
பசுமையாகவே
என் அன்பின் நினைவுகள்
உன்னைபடர்ந்திருக்க
நாட்கள் தொலைத்திடாத
அந்த நினைவுகளில் நீ
சற்றும் குறையாமல்
இருக்க காண்பாய்
காத்திரு..

உருவங்கள் உதிர்ந்துபோக
பருவங்கள் தொலைத்த
உன் பயணங்களின்
சுமை உணர்ந்து
கால்கள் தள்ளாடும்
கணங்களில்
என் தோள்களின்மேல்
தலைபுதைக்க
தேடிவரும்
உன் ஆன்மாவின்
தலைகோதும் விரல்களாய்
நானிருப்பேன்
காத்திரு..

அதுவரைக்கும்
சொல்லிக்கொண்டிரு
அவரவர் வாழ்க்கை
அவரவர்க்கு..

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

முடித்ததும் நன்று...

வாழ்த்துக்கள்...

Post a Comment